திமுக தேர்தல் அறிக்கையில் இலவச கல்வி முதல் செல்போன் வரை எகிறும் எதிர்பார்ப்பு
திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு படு பரபரப்பாக களத்தில் இறங்கிவிட்டது. சட்டசபை தேர்தலில் மக்களை கவரும் வகையிலான வாக்குறுதிகள் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை: சட்டசபை தேர்தலுக்காக தேர்தல் அறிக்கை தயாரிக்க திமுகவில் பரபரப்பாக வேலைகளை ஆரம்பித்து விட்டார்கள். இளைய தலைமுறையினர், பெண்கள், மூத்த குடிமக்களையும் கவரும் வகையில் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேர்தல் நேரங்களில் கட்சியின் கதாநாயகனே தேர்தல் அறிக்கைதான். மக்களுக்கு வாக்குறுதிகளாக அள்ளி வீசுவார்கள் அரசியல் கட்சியினர். இதில் முக்கியமாக பெண்களையும், இளைய தலைமுறையினரையும் கவரும் அம்சங்கள் இடம் பெற்றிருந்தால் போதும் பாதி வெற்றி கிடைத்தது போலத்தான். மூத்த குடிமக்களும் தங்களுக்கு அரசியல்வாதிகள் என்ன செய்யப்போகிறார்கள் என்ற எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர். அவர்களையும் கவரும் வகையில் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் இடம் பெறுவது அவசியம்.
திமுக பத்தாண்டு காலமாக ஆட்சிக்கட்டிலில் அமர முடியவில்லை. எதிர்கட்சியாகவே இருக்கும் திமுக இந்த முறையாவது ஆளுங்கட்சியாக அமரவேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகின்றனர். பிரசாந்த் கிஷோர் டீம் மூலம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் திமுக இந்த முறை வெற்றிவாகை சூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிகப்பெரியளவிலான வெற்றியைப் பெறவேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தல் 2020
தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் சட்டசபை பொதுத்தேர்தல் நடக்க இருக்கிறது. மறைந்த ஆளுமைமிக்க தலைவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் நடக்கும் முதல் பொதுதேர்தல். தமிழக அரசியலின் அடுத்த கட்ட நகர்வை, சட்டசபை பொது தேர்தல் தொடங்கி வைக்க இருக்கிறது. எனவே இந்த தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகளான அதிமுகவும் திமுகவும் படு பரபரப்பாக தயாராகி வருகின்றன.
திமுகவின் வாக்குறுதிகள்
தேர்தலில் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு தேர்தல் அறிக்கை முக்கிய பங்கு வகிக்கிறது. மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதியாக பார்க்கப்படும் தேர்தல் அறிக்கை கவர்ச்சிகரமாக இருப்பதோடு கொள்கைகளை பிரதிபலிப்பதாகவும், மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதாகவும் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. திமுகவின் தேர்தல் அறிக்கை குழு தற்போது பரபரப்பாக பணிகளை ஆரம்பித்துள்ள நிலையில் மக்களை கவரும் வகையிலான வாக்குறுதிகள் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
8 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழு
சட்டசபை தேர்தலின் கதாநாயகனாக கருதப்படும் தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்கு திமுகவில் இதற்காக 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், மகளிர் அணி செயலாளர் கனிமொழி, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் பேராசிரியர் அ.ராமசாமி ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
தேர்தல் அறிக்கை குழு கூட்டம்
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்றார்.
மக்களை கவரும் அறிவிப்புகள்
தமிழக சட்டசபை தேர்தல் வந்தாலே என்னென்ன இலவச அறிவிப்புகள் வெளியாகும் என்று பொதுவாகவே எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும். 1989ஆம் ஆண்டு மாணவர்களை கவரும் வகையில் இலவச முட்டை வழங்கும் திட்டத்தை அறிவித்தார் கருணாநிதி. தொடர்ந்து அதிமுக திமுக என மாறி மாறி தமிழகத்தை கட்சிகள் ஆண்டுள்ளனர். வாக்காளர்களை கவர இலவச கலர் டிவி தொடங்கி பல இலவச அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலிலும் திமுக சார்பில் என்னென்ன இலவச அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இலவச கல்வி
கடந்த 2011, 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த பேன், மிக்சி, கிரைண்டர், எலக்ட்ரிக் ஸ்டவ், தாலிக்கு தங்கம். மாணவர்களுக்கு லேப்டாப், ஓய்வூதியம் 1000 ரூபாய் போன்றவை மக்களை அதிகம் கவர்ந்தது. இரண்டு முறையும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. வரும் சட்டசபை தேர்தலில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை கவனிக்கும் வகையில் இலவச செல்போன் மாத மாதம் டாப் அப், இலவச கல்வி போன்றவை வழங்கப்படும் என்று அறிவிக்கும் கட்சிக்கும் வாக்குகள் அதிகம் கிடைக்கும்.
என்ன செய்யப்போகிறது திமுக
வாக்காளர்களை கவரும் வகையில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சங்கள் இடம்பெறுமா? மாணவர்கள், இளைய தலைமுறையினர், பெண்கள், மூத்த குடிமக்களை கவரும் வகையில் தேர்தல் அறிக்கையை தயாரித்தால் மட்டுமே ஆட்சிக்கட்டிலில் அமரும் வாய்ப்பை திமுகவிற்கு வழங்குவார்கள் என்பது நிச்சயம்.