பாவம்... கள நிலவரம் தெரியாமல் திருதிருவென முழிக்கிறார் அமைச்சர் காமராஜ்... எ.வ.வேலு சாடல்..!
சென்னை: காவிரி டெல்டாவில் பிறந்தும் கள நிலவரம் தெரியாமல் திருதிருவென முழிக்கிறார் அமைச்சர் காமராஜ் என திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சாடியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து திரித்து பேசுவதை அமைச்சர் காமராஜ் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
உலகத்தரம் வாய்ந்த அண்ணா பல்கலைக்கழத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை – உயர்கல்வி அமைச்சர்
நெல் கொள்முதல்
காவிரி டெல்டா பகுதிகள் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் உரிய காலத்தில் - அதாவது அக்டோபர் 1-ஆம் தேதியே நேரடி கொள்முதல் நிலையங்களை அரசு திறக்கவில்லை என்பது அக்மார்க் உண்மை. விவசாயிகளை நேரடியாகச் சந்தித்தால் அமைச்சரின் முகத்திற்கு எதிரே அதை அவர்கள் சொல்வார்கள். போதிய நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டில் எங்கேயிருந்து அரசியல் காழ்ப்புணர்ச்சி வந்தது?
காழ்ப்புணர்ச்சி
திமுக தலைவரின் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என்று கூறும் அமைச்சர்தான் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் கோட்டையில் அமர்ந்திருக்கிறார். ஆகவே எங்கள் கழகத் தலைவர் சொன்ன குற்றச்சாட்டு நூற்றுக்கு நூறு உண்மை. எனவே, கள நிலவரமே தெரியாமல் அமைச்சராகி விட்டோம் என்பதற்காக எங்கள் தலைவருக்கு பதிலறிக்கை என்ற பெயரில் "பொய்யும், புரட்டும்" வெளியிட்டு விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளைக் கொச்சைப்படுத்துவது மகா கேவலமான போக்கு!
ஆதாரமின்றி
எங்கள் கழகத் தலைவர் ஆதாரமின்றி எந்தக் குற்றச்சாட்டையும் சொல்லமாட்டார் என்பதற்கு நெல் கொள்முதல் குறித்து உயர்நீதிமன்றம் விடுத்துள்ள கண்டனமும், அமைச்சரின் அறிக்கையில் ஒப்புக்கொண்டுள்ள உண்மைகளுமே அத்தாட்சியாக இருக்கிறது. தனது சுகத்தை நினைத்துக் கொண்டு விவசாயிகளின் துயரத்தை அவமானப்படுத்தக் கூடாது என்று அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.
அமைச்சர் மீது சாடல்
தங்கள் நெல்லை விற்க முடியாமல் - விற்ற நெல்லுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் தடுமாறுகிறார்கள். கடந்த திங்கட்கிழமை அன்று திருவாரூருக்கு நான் சென்ற போது விவசாயிகள் படும் துயரை கண்கூடாகப் பார்க்க நேர்ந்தது. விவசாயிகளின் மனதைப் புண்படுத்தும் விதத்தில் "விவசாயிகள் எல்லாம் மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் இருக்கிறார்கள்" என்று கோயபல்ஸ் பிரச்சாரத்தில் அமைச்சர் காமராஜ் தயவு செய்து ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.