ட்ரெய்லர் ஒகே.. மெயின் பிக்சர் எப்படி.. 'பட்ஜெட் 2021'.. பிடிஆருக்கு ஸ்டாலின் கொடுத்த டாஸ்க்!
சென்னை: டிரெய்லர் தான் ஆளுநர் உரை.. பட்ஜெட்டில் முழு படமும் இருக்கும் என்று கூறி பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பை முதல்வர் ஸ்டாலின் அதிகரிக்க வைத்துள்ளார்.
Recommended Video
முதல்வரின் அறிவிப்பு காரணமாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் என்னென்ன அறிவிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஏனெனில் இது ஸ்டாலின் முதல்வராகிய பின்னர் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகும். நிதியமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட்டும் இதுதான்.

முதல் முறை பட்ஜெட்
இவ்வளவு தூரம் இதைபற்றி சொல்ல காரணம், திமுக கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை. அதுமட்டுமின்றி இதுவரை திமுகவின் தலைராகவும், முதல்வராகவும் இருந்த கருணாநிதி தான் இருந்து வந்தார். 2017முதல் திமுகவின் தலைவராகவும், 2021 முதல் தமிழகத்தின் முதல்வராகவும் ஸ்டாலின் மாறி உள்ளார். ஸ்டாலின் பல்லாண்டுகளாக அரசியலில் இருந்தாலும் முதல்வராகி இருப்பது இப்போதுதான் முதல் முறை. எனவே ஸ்டாலின் எந்தமாதிரியான திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது,

பொருளாதார நிபுணர்
இதேபோல் தமிழகத்தின் நிதியமைச்சராக உள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நன்கு படித்த பொருளதார நிபுணர், வெளிநாட்டு வங்கிகளில் பணியாற்றியவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிமுக ஆட்சியின் நிதிக்கொள்கையை கடுமையாக விமர்சித்தவர். மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி பகிர்வு முறையையும் கடுமையாக எதிர்ப்பவர். புள்ளி விவரத்துடன் நிதி வருவாய்கள் மற்றும் செலவினர்கள் குறித்து இவர் பேசும் பேச்சுகள் கடந்த ஓராண்டாக அதிகம் கவனிக்கப்பட்டவை ஆகும்..
எனவே முதல்முறையாக நிதியமைச்சராக உள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் என்னென்ன அம்சங்களை நிதி வருவாயை பெருக்க சேர்ப்பார். கடனை எப்படி சமாளிக்க போகிறார் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

என்னென்ன செலவு
திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த சில முக்கிய வாக்குறுதிகள் வரப்போகும் பட்ஜெட்டில் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஏற்கனவே திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்க உத்தரவிடப்பட்டது. முதல் தவணையாக ரூ.2000 மற்றும் ஜூன் 3 அன்று இரண்டாவது தவணை ரூ.2000 என மொத்தம் 8,393 கோடி ரூபாய் செலவில் 2 கோடியே 17 லட்சம் குடும்பங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயணம், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவருக்கும் அது நீட்டிக்கப்பட்டது. ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளை தாண்டி, கொரோனா தடுப்பூசிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிக்காக ஏராளமான கோடிகள் செலவு செய்யப்பட்டுள்ளது.

கடன் அதிகம்
இந்த சூழலில் அரசின் நிதிவருவாய் குறைவாகவும், கடன் அதிகமாக உள்ளதை பல நேரங்களில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளிப்படுத்தி உள்ளார். எனவே கடனை குறைக்கவே அதிக முயற்சியை மேற்கொள்வார் என்று தெரிகிறது. இதேபோல் மாநில அரசின் வரி வருவாயை பெருக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது உற்பத்தியில் அதிகம் கவனம் செலுத்துவார் என தெரிகிறது. மத்திய அரசிடம் ஜிஎஸ்டி வரியை கேட்டு பெறுவதிலும் ஆர்வம் காட்டுவார் என கூறப்படுகிறது.

பொருளதார நிபுணர்கள்
எந்த மாதிரியான திட்டங்கள் மூலம் பிடிஆர் உற்பத்தியை பெருக்க போகிறார். அரசின் வருவாயை அதிகரிக்க அவர் வைத்துள்ள திட்டங்கள் என்ன என்பது பட்ஜெட் வந்த பின்னரே தெரியும். இதேபோல் போல் பட்ஜெட் வந்த பின்னரே அரசின் சமூக நலத்திட்டங்களுக்கு எந்த அளவுக்கு நிதி ஓதுக்கபோகிறார் என்பது தெரியும்,
நிதியமைச்சர் பிடிஆர் கொடுத்த ஆலோசனையின் பேரிலேயே பொருளதார நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே முதல்வருக்கான சர்வதேச பொருளாதார நிபுணர்கள் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சமூக நலத்திட்டங்கள் இந்த மூன்றையும் மனதில் வைத்து பட்ஜெட்டுக்கான ஆலோசனை வழங்குவார்கள் என்பதால் இந்த பட்ஜெட் உண்மையில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications