சொல் அல்ல "செயல்".. வாக்குறுதி 494ல் சொன்னதை செய்த ஆளும் திமுக.. நன்றி சொன்ன அற்புதம் அம்மாள்!
சென்னை: பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதன் மூலம் திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளதாக திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video
பெரும் போராட்டம் மற்றும் எதிர்பார்ப்பிற்கு இடையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆளுநர் இந்த தீர்மானத்தில் மிக அதிக காலம் எடுத்ததாக கூறி கடுமையாக விமர்சனம் வைத்த உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது. 31 வருடமாக சிறையில் இருந்த பேரறிவாளன் இன்று விடுதலை ஆகியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்வதற்காக உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரம் 142-வது பிரிவைச் செயல்படுத்தி உள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளனர்.
விடுதலை காற்றை சுவாசித்த பேரறிவாளன்... பறை மேளம் இசைத்து கொண்டாட்டம்
ஸ்டாலினுக்கு நன்றி
இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிக்க நன்றி என்று பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள் தெரிவித்துள்ளார். 31 ஆண்டு கால போராட்டம் பற்றி எல்லோருக்கும் தெரியும். 31 ஆண்டுகாலம் சிறையில் இருந்த வலி, வேதனை பற்றி தெரியும். முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி. வாதிட்ட தமிழ்நாடு அரசுக்கு நன்றி. பேரறிவாளன் விடுதலைக்காக குரல் கொடுத்த தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள் என்று அற்புதம்மாள் என்று குறிப்பிட்டுள்ளார்.
பேரறிவாளன் நன்றி
இன்னொரு பக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைவரையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பேன்: பேரறிவாளன் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில்தான் திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளதாக திமுகவினர் இந்த தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர். தேர்தல் அறிக்கையில் திமுக சார்பாக 7 பேர் விடுதலை குறித்து வாக்குறுதி கொடுத்தது. இதற்காக அனைத்து முயற்சிகளையும் எடுப்போம் என்று கூறியது.
சட்ட போராட்டம்
அதன்படியே அரசு தரப்பில் ராகேஷ் திவேதி போன்ற மூத்த வழக்கறிஞர்கள் வழக்கில் ஆஜர் ஆனார்கள். இவர்கள் வைத்த வாதம்தான் வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியது. சட்ட நுணுக்கங்களை குறிப்பிட்டு இதில் மத்திய அரசு முடிவு எடுக்க அதிகாரமே இல்லை என்றனர். அதேபோல் ஆளுநர் என்பவர் அமைச்சரவை முடிவிற்கு கட்டுப்பட்டவர் என்றும் வாதம் வைத்தனர். இந்த வாதங்கள் வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியது.
தேர்தல் அறிக்கை
திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதி 494ல், ராஜீவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து சிறையில் வாடிடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை பெற்றிட அனைத்து முயற்சிகளையும் கழக அரசு முழு முனைப்புடன் மேற்கொள்ளும், என்று குறிப்பிட்டு இருந்தது. அதன்படியே தற்போது பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று திமுகவினர் இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
திமுக என்ன சொன்னது?
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் அளித்த பேட்டியில், பேரறிவாளன் விடுதலை- வரலாற்றில் இடம்பெறத்தக்க தீர்ப்பு. சிறையில் இருந்த பேரறிவாளன், சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவர் சட்ட உரிமையின் அடிப்படையில் பரோல் கேட்டார். மனிதாபிமான அடிப்படையில் அரசு அவருக்கு அந்த உரிமையை 10 முறை வழங்கியது. பரோலில் இருந்தபடியே தனது சட்டப்போராட்டத்தை நடத்தி முதலில் பிணையில் வந்தார். இப்போது விடுதலை ஆகி இருக்கிறார். மற்ற 6 பேரை விடுதலை செய்வது பற்றி சட்ட ஆளுநர்களுடன் ஆலோசனை செய்து முடிவு எடுப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.