திமுக + பாஜக கூட்டணி? “கொள்கையும் இல்லாம, தலைமையும் இல்லாம”..சிவி சண்முகத்திற்கு திமுகவின் பதிலடி!!
சென்னை : தலைமையும் கொள்கையும் இல்லாமல் அதிமுக தடுமாறி வருவதால் அதிமுகவினர் விரக்தியில் இருக்கிறார்கள், சிவி சண்முகம் விரக்தியில் பேசியுள்ளார் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
நேற்று என்.எல்.சி ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், திமுக, பாஜக கூட்டணி அமையவுள்ளதாக கூறி அதிர்ச்சியைக் கிளப்பினார்.
சி.வி.சண்முகத்தின் இந்தப் பேச்சுக்கு சம்பந்தப்பட்ட இரு கட்சிகளுமே கண்டனம் தெரிவித்துள்ளன. இதனால், அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திமுக + பாஜக
நாடாளுமன்ற தேர்தல் வரும்போது திமுக + பாஜக கூட்டணி வரப்போகிறது. பாஜக என்ன சொல்கிறது, ஒன்று எங்களுடன் கூட்டணி வையுங்கள் இல்லையென்றால் காங்கிரஸை கழற்றி விட்டுவிடுங்கள், ஆட்சிக்கு வந்தவுடன் உங்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்து விடுகிறோம் என்கிறது. திமுகவும் எங்களுக்கு அமைச்சரவை கொடுத்தால் போதும் என்கிறது. ஆகவே திமுக, பாஜக ஒன்றுதான். அவர்கள் காவித்துண்டு போட்டுக்கொண்டுள்ளனர். இவர்கள் கருப்பு-சிவப்பு துண்டு போட்டுள்ளனர். இரண்டும் ஒன்றுதான், திமுக கூட்டணியில் இருந்து மற்ற கட்சிகள் ஓடப் போகின்றன எனப் பேசினார்.

அரசியலில் பரபரப்பு
பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் நிலை இருந்து வரும் சூழலில், அதிமுக எம்.பி சிவி சண்முகம் இப்படிப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக கூட்டணியில் இருப்பதை விரும்பாததால், பாஜகவை சீண்டுவதற்காகவே சிவி சண்முகம் இப்படிப் பேசியிருப்பாரோ என்ற சந்தேகங்களும் கிளப்பப்படுகின்றன. சிவி சண்முகத்தின் பேச்சுக்கு, திமுக, பாஜக என இரு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

திமுக பதில்
சிவி.சண்முகத்தின் பேச்சுக்கு திமுகவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மனோ தங்கராஜ், "விரக்தியில் பேசுகிறார் சிவி சண்முகம். தலைமையும் கொள்கையும் இல்லாமல் அதிமுக தடுமாறி வருவதால் அதிமுகவினர் விரக்தியில் இருக்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக பதில்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் சிவி சண்முகத்தின் கருத்தை மறுத்திருக்கிறார். "திமுக பாஜக கூட்டணி அமையப் போவதாக சி.வி. சண்முகம் சொல்லியிருக்கிறார். அவர் பாஜகவில் இணைந்துவிட்டாரா என்று கேட்டுவிட்டு சொல்கிறேன். எந்த கட்சி யாருடன் கூட்டணியில் இணைகிறது என்பதை சம்பந்தப்பட்ட கட்சிகள் தான் சொல்ல வேண்டும். எனவே கட்சிகள் கூட்டணி குறித்து கட்சி தலைவர்கள் பேசினால் பொருத்தமாக இருக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.

சிவி சண்முகம் பேச்சுக்கு கண்டனம்
பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான சிவி சண்முகம் பாஜகவுடன் திமுக கூட்டணி வரும் என்றும், திமுகவும் பாஜகவும் ஒன்று என்றும் கூறியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் திமுக அரசின் செயல்பாடுகளை அண்ணாமலை தலைமையில் கடுமையாக விமர்சித்து ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக போராடி வரும் பாஜக எப்போது, யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற சிவி.சண்முகத்தின் அறிவுரையோ, ஆலோசனையோ பாஜகவிற்கு தேவையில்லை.

நிதானமில்லாமல்
அதற்கான உரிமையோ அல்லது தகுதியோ அவருக்கு இல்லை. மேலும், காவி துண்டு போட்டவன் பாஜக தொண்டன் என்றெல்லாம் 'நிதானமில்லாமல்' பேசியுள்ளதும் அவரின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. வருங்காலத்தில் அவர் பாஜக குறித்த விமர்சனங்களை தவிர்ப்பார் என்று கருதுகிறேன்" எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications