ஸ்டாலின் தலைமையில் மே 3ல் நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. தேர்தல் பணிகளை ஆரம்பிக்கும் திமுக!
சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் மே 3ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் மே 3ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் இருக்கிறது. இருப்பினும், இப்போதே தேர்தல் குறித்த நடவடிக்கைகளை அனைத்துக் கட்சிகளும் தொடங்கிவிட்டன. கூட்டணி, பிரச்சார வியூகம் என ஒவ்வொரு கட்சியும் அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலை மனதில் வைத்தே காய்களை நகர்த்தி வருகிறது.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
இதற்கிடையே திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் மே 3ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குறித்த அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மே 3ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மு க ஸ்டாலின் தலைமையில்
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வரும் மே 3ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறும். மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
என்ன திட்டம்
இதில் சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது. மக்களுக்காக திமுக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்வது குறித்து ஆலோசனை வழங்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி நீக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாகவும் விவாதிக்கப்படலாம். தேர்தல் நெருங்கி வருவதால் சர்ச்சைக்குரிய பேச்சுகளைத் தவிர்த்து. அரசுத் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல ஆலோசனைகள் வழங்கப்படும் என தெரிகிறது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல்
அடுத்தாண்டு தமிழ்நாட்டில் பல முனை போட்டி இருக்கும் என்றே தெரிகிறது. ஒரு பக்கம் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்துவிட்டது. மறுபுறம் விஜய்யும் தனது தலைமையில் வலுவான கூட்டணியை அமைப்பார் என தெரிகிறது. இது தவிர நாம் தமிழர் கட்சியின் சீமானும் மாநிலத்தில் தனித்து போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதால் பல முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications