விஜய்க்கு திமுக குடைச்சல்.. சபாநாயகர் தேர்தலில் சக்கரபாணியை நிறுத்த திட்டம்! ஜெயித்தால் அவ்வளவு தான்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று முதல்வராக பதவியேற்றார். இதையடுத்து தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற உள்ளது. நாளை சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் தவெகவிற்கு எதிராக சபாநாயகர் தேர்தலுக்கு முன்னாள் அமைச்சர் சக்கரபாணியை நிறுத்த திமுக தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தவெகவிற்கு பெரும் தலைவலியாக பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்துள்ளது. மெஜாரிட்டி இல்லாவிட்டாலும் திமுக கூட்டணி கட்சிகளின் தயவில் தவெக ஆட்சி அமைத்துள்ளது. தவெக தலைவர் விஜய் நேற்று முதல்வராக பதவியேற்றார். அவருடன் 9 பேர் அமைச்சர்களாகினர்.

இதையடுத்து தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தவெக எம்எல்ஏ கருப்பையா தேர்வு செய்யப்பட்டார். இவர் தலைமையில் இன்று 17வது தமிழக சட்டமன்றத்தின் முதல் அமர்வு தொடங்கி உள்ளது. இன்றைய தினம் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எம்எல்ஏவாக சட்டசபையில் பதவியேற்கின்றனர்.
நாளை சட்டசபை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான விஜய்யின் தவெக சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. தற்போது தொங்கு சட்டசபை அமைந்துள்ளது. தவெகவிற்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஐயுஎம்எல், விசிக எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் தான் விஜய் முதல்வராகி உள்ளார். இதனால் சட்டசபையில் சபாநாயகர் பதவியை கைப்பற்றுவது தவெகவிற்கு மிகவும் முக்கியம்.
ஏனென்றால் பலமுறை மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய சூழல் விஜய்க்கு வரலாம். அதோடு எம்எல்ஏக்கள் கட்சி தாவலில் ஈடுபடலாம். இந்த சமயத்தில் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யும் இறுதி முடிவு சட்டசபை சபாநாயகர் கையில் தான் உள்ளது. இதனால் தான் சபாநாயகர் பதவி மிகவும் முக்கியம். இதனால் விஸ்வாசமுள்ள நபரை சபாநாயகர் தேர்தலில் களமிறக்க விஜய் முடிவு செய்து வருகிறார்.
இதற்கிடையே தான் தவெகவிற்கு விஜய்க்கு எதிராக சபாநாயகர் தேர்தலில் திமுக வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் முன்னாள் அமைச்சர் சக்கரபாணியின் பெயர் உள்ளது. சபாநாயகர் தேர்தலில் நிறுத்தப்படுவதாக கூறப்படும் சக்கரபாணி திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டசபை தொகுதியில் 7 முறை வெற்றி பெற்றள்ளார்.
திமுகவின் மிக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான இவரை சபாநாயகர் தேர்தலில் களமிறக்க திமுக திட்டமிட்டு வருகிறது. சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு சக்கரபாணி தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முதல்வராக பதவியேற்ற விஜய்க்கு இது முதல் சவாலாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சட்டசபையில் வானளாவிய அதிகாரம் கொண்ட சபாநாயகர் பதவி எப்போதும் ஆளும் கட்சி வசம் இருப்பது தான் அவசியம். ஆளும் கட்சியாக விஜய்யின் தவெக இருந்து கொண்டு எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக வசம் இந்த பதவி சென்றால் அது ஆளும் கட்சியின் செயல்பாட்டை முடக்கும். குறிப்பாக தவெகவிற்கு பெரும்பான்மை இல்லாதபோது நம்பிக்கையில்லா தீர்மானம், எம்எல்ஏக்களின் கட்சி மாற்றம் உள்ளிட்டவற்றின்போது அவர்களின் தகுதி நீக்க நடவடிக்கையில் விஜய்க்கு மைனஸாக மாறலாம்.
இருப்பினும் சபாநாயகர் தேர்தலில் சக்கரபாணி வெல்வாரா? என்பது பெரிய கேள்வியாக உள்ளது. ஏனென்றால் சட்டசபையில் திமுகவுக்கு 59 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் 8 எம்எல்ஏக்கள் திமுக கூட்டணியில் களமிறங்கி இருந்தாலும் அவர்கள் தற்போது விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்கள் தவெக வேட்பாளருக்கு சாதகமாக வாக்களிக்கலாம். ஒருவேளை இவர்கள் கூட திமுக வேட்பாளருக்கு சாதகமாக வாக்களித்தாலும் கூட தவெகவை நெருங்க முடியாது.
அதேவேளையில் அதிமுகவில் 47 பேர் எம்எல்ஏக்களாக உள்ளனர். இவர்களின் ஆதரவு திமுகவுக்கு கிடைக்கும்பட்சத்தில் தவெகவிற்கு போட்டியாக மாறலாம். ஆனால் அதிமுக எம்எல்ஏக்கள் தற்போது 2 பிரிவாக செயல்பட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 10 எம்எல்ஏக்கள் ஒரு பிரிவாகவும், சிவி சண்முகம் தலைமையில் 37 எம்எல்ஏக்கள் இன்னொரு பிரிவாகவும் செயல்பட்டு வருகின்றனர். இது பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இதனால் சபாநாயகர் தேர்தலில் அதிமுகவினரில் ஒரு பிரிவினர் வாக்களிக்காமல் கூட விலகலாம். இது நடக்கும் பட்சத்தில் ஆளும் தரப்பான தவெகவின் வேட்பாளருக்கு சாதகமாக மாறலாம்
இதுவரையில், சபாநாயகர் தேர்தல் தொடர்பாக அதிமுகவின் நிலைப்பாட்டை பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அவரது கூட்டணிக் கட்சிகளான பாஜக, பாமக மற்றும் அ.ம.மு.க. ஆகியவையும் தங்கள் நிலைப்பாட்டை இன்னும் தெளிவுபடுத்தவில்லை. இந்த நிச்சயமற்ற தன்மை, சட்டப்பேரவைக்குள் சாத்தியமான அரசியல் மறுசீரமைப்புகள் குறித்த விவாதங்களை தீவிரப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications