லோக்சபா தேர்தல் மாதிரி.. திமுக வெற்றி ஈஸியில்லை.. "இந்த பிரச்சாரமெல்லாம்" எடப்பாடியாரிடம் எடுபடுமா?
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற பெரிய வெற்றியை, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் பெறலாம் என்று நினைத்து விட முடியாது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
கடந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில், வேலூர் தவிர்த்து, தமிழகத்திலுள்ள 38 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் தேனியை தவிர அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றது. பிறகு வேலூரில் நடந்த தேர்தலிலும் திமுக வென்றது.
தேனி லோக்சபா தொகுதியில் மட்டும் அதிமுகவின் ஓ பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். இத்தனைக்கும் பெரிய வாக்கு வித்தியாசம் எதுவும் கிடையாது.
கிராம பஞ்சாயத்துகளில் பிரதமர் மோடியின் படம்... தமிழக அரசுக்கு பாஜக தலைவர் எல்.முருகன் வேண்டுகோள்..!
தேனி நிலவரம்
வேறு ஒரு பகுதியைச் சேர்ந்தவரான ஈவிகேஎஸ் இளங்கோவன், தேனி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் கூட தனது சொந்த கோட்டையில் ரவீந்திரநாத் அதிகப்படியான வாக்குகளை பெற முடியவில்லை. அதே நேரம் பல லோக்சபா தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். எதிரணியை விடவும் இவர்களின் வாக்கு சதவீதம் என்பது மிக அதிகமாக இருந்தது.
ஸ்டாலின் முதல்வராக மக்கள் விருப்பமா
கருணாநிதி மறைவுக்கு பிறகு ஸ்டாலின் தலைமைக்கும், அவரது பிரசாரத்துக்கும் கிடைத்த வெற்றி என்று திமுக இதைப் பற்றி கருதியது. இது உண்மைதானா? ஸ்டாலின் பிரசாரம் மக்களிடம் எடுபடுகிறதா, ஸ்டாலின் தலைமையை ஏற்று அவரை தமிழக முதல்வராக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்களா? என்ற கேள்விக்கு, அதே தேர்தலின்போது நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகளில் பதில் இருக்கிறது.
இடைத் தேர்தல் ரிசல்ட்டை பாருங்க
22 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 13 தொகுதிகளில் திமுக வென்றது. 9 தொகுதிகளில் அதிமுக வென்றது. இதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆட்சியை தக்கவைத்துக் கொண்டார். இந்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அல்லது முக்கால்வாசி தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று இருந்தால் கூட.. அதாவது அதிமுக 8 தொகுதிகளுக்கும் குறைவாக வென்றிருந்தால் கூட, இப்போது ஸ்டாலின் முதல்வராக இருந்திருப்பார். எடப்பாடி பழனிச்சாமி அல்ல. ஆனால் மக்கள் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தொடரத்தானே 9 சட்டசபைத் தொகுதிகளில் வாக்களித்தனர். இந்த விஷயத்தை திமுகவின் ஒரு பகுதியினர் உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். லோக்சபா தேர்தலுக்கான வாக்களிப்பு மனநிலை என்பது வேறு, சட்டசபை தேர்தலுக்கான வாக்களிப்பு என்பது வேறு என்பதை அவர்கள் புரிந்து வைத்துள்ளனர்.
லோக்சபா மனநிலை வேறு
பாஜக அல்லது காங்கிரசில் யார், மத்தியில் ஆட்சி செய்ய வேண்டும் என்ற கேள்விக்கான விடையாக, லோக்சபா தேர்தல் முடிவு இருந்தது. தமிழக மக்கள் பாஜக ஆட்சி செய்ய கூடாது என்று நினைத்து ஓட்டு போட்டனர். பாஜகவுக்கு எதிராக அப்போது பெரிய அலை வீசியது. அதுபோன்ற ஒரு எதிர்ப்பு அலை எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வீசவில்லை என்பதைத்தான் சட்டசபை இடைத்தேர்தல் முடிவு காட்டுகிறது.
வளர்ந்து வரும் எடப்பாடி பழனிச்சாமி
இத்தனைக்கும் சசிகலா சிறை சென்றது, டிடிவி தினகரனுடன் உரசல், ஆட்சிக்கு வந்த புதிது.., என பல்வேறு சிக்கல்கள் இருந்தும், எடப்பாடி பழனிச்சாமி சாதித்தார். இப்போது ஆட்சி நிர்வாகம் மற்றும் பிரச்சார யுக்தி போன்றவற்றில் முன்பை விடவும் எடப்பாடி பழனிச்சாமி முன்னேறி விட்டார். கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுக தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுத்த நிலையில், அப்போது எப்படியான நிலையில் இருந்தாரோ, இப்போதும் அப்படித்தான் இருக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி, முதல்வராக பதவியேற்ற பிறகு தன்னை அடுத்த கட்டத்திற்கு உயர்த்திக்கொண்டே வருகிறார்.
எடப்பாடியார் ஆளுமை
கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசியலில் தன்னை மேலும் மேலும் உயர்த்திக் கொண்ட தலைவர் என்றால் அது எடப்பாடி பழனிச்சாமிதான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். எனவே சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலை விடவும், பொதுத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி, திமுகவிற்கு பெரிய சவாலாக உருவெடுப்பார். திமுக குடும்பத் தொலைக்காட்சி ஒன்றில் கூட அதிமுக விளம்பரத்தை இடம்பெறச் செய்யும் அளவுக்கு எடப்பாடி பழனிச்சாமியின் ஆளுமை நீண்டு கொண்டு செல்கிறது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
அதிருப்தி அலை இல்லை
தேர்தல் நெருங்க நெருங்க, எடப்பாடி பழனிச்சாமி வேகம் இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதிருப்தி அலைகள் மாறி இப்போது எடப்பாடியார் என்ற ஒரு இமேஜ் மக்கள் மத்தியில் உருவாகிவிட்டது. ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கக்கூடிய பரிசுத் தொகைகள் உள்ளிட்டவை எடப்பாடியார் இமேஜை பாமர மக்களிடமும் பதிவு செய்து விட்டது. எனவே லோக்சபா தேர்தல் வெற்றியை நினைத்துக்கொண்டு திமுக மெத்தனமாக இருந்தால் சட்டசபை தேர்தலின்போது அதிர்ச்சியை சந்திக்க நேரிடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
பிரச்சார யுக்தி
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரு சட்டசபை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில், அதிமுக எளிதாக வெற்றி பெற்றதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். வெற்றி பெறுவதற்கான யுக்திகளை சிறப்பாக களத்தில் செயல்படுத்தக் கூடிய கட்சியாக அதிமுக மாறிவிட்டது. திமுக இன்னமும் எடப்பாடி பழனிசாமியை மட்டம் தட்டி மட்டுமே பிரச்சாரம் செய்து கொண்டிருந்தால் அது மக்கள் முன்னிலையில் எடுபடாமல்தான் போகும். பிரச்சார யுக்திகளை மாற்றியாக வேண்டும். வலுவான பிரச்சாரத்தை முன் வைத்தாக வேண்டும். இப்படியே பேசிக் கொண்டிருந்தால் வெற்றி எளிதல்ல என்று அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.