இந்த 64 தொகுதிகளில் திமுக, அதிமுகதான் எப்பவும் ஜெயிக்கும்.. மாற்றமே கிடையாது - அண்ணாமலை பரபர பேச்சு!
சென்னை : தமிழகத்தில் 60 - 64 சட்டமன்றத் தொகுதிகளில் திராவிட கட்சிகளே நிச்சயம் வெற்றி பெறும், அதில் மாற்றமே இருக்காது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
அரசியல் தலைவர்களை உருவாக்கும் பயிற்சி முகாமில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடியின் அரசியல் வளர்ச்சி பற்றி பேசியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் அஸ்திவாரம் பற்றியும் பேசியுள்ள அண்ணாமலை, திராவிடக் கட்சிகளான திமுக அல்லது அதிமுக தமிழகத்தில் 60 முதல் 64 தொகுதிகளில் வெற்றி பெறுவது நிச்சயம் எனத் தெரிவித்துள்ளார்.

அசாதாரண அரசியல் தலைவர்கள்
அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் காமராஜர், எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட அரசியல் ஜாம்பவான்கள் இருந்துள்ளனர். இவர்கள் அந்தந்த காலகட்டத்தில் அவர்களுக்கே உரிய தலைமைத்துவத்தில் வெற்றி கண்டுள்ளனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா ஆகிய அரசியல் தலைவர்கள் அசாதாரணமான சூழ்நிலையில், அரசியலுக்குள் நுழைந்து தங்களை, உருவாக்கி, செதுக்கி, 10 ஆண்டுகாலத்தில் உச்சகட்ட நிலையை அடைந்தவர்கள்.

பாஜக கோட்டையாக மாற்றினார்
குஜராத்தில் நரேந்திர மோடி, 1985ல் பாஜகவின் கட்சிப் பொறுப்பிற்கு வந்த போது பாஜகவிற்கு குஜராத்தில் 2.5% வாக்குகளே இருந்தது. 17 ஆண்டுகள் முழுநேர அரசியல்வாதியாக செயல்பட்டு, உச்சகட்ட நிலையை அடைந்தார் மோடி. காங்கிரஸ் கோட்டையாக இருந்த குஜராத்தை பாஜகவின் கோட்டையாக மாற்றினார். தற்போது நாடு முழுவதும் பாஜகவிற்கு 40% வாக்குகள் இருக்கிறது.

திமுக அல்லது அதிமுக தான்
தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இதில் 60 முதல் 64 தொகுதிகளில் எப்போதுமே மாற்றம் இருக்காது. அதில் திமுக வெற்றி பெறும் அல்லது அதிமுக வெற்றி பெறும். ஒருவேளை நீங்கள் திராவிட கட்சிகளில் சேர்ந்து பொறுப்புகளை வகித்து அந்த 64 தொகுதிகளில் ஒன்றில் நீங்கள் போட்டியிடும் சூழல் வந்தால் நீங்கள் வெற்றி பெறுவது உறுதி." எனத் தெரிவித்தார்.

நல்லா யோசித்துவிட்டு அரசியலுக்கு வாங்க
மேலும் பேசிய அண்ணாமலை, "ஒரு தலைமையின் மிகப்பெரிய வேலை, மற்றொரு தலைமையை உருவாக்குவதுதான். சரியாக முடிவெடுக்காத பல அரசியல்வாதிகள் அரசியலில் தோல்வியைச் சந்திக்கின்றனர். பல அரசியல்வாதிகள் தங்கள் முகத்தை திரை கொண்டு மறைத்து விடுகின்றனர். வெளிப்படைத் தன்மையுடன் இருந்தால்தான் அரசியலில் வெற்றி பெறமுடியும். அரசியலுக்கு வருவதற்கு முன்பு பல முறை யோசித்துவிட்டு வந்தால் தான் அரசியலில் நிலைக்க முடியும்.

தவறு செய்தால் மக்கள் ஏற்கமாட்டார்கள்
அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்துச் செல்வதே, அரசியல் தலைவர்களின் முதல் பண்பாக இருக்க வேண்டும். விருப்பு வெறுப்பு இல்லாமல், அரசியலில் பயணிக்க வேண்டும். நல்ல தலைவர்களால் தான் கட்சியை வளர்க்க முடியும். சாதாரண நபர்கள் செய்யும் குற்றத்தை மக்கள் பெரிதுபடுத்த மாட்டார்கள். ஆனால், தலைவர்கள், அரசியலில் இருப்பவர்கள் தவறு செய்தால் பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். " எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications