திமுகவில் ஓரம் கட்டப்படும் கனிமொழி...இந்த முறையும் ஏமாற்றமே!!
சென்னை: திமுகவின் தூத்துக்குடி மக்களவை எம்பி, திமுக மகளிரணி செயலாளர் என்ற பொறுப்பு மட்டுமே கனிமொழிக்கு இன்றைய அடையாளமாக இருக்கின்றன. இவரது குரலுக்கு தேசமே திரும்பிப் பார்க்கிறது, ஆனால், திமுகவில் இன்னும் அங்கீகரிக்கப்படாத தலைவராகவே, பெரிய பொறுப்புகளில் இருந்து தவிர்க்கப்பட்டு வருகிறார்.
திமுக பொதுக்குழு கூட்டம் இன்று அந்தக் கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் காணொளி காட்சி மூலம் துவங்கியது. முதன் முறையாக திமுகவின் பொதுக்குழு கூட்டம் காணொளி மூலம் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டிஆர் பாலு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்களாக ஆ. ராசா, பொன்முடி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை திமுகவில் அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ. பெரியசாமி ஆகிய மூவர் மட்டுமே துணை பொதுச்செயலாளர்களாக இருந்து வருகின்றனர். கூடுதலாக இன்று இருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான சட்ட திருத்தங்கள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியில் தொடர்ந்து முன்னணியில் இருந்து குரல் கொடுத்து வருபவர் எம்பி கனிமொழி. இவரது பேச்சுக்கும், கருத்துக்கும் இன்று தேசிய அளவில் செல்வாக்கு பெருகி வருகிறது. குறிப்பாக இந்தி எதிர்ப்புக்கான இவரது போராட்டம் இன்று நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்து வருகிறது.
திமுக என்ன இந்து கட்சியா.. பிள்ளையாரை காட்டுவாங்களாம்.. மங்கல இசை முழங்குமாம்.. நெட்டிசன்கள் கலாய்!
இவரது இந்தி எதிர்ப்பால்தான் இன்று நாடு முழுவதும் கன்னடம் ஆக இருந்தாலும் சரி, மராத்தியாக இருந்தாலும் சரி தங்களது மொழிக்கு அங்கீகாரம் வேண்டும், அங்கீகாரத்தை இழந்து விடக் கூடாது என்று மீண்டு எழுந்துள்ளனர். குறிப்பாக கர்நாடகாவிலும் தமிழ்நாட்டைப் போலவே இந்திக்கு எதிரான குரல் எதிரொலித்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ''நான் தமிழ் பேசும் இந்தியன்'', ''இந்தி பேச முடியாது போங்கடா போ'' என்ற வாசகம் சமூக வலைதளங்களை அதிர வைத்தது. டி சர்ட்களில் இளைஞர்கள் வலம் வந்தனர். மீண்டும் தமிழகம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு செல்கிறதா என்ற வகையில் இந்த எதிர்ப்பு இருந்தது.
கள்ளக்குடியில், இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி ஒரு போராளியாக அன்று பங்கேற்றார். ரயிலின் முன்பு தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து, ரயில் மறியலில் இறங்கினார். இன்றும் அதுபோன்ற ஒரு போராட்டம் வெடிக்காது என்றாலும், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு இளைஞர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதை முன்னின்று நடத்தியவர் கனிமொழி.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் தன்னை பரிசோதித்த பெண் காவலர், ''இந்தி தெரியாதா? நீங்கள் எல்லாம் ஒரு இந்தியரா'' என்று கனிமொழியைப் பார்த்து கேட்டதாக அவரே பதிவு செய்து இருந்தார். அதுவும் தேசிய அளவில் பேசவைத்தது.
இதுமட்டுமில்லை, தமிழகத்தில் நடக்கும் சின்ன சின்ன தவறுகளையும் கடமையுணர்வுடன் சுட்டிக் காட்டி வருகிறார். சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, மும்மொழிக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கை, ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், நீட் எதிர்ப்பு என்று இவரது போராட்டமும் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது.
இவரது ஓவ்வொரு எதிர்ப்புக்கும் எதிரொலி இருக்கத்தான் செய்கிறது. சுட்டிக் காட்டப்படும் பிரச்சனைகளுக்கு தீர்வும் கிடைத்து வருகிறது. ஆனால், இன்னும் இவருக்கு கட்சியில்தான் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற குறை இருந்து வருகிறது.
இதுவரை மாநிலங்களவை உறுப்பினராக இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டு இருந்த கனிமொழி, கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு மக்களவைக்கு எம்பியாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். திமுகவின் மகளிரணி செயலாளராக இருக்கிறார். ஆனால், கட்சியின் உயர் பதவிகளுக்கு இவரை தேர்வு செய்யாதது ஏன், எது இவரை தடுக்கிறது போன்ற கேள்விகளும் எழுகிறது.