மனதை பக்குவப்படுத்த! படிக்க சிந்திக்க! சிறைவாசிகளுக்கு புத்தகங்களை பரிசளித்த கனிமொழி!
சென்னை: சிறைவாசிகள் படிக்கவும் சிந்திக்கவும் ஏற்ற வகையில் அவர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை பரிசாக வழங்கியிருக்கிறார் கனிமொழி எம்.பி.
சிறைவாசிகளின் மனதை பக்குவப்படுத்தி பகுத்தறிவை வளர்க்கும் வகையிலான தலைப்புகளை கொண்ட புத்தகங்களை தேர்ந்தெடுத்து கனிமொழி கொடுத்திருக்கிறார்.
புத்தகம் வாசிப்பு என்பது ஒரு மனிதனின் அறிவையும், மனதையும் செழுமைப்படுத்தும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
திருக்குறளை படித்தால் புரியும்.. காவிக்கும் திருவள்ளுவருக்கும் சம்பந்தமில்லை.. கனிமொழி 'நச்' பதில்!
சென்னை புத்தகக் காட்சி
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் 46வது புத்தகக் காட்சிக்கு சென்றிருந்த கனிமொழி எம்.பி. புது தலைப்புகளில் வெளிவந்த புத்தகங்களை வாங்கியதோடு, தாம் ஏற்கனவே படித்து முடித்த நூற்றுக்கணக்கான புத்தகங்களை சிறைவாசிகள் படிப்பதற்காக சிறைத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். சென்னை புத்தக காட்சி திடலில் சிறைவாசிகளுக்கு புத்தக தானம் செய்வீர் என்ற பெயர் பலகையோடு தனி அரங்கு அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு தலைப்புகளில்
கற்போம் பெரியாரியம், பெரியார் இன்றும் என்றும், கருணாநிதியின் எழுத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளிலான புத்தகங்களை சிறைவாசிகளுக்கு கொடுத்தார் கனிமொழி. அதேபோல் திருக்குறள் மற்றும் அதற்கான தெளிவுரை அடங்கிய புத்தகங்களையும் கனிமொழி கொடுத்தார். எங்கு ஒரு நூலகம் திறக்கப்படுகிறதோ அங்கு ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என்று விவேகானந்தர் கூறியதற்கேற்ப புத்தகங்களின் மூலம் சிறைவாசிகளை திருத்துவதற்கான முயற்சிகளில் சிறைத்துறை ஈடுபட்டுள்ளது.
ரசீது ஒப்படைப்பு
கனிமொழியை போலவே இன்னும் பல அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் சிறைவாசிகளுக்காக சிறைத்துறை அதிகாரிகளிடம் புத்தகங்களை கொடையாக கொடுத்தனர். 46வது சென்னை புத்தக காட்சியில் இதுவரை 500க்கும் மேற்பட்ட புத்தகங்களை சிறைத்துறை அதிகாரிகள் தானமாக பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தாங்கள் நன்கொடையாக பெற்றுக் கொள்ளும் புத்தகங்கள் அனைத்துக்கும் ரசீது ஒன்றும் வழங்குகிறார்கள் சிறைத்துறை அதிகாரிகள்.
பிரித்துக் கொடுக்கப்படும்
சென்னை புத்தககாட்சியில் சேகரிக்கப்பட்ட புத்தகங்களை தமிழகத்தில் உள்ள சிறைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே புத்தக காட்சியில் நடிகர் ராஜேஷை எதேச்சையாக பார்த்த கனிமொழி அவரிடம் சில நிமிடங்கள் உரையாடி உடல்நலம் பற்றி கேட்டறிந்தார்.