கை மாறும் 'கொங்கு' .. 33 - 35 'சீட்' உறுதி.. திமுக அதகளம் - ஏபிபி சி - வோட்டர் கருத்துக்கணிப்பு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று (ஏப்.29) வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதில், கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றிப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் முதல் முடிவடைந்தது. அரசியல் கட்சிகளின் சூறாவளி பிரசாரத்திற்கு பிறகு 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில், 72.78 சதவீத வாக்குகள் பதிவானது. இது கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலைக் காட்டிலும், 2.03 சதவீதம் குறைவாகும். கடந்த தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், குறைவாகவே இருந்தது.
தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் ஞாயிறு முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு - தமிழக அரசு
திமுக அதகளம்
இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் இன்று வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதில், ஏபிபி - சி வோட்டர் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில், கொங்கு மண்டலத்தில் திமுக கோலோச்சும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொங்கு பெல்ட்டில் அசத்தும் திமுக
நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களையும், 52 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது கொங்கு மண்டலம். இதில், திமுக கூட்டணி கட்சிகள் கொங்கு பெல்ட்டில் மட்டும் 33-35 வரையிலான சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
உடைகிறதா ராஜ்ஜியம்?
கொங்கு வேளாளக் கவுண்டர்கள் மற்றும் அருந்ததியர் சமுதாயத்தின் ஆதரவு காரணமாக, எம்ஜிஆர் காலம் முதல் கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் ராஜ்ஜியம் தான். கடந்த 1989-ல்அதிமுக இரண்டாகப் பிரிந்து களம் கண்டபோது, ஜெயலலிதா அணி வெற்றி பெற்ற 27 எம்.எல்.ஏ.க்களில், 17 பேர் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள்.
மாறும் களம்
1996 சட்டப்பேரவைத் தேர்தல் தவிர, 2016 தேர்தல் வரை, கொங்கு மண்டலம் என்பது அதிமுக கைகளில் தான் உள்ளது. 2011-ல் மொத்தமுள்ள 57 தொகுதிகளில், 45 தொகுதிகளையும், 2016-ல், 53 தொகுதிகளிலும் அதிமுக அங்கு வெற்றிப் பெற்று அசத்தியது. ஆனால், இம்முறை 2021 தேர்தலில், திமுக 33-35 வரையிலான சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.