ஸ்டாலின் ரெடியாமே.. "முக்கிய" அறிவிப்பு வெளியாகிறதா?.. தயாராகும் லிஸ்ட்.. பரபரக்கும் திமுக
விரைவில் பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்
சென்னை: விரைவில் பட்ஜெட் கூட உள்ள நிலையில், கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக விரைவில் அறிவிப்பு வர உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.. இதையடுத்து தமிழ்நாட்டு மக்களிடம் ஒருவித எதிர்பார்ப்பு தொற்றி கொண்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு, திமுக அரசுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது.. அன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, லிஸ்ட் போட்டு விலாவரியாக திமுகவை குறை சொல்லி இருந்தார்:
"திமுக பெரும்பான்மை இடங்களிலே வெற்றி பெற்று, நான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், முதல் வேலையே நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று ஸ்டாலின் சொல்லியிருந்தார்.
விரைவில் நகைக்கடன் தள்ளுபடி.. முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர் ஐ பெரியசாமி.. மக்கள் மகிழ்ச்சி
அறிவிப்புகள்
அதனையே தேர்தல் அறிக்கையிலும் சொன்னார்கள்.. ஆனால், தேர்தல் முடிந்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை... மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன் ரத்து செய்யப்படும், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும், பெட்ரோல் - டீசல் விலை குறைக்கப்படும், 5 சவரனுக்கு குறைவாக வங்கியில் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் சொன்ன அறிவிப்புகள் எதையுமே இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை" என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார்.
பட்ஜெட்
ஆட்சி ஆரம்பித்து வெறும் 75 நாட்களில் இதெல்லாம் நிறைவேற்ற முடியாது என்பது தெரியும் என்றாலும், அடுத்தடுத்து தேர்தல்கள் வர உள்ள நிலையில், மக்களின் எதிர்பார்ப்பாகவும் இது மாறக்கூடும் என்பதில் சந்தேகமில்லை.. அந்தவகையில், விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பமாக உள்ளது.. உள்ளாட்சி தேர்தல் தொடங்க உள்ள நிலையில், அநேகமாக இந்த கூட்டத்தொடரிலேயே முதல்வர் ஸ்டாலின் மிக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
நகைகடன் தள்ளுபடி
அந்த வகையில் கடந்த வாரம் ஒரு தகவல் கசிந்தது.. மிக முக்கியமான 3 அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.. அதாவது, பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குவது தொடர்பான அறிவிப்பு, 5 பவுன் நகை கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு, மாணவர்கள் கல்விக்கடன் போன்றவைகளில் அறிவிப்புகள் வெளியாகலாம் என்றார்கள்..
அமைச்சர்கள்
அதுமட்டுமல்ல, இந்த 3 அறிவிப்புகள் தொடர்பான துறை அமைச்சர்கள் பிடிஆர், ஐ பெரியசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி போன்றோர் இதற்கான பணிகளையும் கவனித்து வருவதாகவும் சொல்லப்பட்டது. இப்போது ஒரு செய்தி யூகத்தின் அடிப்படையில் வெளியாகி வருகிறது..
அறிவிப்பு
அதாவது அந்த 3 அறிவிப்புகளில் ஒன்றான, கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக அறிவிப்பு விரைவில் வர உள்ளதாம்.. 5 பவுன் வரை பெற்ற நகை கடன்கள் தள்ளுபடியை அறிவிக்க திமுக அரசு தயாராகி வருவதாகவும், இதற்கான பட்டியல் ஒன்றும் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.. 5 சவரனுக்கு கூடுதலாக நகைகள் வைத்திருப்பவர்களுக்கும் 5 பவுனாக கணக்கிட்டு தள்ளுபடி செய்யப்படலாம் என்கிறார்கள்.. அதாவது, நகை பெற்றவரோ, அவரை சார்ந்த ரத்த உறவுகள் அரசு வேலையில் இருந்தால் அவர்களுக்கு இந்த சலுகை கிடையாதாம்.
பரபரப்பு
இது குறித்த உறுதியான மற்றும் இறுதியான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.. அதேசமயம், 5 பவுன் வரை நகை கடன் தள்ளுபடியை திமுக அறிவிக்க தயாராகி கொண்டிருக்கிறது என்ற குட் நியூஸ் மட்டும் பரபரத்து வலம் வருகிறது.. ஒருவேளை இந்த அறிவிப்பை திமுக செயல்படுத்தினால், நிச்சயம் உள்ளாட்சி தேர்தலுக்கு பேருதவியாக இருக்கும் என்பதுடன் அதிமுகவின் புகார்களையும் வாயடைத்தது போல இருக்கும்.
பிடிஆர்
ஆனால், என்னதான் சலுகை அறிவிப்புகள் வெளியானாலும், கடனில் சிக்கி உள்ள தமிழகத்தை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எப்படி தூக்கி நிறுத்துவார்? கடனை எப்படி சமாளிக்க போகிறார்? மாநில அரசின் வரி வருவாயை பெருக்கும் திட்டங்களுக்கு எந்த மாதிரியான முக்கியத்துவம் கொடுப்பார்? உற்பத்தியில் எந்த அளவுக்கு அதிகம் கவனம் செலுத்துவார்? போன்ற சந்தேகங்களும் நமக்குள் எழத்தான் செய்கின்றன.. என்னதான் நடக்க போகிறது... பார்ப்போம்..!