முதலமைச்சரை கடைசியாக எச்சரிக்கிறேன்... மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்
சென்னை: கொரோனா தடுப்பு விவகாரத்தில் யாருடைய ஆலோசனையையும் முதலமைச்சர் கேட்பதில்லை என்றும், அவரை கடைசியாக எச்சரிக்கிறேன் எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒன்றிணைவோம் வா திட்டம் மூலம் தொற்று ஏற்பட்டதாக கூறுவதற்கு என்ன ஆதாரம் வைத்துள்ளீர்?என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது;
உயிர் குடிக்கும் மாவட்டமாக தூத்துக்குடி மாறி வருகிறது.. விளாசும் ஸ்டாலின்
அன்பான வணக்கம்
கொரோனா நோய்ப் பரவலில் இருந்து உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ள எச்சரிக்கையாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால், இந்நோய்த் தொற்று முதலில் சில மாவட்டங்களில் தான் அதிகமாக இருந்தது. அதன்பிறகு தலைநகர் சென்னையில் அதிகமானது. இப்போது மறுபடியும் மற்ற மாவட்டங்களில் அதிகமாகி வருகிறது. அதனால் ஒட்டுமொத்த தமிழக மக்களும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!
சமூகப்பரவல்
'இவர் என்ன சொல்வது; நாம் என்ன கேட்பது?' என்று அலட்சியமாக இருந்தார். பாறையில் முட்டினால் தலைதான் வலிக்கும் என்பது மாதிரி ஆகிவிட்டது.இப்படி ஆணவமாக நடந்து கொண்டதால்தான் தினமும் 2000 - 2500- 3000 - 3500 என்று கூடிக்கொண்டு போகிறது. தினமும் 50 பேர் இறக்கிறார்கள். சமூகப் பரவல் இல்லை என்று பிடிவாதமாகச் சொல்கிறார் முதலமைச்சர். வெறும் வார்த்தை விளையாட்டை வைத்து, மக்களின் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்!
முதிர்ச்சியின்மை
என்னுடைய ஆலோசனை மட்டுமல்ல; யாருடைய ஆலோசனையையும் கேட்கின்ற மனநிலையில் முதலமைச்சர் இல்லை. அந்த முதிர்ச்சி இன்மையினால்தான், தமிழ்நாடு மிக மோசமான பேரழிவைச் சந்திக்க வேண்டியதாயிற்று. இந்த ஒட்டுமொத்த பேரழிவுக்கும் ஒரே ஒரு ஆள் காரணம் என்றால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் காரணம்! கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற உருப்படியாய் ஒரு நடவடிக்கையும் எடுக்காத எடப்பாடி பழனிசாமி, தனக்குப் பணம், கமிஷன் வருகிற திட்டங்களைப் பார்வையிட கோயம்புத்தூருக்கும் திருச்சிக்கும் போகிறார்!
அசட்டுத்துணிச்சல்
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கொரோனாவைக் கட்டுப்படுத்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இதுவரைக்கும் எந்த ஆக்கபூர்வமான ஆலோசனையையாவது அரசாங்கத்துக்குச் சொல்லி இருக்கிறாரா?" என்று கேட்டிருக்கிறார். இதுவரைக்கும் நான் விடுத்த அறிக்கைகளை ஒழுங்காக படித்திருந்தார் என்றால், இப்படிக் கேட்கின்ற அசட்டுத் துணிச்சல்கூட அவருக்கு வந்திருக்காது. என்னுடைய அறிக்கைகள் அனைத்துமே, அக்கறையுடன் அரசுக்கு ஆலோசனை சொல்லும் அறிக்கைகள் தான்.
ஸ்டாலின் கேள்வி
கொரோனா நோய்த் தொற்று குறித்த செய்தி பரவியவுடனே, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் அதனால் சட்டமன்றக் கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று முதலில் சொன்னது யார்?
அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துங்கள் என்று கேட்டது யார்?
கொரோனாவிற்கு 60 கோடி ரூபாய் நிதி போதாது, 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்குங்கள் என்று கேட்டது யார்?
மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரியுங்கள் என்று கோரிக்கை வைத்தது யார்?
பரிசோதனைகளை அதிகரியுங்கள் என்று எச்சரித்தது யார்?
ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவோருக்கு 5000 ரூபாய் நிதியுதவி கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தது யார்?
மின் கட்டணத்தில் சலுகையும், கால நீட்டிப்பும் கொடுங்கள் என்று சொன்னது யார்?
நிதிநிலை அறிக்கையை மறுபரிசீலனை செய்யுங்கள், சிறு-குறு நடுத்தர தொழில் நிறுவனங்களைக் காப்பாற்றுங்கள் என்றெல்லாம் ஆலோசனை வழங்கியது யார்?
கொரோனா காலத்தில் மதுபானக் கடைகளைத் திறக்காதீர்கள் என்று சொன்னது யார்?
பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்த வேண்டாம் என்று சொன்னது யார்?
இவ்வளவையும் சொன்னது நான் தான்.
ஆனால், ஸ்டாலின் என்ன ஆலோசனை சொன்னார் என்று கேட்கிறாரே எடப்பாடி பழனிசாமி.
விமர்சனம்
கொரோனா வராது என்றார்!
வந்தால் காப்பாற்றிவிடுவோம் என்றார்!
பணக்காரர்களுக்குத்தான் வரும் என்றார்!
யாரும் பயப்பட வேண்டியது இல்லை என்றார்!
மூன்று நாளில் கொரோனா ஒழிந்துவிடும் என்றார்!
இப்போது மூன்று மாதமாக ஒழிக்க முடியவில்லை என்றதும், ஆண்டவனுக்குத்தான் தெரியும் என்று அகலமாகக் கையை விரித்துவிட்டார்.
ஏப்ரல் 16-ம் தேதி, கொரோனா மூன்று நாளில் ஒழிந்து விடும் என்று இவரே எப்படிச் சொன்னார்?
வாய்க்கு வந்தபடி, சவடால் விடுவதுதான் அவரது வழக்கம். எதுவுமே நடக்கவில்லை என்றதும், 'ஸ்டாலின் என்ன ஆலோசனை சொன்னார்?' என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார்.
கொச்சைப்படுத்துகிறார்
"தி.மு.க.,வினரை நிவாரணம் கொடுங்கள் என்று தேவையில்லாமல் பாதுகாப்பின்றி ஈடுபட வைத்ததால் ஒரு சட்டமன்ற உறுப்பினரை இழந்தோம்" என்று நீலிக்கண்ணீர் வடித்துள்ளார். அப்பாவி ஏழை மக்களுக்கு அரசாங்கம் ஒழுங்கான உதவிகளைச் செய்திருக்க வேண்டும். அரசாங்கம் செய்யத் தவறியதால், 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலமாக தி.மு.க. தொண்டர்கள் களத்தில் இறங்கிச் செய்தார்கள். தன்னுடைய உயிரைப் பணயம் வைத்து களப்பணியாற்றிய தி.மு.க. மாவீரனின் மரணத்தை எதற்காகக் கொச்சைப்படுத்த வேண்டும்?
ஒன்றிணைவோம் வா
'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலமாகத் தொற்று ஏற்பட்டது என்று பழனிசாமி சொல்கிறார். இதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறார்? 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலமாக மக்களின் பசி குறைந்தது; பட்டினி ஓரளவு தணிந்தது. அதுகூட பழனிசாமிக்குப் பிடிக்கவில்லையா?
உங்களின் தனிச் செயலாளர் கொரோனா நோய்க்கு இறந்தாரே, நோய்ப் பாதுகாப்பு வழி முறைகளை நீங்கள் அவருக்கு சொல்லி கொடுக்காதது தான் காரணமா?
என்னாலும் கேட்க முடியும்
சென்னையில் ஒரு இன்ஸ்பெக்டர் இறந்தாரே, அது உங்கள் தோல்வியா? அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு சிலருக்கும்- ஏன், உயர் கல்வித்துறை அமைச்சருக்கும் கொரோனா என்று செய்தி வந்ததே- அது உங்கள் தோல்வியா? கொரோனா வீரர்களாகக் களத்தில் நிற்கும் 1500-க்கும் மேற்பட்ட காவலர்களும், 2000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் - செவிலியர்களும், மக்கள் நல்வாழ்வுத்துறை ஊழியர்களும் கொரோனா நோய்த் தொற்றிற்கு உள்ளாகியிருக்கிறார்களே- அது உங்கள் நிர்வாகத் தோல்வியா? - என்று என்னாலும் கேட்க முடியும். அப்படி கேட்கும் அளவுக்கு உங்களைப் போல நாகரீகம் அற்றவனல்ல நான்.
வணிகர்கள் கொந்தளிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய படுகொலையை எடப்பாடி பழனிசாமி அரசு செய்துள்ளது. முதலில் 13 பேரைச் சுட்டே கொன்றது இந்த அரசு. இப்போது இரண்டு பேரை அடித்தே கொன்றிருக்கிறார்கள்.இது மக்கள் மத்தியில், குறிப்பாக வணிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் எல்லாம் இருந்து திசை திருப்புவதற்காக தி.மு.க. மீது பழி போடுகிறார் பழனிசாமி!
சாதனை பட்டம்
இதுவரை எடப்பாடி பழனிசாமிக்கு எல்லா ஆலோசனைகளையும் சொல்லிவிட்டேன். இப்போது அவருக்குச் சொல்வதற்கு ஒரே ஒரு ஆலோசனைதான் இருக்கிறது.கொரோனாவை ஒழித்துவிட்டு அதற்கான சாதனைப் பட்டத்தைச் சூட்டிக் கொள்ளுங்கள். கொரோனாவே ஒழியாத நிலையில், ஒழித்துவிட்டதாகப் பொய்யான மகுடம் சூட்டிக் கொள்ளாதீர்கள்!