ஜூன் 26இல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. உள்ளாட்சி தேர்தல் பற்றி ஆலோசனை? துரைமுருகன் அறிவிப்பு
சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் ஜூன் 26ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 2016ஆம் ஆண்டு நடத்தவேண்டிய உள்ளாட்சி தேர்தல் உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து 3 ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு 2019இல் நடத்தப்பட்டது அதிலும்கூட பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் 9 மாவட்ட ஊரகப் பகுதிகளுக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை.

இதுதொடர்பான வழக்கில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள வரும் ஜூன் 26ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 26 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது.
செப்டம்பர் 15ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இது குறித்து இதில் விவாதிக்கப்படவுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்முறையாக அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications