மக்கள் முன்பு கண்ணீர் விட்ட முதல்வர்.. "மன்னிப்புடன்" ஓடி வந்த ராசா.. முன்பே செய்திருக்கலாம்..!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்த பேச்சுக்கு ஆ ராசா வருத்தம் தெரிவித்துள்ளார்
சென்னை: தமிழக முதல்வருக்கு வருத்தம் தெரிவித்து, அதுகுறித்த ஒரு வீடியோவையும் வெளியிட்டு, மக்கள் மனங்களில் மேலும் உயர்ந்துள்ளார் திமுகவின் ஆ.ராசா...!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசியலில் உயரத்தை எட்டி பிடித்தது குறித்து, ஆ ராசா ஒரு உவமையை சொல்லி பேசியிருந்தார்..
இந்த உவமை முதல்வரின் அம்மாவை பற்றியது என்று கூறி கடும் கண்டனங்கள் எழுந்தன.. அரசியல் தலைவர்கள் கொந்தளித்தனர்.. தமிழக சட்டமன்ற தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டி சூடுபிடித்திருக்கும் நிலையில், ராசா பேசிய பேச்சு பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தியது.
முதல்வர்
ஆனால், தாம் அப்படி பேசவில்லை என்றும், ஸ்டாலினையும் முதல்வரையும் அரசியல் குழந்தையாக ஒப்பிட்டு பேசிய எனது பேச்சை வெட்டியும் ஒட்டியும் சோஷியல் மீடியாவில் தவறாக பரப்பப்படுகிறது என்று ராசா விளக்கம் சொல்லியும் இந்த விவகாரத்தை அவ்வளவு எளிதாக யாரும் முடித்துவிட வில்லை. ராசா எப்படி இப்படி பேசலாம்? என்று உண்மையை ஆராயாமல், ராசாவின் விளக்கத்தையும் பொருட்படுத்தாமல் தனி நபர் தாக்குதல்கள் ராசாவின் மீது வீசப்பட்டன..
ஸ்டாலின்
இதற்கு பிறகுதான் திமுக தலைவர் இந்த விஷயத்தில் தலையிட்டார்.. அதுவும் நேரடியாக இல்லாமல் மறைமுகமாகவே ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். "கழகத்தினரின் பேச்சுகளைத் திரித்து, வெட்டி - ஒட்டி, தவறான பொருள்படும்படி செய்து வெற்றியைத் தடுக்க நினைக்கிறார்கள்.. பரப்புரையில் ஈடுபடும் போது கழகத்தினர் உணர்ச்சிவசப்பட்டு, கண்ணியக் குறைவான சொற்களை வெளிப்படுத்திடக் கூடாது. அப்படிப்பட்ட சொற்கள் உதிர்த்திடுவதைக் கண்டிப்பாகத் தவிர்த்திட வேண்டும், கண்ணியத்தை மனதில் கொண்டு பேச வேண்டும் என்று கழகத்தினருக்கு அறிவுறுத்தி, இந்த விவகாரத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க முயன்றார்.
புகார்
அப்போதும், அதிமுக கூட்டணி இந்த விவகாரத்தை விடவில்லை.. ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யாபிரதா சாஹுவிடம் புகாரளிக்கப்பட்டது.. பிறகு மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்யும் நிலைமை வரை விவகாரம் சென்றது. ஆனால், இதற்கு பிறகுதான், விஷயம் சூடானது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமியே, இதுகுறித்து நேற்று பிரச்சாரத்தில் வேதனையோடு குறிப்பிட்டார்.. நா தழுதழுக்க, குரல் உடைந்து, மனம் நொந்துபோய், கலங்கி பேசியதுதான் உச்சக்கட்ட பரபரப்புக்கு சென்றுவிட்டது.
வருத்தம்
இதற்கு பிறகு சற்றும் தயங்காமல், உடனடியாக வந்து ஆ.ராசா தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.. இதற்கு ராசா சொல்லும் காரணம் முதல்வரின் மனம் காயப்பட்டு இருப்பதாலேயே தன்னுடைய மனமார வருத்தத்தையும் பகிரங்கமாகவே ராசா வெளிப்படுத்தி உள்ளார்.
ஆ.ராசா
இதுகுறித்து ஒரு பேட்டியும் ராசா தந்துள்ளார்.. அந்த பேட்டியிலும், இடப் பொருத்தம் இல்லாமல் சித்தரிக்கப்பட்டு தவறாக புரிந்து கொள்ளப்பட்ட தன்னுடைய பேச்சு குறித்து விளக்கமாக சொல்லி உள்ளார்.. சித்தரிப்பு என்ற விவகாரத்தை ராசா முன்னிறுத்தி சொன்னாலும், முதல்வர் கலங்கிய விஷயத்துக்காகவே இந்த வீடியோ வெளியிட்டு வருத்தம் சொல்லி உள்ளார். முதல்வர் பழனிசாமி அரசியலுக்காக அல்லாமல், உள்ளபடியே காயப்பட்டு இருப்பதாக உணர்வாரேயானால், எனது மனம் திறந்த மன்னிப்பு கோருவதில் எனக்கு சிறிதும் தயக்கம் இல்லை என்று மீண்டும் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.
சித்தரிப்பு
கடந்த 4 நாட்களாக தமிழக அரசியலை புரட்டி போட்ட இந்த விவகாரம், ராசாவின் ஒத்த பேட்டியினால் முடிவுக்கு வந்துள்ளது.. இதனால் ராசாவின் மதிப்பு தான் கூடி உள்ளது.. சித்தரிப்பான பேட்டியை வைத்து, ராசாவை டேமேஜ் செய்ய ஒரு தரப்பு முயன்றதாகவும், அதைவைத்து, கொங்குவை திமுக பக்கம் போக விடாமல் செய்ய ஒரு முயற்சி நடப்பதாகவும்கூட சொல்லப்பட்டது.. ஆனால் இதை முன்பே அவர் செய்திருக்கலாம் என்றும் இதன் மூலம் தனது கட்சிக்குக் கிடைத்த கெட்ட பெயரை மேலும் பரவாமல் தடுத்திருக்கலாம் என்றும் பலர் கூறுகின்றனர்.
ராசா
என்னதான் உவமை என்று ராசா கூறினாலும் கூட அவரது வார்த்தைகளில் இன்னும் கண்ணியம் இருந்திருக்க வேண்டும் என்பதே பலரின் கருத்தாகவும் உள்ளது. குறிப்பாக பெண்கள் மத்தியில் ராசாவின் பேச்சு சற்று அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது.
மாண்பு
இதுபோல பல யூகங்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும், அதையெல்லாம் திமுக பொருட்படுத்தாமல் இருந்தது.. ஆனால், முதல்வர் கலங்கிவிட்டார் என்றதுமே ஓடோடி வந்து ராசா வருத்தம் சொல்லி உள்ளது அவரது மாண்பை கூட்டி உள்ளது.. திமுகவின் இமேஜை ஒரு படி மேலே தூக்கி விட்டுள்ளது.. தான் செய்யாத தவறு என்றாலும்கூட, விட்டுக்கொடுப்பவர் கெட்டு போக மாட்டார் என்பதில் மீண்டும் உயர்ந்து நிற்கிறார் "ராசா"..!