நீட், இந்தி திணிப்பு எதிர்ப்பு.. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்களை திணறவைத்த திமுக!
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால மற்றும் பட்ஜெட் கூட்டத் தொடரில் நீட் முறைகேடுகள் குறித்து விரிவாக விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று டெல்லியில் இன்று மத்திய அரசு நடத்திய அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் திமுக எம்பிக்கள் டிஆர் பாலு, திருச்சி சிவா வலியுறுத்தினர். மேலும் மத்திய அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்; இந்தி மொழியை திணிக்கக் கூடாது உள்ளிட்டவைகளையும் திமுக எம்பிக்கள் வலியுறுத்தினர்.
நாடாளுமன்ற மழைக்கால மற்றும் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை முதல் ஆகஸ்ட் 12-ந் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளாக நடைபெற உள்ளது. நாளை பொருளாதார அறிக்கையையும் நாளை மறுநாள் மத்திய பட்ஜெட்டையும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த மத்திய அரசு டெல்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜுஜூ ஆகியோர் தலைமையிலான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் தவிர பெரும்பாலான கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
திமுகவின் மூத்த எம்பிக்களான டிஆர் பாலு, திருச்சி சிவா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், ரவிக்குமார் உள்ளிட்டோர் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் டிஆர் பாலு, திருச்சி சிவா இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விரிவாக விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினோம். அதேபோல ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்றோம்.
இந்தி மொழித் திணிப்பு மூயற்சியை மத்திய அரசு கைவிட்டாக வேண்டும். இந்தியை மத்திய அரசு தீவிரமாக திணிப்பது தொடர்ந்தால் 1965-ம் ஆண்டு போல மீண்டும் ஒரு மொழிப் போராட்டம் நடப்பது தவிர்க்க முடியாததாகிவிடும் என்றோம்.
நாட்டில் தலைவிரித்தாடும் வேலைவாய்ப்பின்மை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்; இதற்கு உடனடியாக தீர்வு காணாமல் போனால் வங்கதேச நிலைமை இந்தியாவிலும் வெடிக்கும் எனவும் திமுக தலைவர்கள் டிஆர் பாலு, திருச்சி சிவா இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சுட்டிக்காட்டினர்.
மேலும் காவிரி நதிநீர் பிரச்சனை, தமிழ்நாட்டுக்கான வெள்ள நிவாரண நிதியில் பாரபட்சம், மத்திய- மாநில அரசு திட்டங்களில் மத்திய அரசின் நிதியைத் தராமல் மாநிலங்களின் தலையிலேயே கட்டுகிற போக்கு ஆகியவற்றையும் திமுக தரப்பில் திருச்சி சிவா, டிஆர் பாலு ஆகியோர் விவரித்தனர்.












Click it and Unblock the Notifications