விசிக மது ஒழிப்பு மாநாட்டில் திமுக 2 பிரதிநிதிகள் பங்கேற்பு- திருமாவளவனிடம் முதல்வர் ஸ்டாலின் உறுதி!
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது, போதை ஒழிப்பு மாநாட்டில் திமுகவின் 2 பிரதிநிதிகள் பங்கேற்பர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தம்மிடம் தெரிவித்ததாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார். மேலும் தமிழ்நாட்டில் மதுவிலக்கு நடைமுறைக்கு வரவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நிர்வாகச் சிக்கலைக் கருத்தில் கொண்டு படிப்படியாக எவ்வாறு நடைமுறைபடுத்த முடியுமோ அவ்வாறு நடைமுறைப்படுத்துவோம் எனவும் முதல்வர் ஸ்டாலின் தம்மிடம் கூறியதாக திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: அமெரிக்கா சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து தமிழ்நாடு திரும்புகிற நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவரை சந்தித்து எங்கள் வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்தோம். அமெரிக்காவில் இருந்த 2 வார காலமும் ஏராளமான நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். தமிழர்கள், தமிழக முதல்வருக்கு மிகச் சிறப்பான வரவேற்பை நல்கினர். பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள், 19 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. முதல்வரின் இந்தப் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டுக்ககு ஏராளமான அன்னிய நேரடி முதலீட்டுக்கான வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்று முதல்வருக்கு எமது பாராட்டுதல்களைத் தெரிவித்தோம்.

விசிகவின் 2 கோரிக்கைகள்: அத்துடன் அக்டோபர் 2-ந் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பிலே, மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்தும் சூழலில் அந்த மாநாட்டில் 2 முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறோம். முதலாவது கோரிக்கை தமிழ்நாட்டில் அரசு மதுபானக் கடைகளை விற்பனை இலக்கை படிப்படியாகக் குறைக்க வேண்டும். 2-வது கோரிக்கை- தேசிய அளவிலானது. அரசியல் சாசனத்தின் 47-வது பிரிவின் கீழ் படிப்படியாக மதுவிலக்கை இந்திய அளவில் கொண்டு வருவதற்கு அனைத்து மாநில அரசுகளும் கொண்டு வர வேண்டும் என்பதாகும்.
அண்ணாவின் கொள்கை: மருத்துவ காரணங்களுக்குப் பயன்படுத்துகிற போதை மருந்துகள் தவிர, நுகர்வுகளுக்கான எந்த போதைப் பொருட்களும் பயன்பாட்டில் இருக்கக் கூடாது; புழக்கத்தில் இருக்கக் கூடாது அவற்றை தடை செய்ய வேண்டும் என்று கூறுகிற பிரிவுதான் அரசியல் சாசனத்தின் பிரிவு 47. இதனை பேரறிஞர் அண்ணா அவர்களும் ஏற்றுக் கொண்டு மதுவிலக்கு கொள்கையை வலியுறுத்தி இருக்கிறார்.
ஸ்டாலினிடம் கோரிக்கை மனு: திமுகவின் நிறுவனர் அண்ணா, மதுவிலக்கில் உறுதியாக-- உடும்புப் பிடியாக இருந்தார். மத்திய அரசுக்கும் அப்போது அண்ணா அழுத்தம் கொடுத்திருக்கிறார். அண்ணாவின் அதே கருத்தை கருணாநிதியும் கொண்டிருந்தார். அதை வலுவாக பேசி இருக்கிறார். மத்திய அரசுக்கும் சுட்டிக்காட்டி இருக்கிறார். அதனை பின்பற்றி 75-வது பவள விழாவை காணும் திமுகவின் தலைவர் முதல்வர் ஸ்டாலினும் மத்திய அரசுக்கு இந்த வேண்டுகோளை வலியுறுத்த வேண்டும் என விசிக சார்பில் கோரிக்கை மனுவை வழங்கினோம். முதல்வர் ஸ்டாலினும் அந்த கோரிக்கை மனுவை படித்துப் பார்த்தார்.
விசிக மாநாட்டில் திமுக பங்கேற்பு: திமுகவின் கொள்கைதான் மதுவிலக்கு கொள்கை- அதில் மாற்றுக் கருத்து இல்லை. எனவே நீங்கள் நடத்துகிற அக்டோபர் 2-ந் தேதி மாநாட்டில் திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும், செய்தித் தொடர்புச் செயலாளர் டிகேஎஸ் இளங்கோவனும் பங்கேற்பர் என்கிற உறுதியை வழங்கி இருக்கிறார். இந்த கோரிக்கையை உங்களுடன் சேர்ந்து மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறோம்; அழுத்தம் கொடுக்க விரும்புகிறோம் என கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு: தமிழ்நாட்டில் மதுவிலக்கு நடைமுறைக்கு வரவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நிர்வாகச் சிக்கலைக் கருத்தில் கொண்டு படிப்படியாக எவ்வாறு நடைமுறைபடுத்த முடியுமோ அவ்வாறு நடைமுறைப்படுத்துவோம் என கூறியுள்ளார். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications