திமுக அரசை நடத்துவதே அதிமுகவிலிருந்து சென்ற 8 பேர்தான்.. கொளுத்தி போடும் ஜெயக்குமார்
சென்னை: அதிமுகவில் இருந்து சென்ற 8 பேர்தான் தமிழகத்தை ஆட்சி செய்கிறார்கள் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார். திமுகவில் உள்ளவர்கள் சிந்தித்துக்கொண்டுள்ளார்கள்.உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை என்று சிந்தித்து வருகிறார்கள். கடைக்கோடி தொண்டனுக்கும் கூட அந்த கட்சியில் எந்த மரியாதையும் இல்லை என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஜெயலலிதா நினைவிடத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார், அதிமுக தொண்டர்கள் இன்றைக்கு வந்து நமது அம்மாவிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். இந்த எழுச்சியைப் பார்க்கும்போது நம்முடைய அம்மாவைப் பொறுத்தவரையில் இன்றும் மறையவில்லை. நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற உணர்வுதான் ஒவ்வொரு கழக தொண்டர்களின் மனதில் இருக்கின்றது.
புரட்சித்தலைவரும் சரி,புரட்சித்தலைவி அம்மாவும் சரி, என்றைக்குமே ஒரு அழிவில்லாத வாழ்க்கையைப் பெற்று,தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் வாழ்க்கின்ற தமிழர்கள் அத்தனைப்பேரின் நெஞ்சங்களிலே நீக்கமற வாழ்ந்து வருகின்ற தலைவர்கள் புரட்சித்தலைவரும்,புரட்சித்தலைவி அம்மாவும்தான் என்று கூறினார்.
Exclusive ஓபிஎஸ்ஸை சேர்க்க ரெடி!? ஈபிஎஸ் அணிக்குள் குழப்பமா? இதான் முடிவு.. சொல்கிறார் ஜெயக்குமார்!
நான்கு அணிகள்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று சொன்னீர்கள்.ஆனால் தற்போது நான்கு அணிகளாகப் பிரிந்து அஞ்சலி செலுத்தும் நிலை உள்ளதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். பிரிவும் இல்லை. பிளவும் இல்லை. கட்சியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சிலபேர் நீக்கப்பட்டுள்ளார்கள். 66 சட்டசபை உறுப்பினர்களில் 62 சட்டசபை உறுப்பினர்கள் ஒன்றுபட்ட கழகத்தில்தான் இன்றைக்கும் இருக்கிறார்கள். தலைமைக்கழக நிர்வாகிகள் 75 பேரும் கழகத்தில்தான் இருக்கிறார்கள். மாவட் செயலாளர்கள் 75 பேரும் இன்றைக்குக் கழகத்தில்தான் உள்ளார்கள். அப்படி எப்படிப் பிரிவு என்று சொல்கிறீர்கள்.
அணிகள் அல்ல பிணிகள்
ஒருசிலர் நீக்கப்பட்டதாலே,கடல் இருக்கின்றது அதில் சிறிய டம்ளரில் தண்ணீர் எடுத்துவிட்டால் கடலில் தண்ணீர் குறைந்துவிடுமா. சமுத்திரத்தில் நீர் என்றைக்குமே வற்றாது. சமுத்திரத்தைப்போலக் கழகம் இன்றைக்குப் பறந்து விரிந்து இன்றைக்குப் புரட்சித்தலைவர் சொன்னதுபோல,அம்மா சொன்னதுபோல ஆலவிருட்சமாக இன்றைக்கு எல்லோருக்கும் நிலம் தரும் மரமாக இருக்கின்றது. சிலபேர் நீக்கப்பட்டுள்ளார்கள். அவர்களைப் பொதுக்குழு நீக்கியுள்ளது. கட்சி விரோத நடவடிக்கையின் காரணமாக நீக்கப்பட்டுள்ளார்கள். நீக்கப்பட்டவர்கள் ஒரு நாலுபேரை அழைத்துவந்துவிட்டு அவர்கள் இங்கு அஞ்சலி செலுத்துகிறார்கள் என்றால் அதனை எப்படி ஒரு சக்தியாக எடுத்துக்கொள்ள முடியும். அதனால் பிரிவும் இல்லை,பிளவும் இல்லை. அவர்கள் அணிகள் கிடையாது.பிணிகள்.
இடைக்கால பொதுச்செயலாளர்
ஜி20 மாநாட்டுத் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள எதிர்க்கட்சித்தலைவரை இடைக்கால பொதுச்செயலாளர் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதே.மத்திய அரசும்,பாஜாகவும் அவரை இடைக்கால பொதுச்செயலாளர் என்று ஏற்றுக்கொண்டுள்ளதா என்ற செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், உலகத்திற்கே தெரியும்,ஊருக்கே தெரியும். இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் என்று. அந்த அடிப்படையில் மத்திய அரசைப் பொறுத்தவரையில் அடுத்த ஆண்டு ஜி20 மாநாட்டை இந்தியாவில் நடத்த இருக்கின்ற சூழ்நிலையிலே,இந்தியாவில் பல பகுதிகளில் கூட்டங்கள் நடக்கவுள்ள சூழ்நிலையிலே அகில இந்திய ரீதியில் தலைவர்களை அழைத்துள்ளார்கள். அந்த அடிப்படையிலே கழக இடைக்கால பொதுச்செயலாளரை அழைத்துள்ளார்கள். இது சட்டப்படியான விஷயம்தான்.
பாஜகவின் ஆதரவு
பாஜகாவின் ஆதரவு எடப்பாடியாருக்குதான் என்று எடுத்துக்கொள்ளலாமா எனறு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், மத்திய அரசு அழைப்பதற்கும்,பாஜாகாவுக்கு எப்படி சம்பந்தபடுத்த முடியும். கட்சி வேறு.ஆட்சி வேறு இல்லையா. பாஜக அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி அதில் அழைக்கப்பட்டிருந்தால் நீங்கள் சொல்லும் கருத்தை ஏற்றுக்கொள்ளாம். இந்த கூட்டத்தை மத்திய அரசுதானே கூட்டியுள்ளது. நீங்கள் இட்டுக் கட்டி முட்டுக் கொடுக்கிறீர்கள். ஏற்கனவே எடப்பாடியார் தெளிவுப்படுத்தியுள்ளார். சீர்காழி கூட்டத்திலும் சரி,நாமக்கல் கூட்டத்திலும் சரி,அது ஒரு தேசிய கட்சி.அவர்களுக்கு என்று சித்தாந்தம்,கொள்கைகள் இருக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரையில் நாங்கள் மிகப்பெரிய இயக்கம். எங்களுக்குச் சித்தாந்தம்,கொள்கை என்பது வேறு. எனவே இதனையும்,அதனையும் ஒன்றுசேர்க்ககூடாது. அவர்கள் வேலையை அவர்கள் செய்கிறார்கள்.எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம். இடைக்கால பொதுச்செயலாளர் என்பது பொதுக்குழுவால் அங்கீகாரப்பட்டு கட்சியால் ஏற்றுக்கொண்ட நிலையிலே அதன் அடிப்படையில் மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
தேர்தல் கூட்டணி
நான்கு அணிகளாகப் பிரிந்து உள்ளீர்களே.அந்த எண்ணிக்கை குறையுமா,அதிகரிக்குமா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலறித்த ஜெயக்குமார், ஏற்கனவே இடைக்கால பொதுச்செயலாளர் தெளிவுபடுத்திவிட்டார்.அதனைத்தான் நானும் சொல்கிறேன். அவர் என்ன தெளிவுப்படுத்தினார்.எந்த காலத்திலும் அவர்களுடன் தேர்தல் கூட்டணி கிடையாது. எந்த காலத்திலேயும் அவர்களை இணைத்துக்கொள்ளும் சூழ்நிலை கிடையாது. டிடிவி சொல்கிறார். நான் வர மாட்டேன் என்கிறார். ரொம்ப நல்லது. மீதிப் பேரும் அதேபோல போய்விட்டால் நல்லது.
மெகா கூட்டணி
எடப்பாடியார் மெகா கூட்டணி என்று கூறியுள்ளார்.திமுகவில் உள்ள கட்சிகள் இங்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளதா
என்று கேட்டனர், அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், திமுக என்ன நிலைமை இன்றைக்கு ,கட்சிக்குள் குமுறல் எழுந்துள்ளது. உள்ள குமுறல். நீறு பூத்த நெருப்பு. அதுபோல புகைந்துகொண்டுள்ளது. அதன் வெளிப்பாடுதான் முதலில் ஒரு பூனைக்குட்டி வெளியே வந்துள்ளது. ஆர்.எஸ்.பாரதி வந்துள்ளார். அவர் என்ன சொல்கிறார். உழைப்பவருக்கு மரியாதை இல்லை. உழைப்பவர்களுக்குப் பதவி இல்லை. எந்த மரியாதையும் இல்லை. நேற்று வந்தவர்களுக்கு எல்லாம் பதவி அளிக்கிறார்கள். சொல்லாமல் சொல்கிறார். இது ஒரு கட்சியாக என்று சொல்கிறார். முதல் நபராக அந்த கட்சியில் குரல் கொடுத்துள்ளார். அடுத்தடுத்து நிறையபேர் வருவார்கள். அந்த அளவுக்கு அந்த கட்சியின் நிலைமை உள்ளது.
ஸ்டாலின் கவலை
முதல்வர் ஸ்டாலினைப் பொறுத்தவரையில் அவருக்குக் கட்சி குறித்து கவலையில்லை. ஆட்சி குறித்து கவலையில்லை. அவருடைய மகனுக்கு முடிசூட்டவேண்டும். அந்த கவலைதான் அவருக்கு. உதயநிதிக்கு முடிசூட்ட வேண்டும் என்ற கவலைதான் அவருக்கு இருக்கின்றதே தவிர வேறு ஒன்றும் இல்லை. எடப்பாடியார் தெரிவித்தது போல யார் இன்றைக்கு ஆட்சி செய்துவருகிறார்கள். முதலமைச்சரா ஆட்சி செய்கிறார். இல்லை ஸ்டாலினா ஆட்சி செய்கிறார். இல்லை..அப்படி என்றால் யார் ஆட்சி செய்கிறார்கள். இங்கிருந்து சென்ற 8 பேர்தான் ஆட்சி செய்கிறார்கள். நேற்றே ஸ்டாலின் சொல்லிவிட்டரே. எனக்கு அறிவு எல்லாம் கிடையாது என்று சொல்லிவிட்டாரே. சேகர்பாபு போன்ற பாபுகாரர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் என்னை வழிநடத்துகிறார்கள். அவர்களை வைத்துத்தான் வண்டி ஒட்டுகிறேன் என்று சொல்கிறார். ஒரு இயலாமையை அவரே வெளிபடுத்துகிறாரா இல்லையா. அப்படி என்றால் கட்சியும்,ஆட்சியும் அவர் கையில் இல்லை. அந்த கூட்டணியில் பல கட்சிகள் முரண்பாட்டுடன் இருக்கின்றது.
கூட்டணியில் முரண்பாடு
கம்யூனிட்ஸ்டுகள் முரண்பாட்டுடன் உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு திமுகவுக்கும் முரண்பாடு உள்ளது. விடுதலைசிறுத்தைகளை சேர்ந்த சென்னையில் உள்ள கவுன்சிலரை திமுக வட்ட செயலாளர் சென்று மிரட்டுகிறார்.இது தொடர்பாகக் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற உள்ள குமுறல் வெடித்துவருகிறது. கண்டிப்பாகத் தேர்தல் நெருங்கும்போது வெளிப்படும். இப்போது 11கட்சி என்கிறார்கள் இல்லையா. கட்டெரும்பு சிற்றெறும்பான கட்சியாக மாறும். அது கண்டிப்பாக நடக்கும்.
மரியாதை இல்லை
திமுகவில் உள்ளவர்கள் சிந்தித்துக் கொண்டுள்ளார்கள். உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை என்று சிந்தித்து வருகிறார்கள். கடைக்கோடி தொண்டனுக்கும் கூட அந்த கட்சியில் எந்த மரியாதையும் இல்லை என்பதை திமுக தொண்டர்கள் கேட்டுவருகிறார்கள். ஜெயக்குமார் சொல்வது உண்மைதான் என்று கேட்டுவருகிறார்கள். ஸ்டாலின் குடும்பத்திலே குழப்பம். தயாநிதிக்கு விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலாளர் என்று பொறுப்பு வழங்கியுள்ளார்கள். துணை பொதுச்செயலாளர் பொறுப்பு அளிக்கவேண்டியதுதானே. உடனே ஸ்டாலின் இதற்குத் தயாநிதிக்கு போன் செய்வார். நீ ஜெயக்குமாரை விட்டுச் சொல்ல சொல்லிவிட்டாயா என்று கேட்பார். முரசொலி மாறன் குடும்பமும் இன்றைக்கு அதிருப்தியாக உள்ளது. ஒரு விஷயம் என்னவென்றால் ஸ்டாலின் சார்ந்த உதயநிதி,சபரீசன் இவர்கள்தான் இன்றைக்கு ஆதிக்கசக்தியாக ஆட்சியிலேயும்,கட்சியிலும் இருக்கிறார்கள்.இது நிறையப் பேருக்குப் பிடிக்கவில்லை என்று ஜெயக்குமார் கூறினார்.