ஒன்றா இரண்டா?வரலாறு காணாத இழிசொற்கள்-அவமானங்கள்..அத்தனையையும் தகர்த்து.. மகுடம் சூட்டும் ஸ்டாலின்!
சென்னை: தமிழக அரசியலில் மிக மோசமான இழி சொற்களால் சுடு சொற்களால் அவமானப்படுத்தப்படும் சொற்களால் விமர்சிக்கப்பட்டதை எல்லாம் பொறுமையாக, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பாணியில் கடந்து போய் இன்று வெற்றி மகுடம் சூட்டி தமிழகத்தின் முதல்வராக அரியணை ஏறுகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியில் அமருகிறது.
கருணாநிதி வழியில் ஆட்சி நடத்துவோம்..வாக்களிக்க தவறியவர்களுக்கும் பணியாற்றுவோம் - மு.க ஸ்டாலின்
திராவிட முன்னேற்றக் கழகத்தில் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதிக்குப் பின்னர் 3-வதாக மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
சோதனைகள்- வேதனைகள்
அந்த அறிக்கை வெறும் நன்றிக்குரியதானது மட்டுமல்ல.. அதில் ஸ்டாலின் இப்படி குறிப்பிட்டிருக்கிறார், "எத்தனை சோதனைகள் - எத்தனை வேதனைகள் - எத்தனை பழிச்சொற்கள் - எத்தனை அவதூறுகள் - என கழகத்தின் மீது வீசப்பட்ட அனைத்தையும் தங்களது வாக்குகளால் ஓரங்கட்டிய மொத்தத் தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி!" எனவும் பதிவு செய்திருக்கிறார்.
விமர்சிக்கப்பட்ட ஸ்டாலின்
உண்மையில் ஸ்டாலின் குறிப்பிடுவதைப் போல திமுக மீது அல்ல.. அவர் மீதுதான் அத்தனை பழிச்சொற்கள் -அத்தனை அவதூறுகள் வீசப்பட்டன. சமூக வலைதளங்களில் மு.க.ஸ்டாலின் குறித்து அச்சில் எழுதவே முடியாத அர்ச்சனைகள் அத்தனை அத்தனையையும் கண்மூடித்தனமாகவே எறியப்பட்டன. ஆனால் ஒருபோதும் ஸ்டாலின் இந்த விமர்சனங்களுக்கு பதில் தர விரும்பியது இல்லை.
கீழ்த்தரமான வசவுகள்
ஸ்டாலின் ஒரு இலவு காத்த கிளி... அவர் இப்படியே முதல்வர் பதவிக்காக ஏங்கி கொண்டிருக்கத்தான் வேண்டும்... ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை... ஜாதகம் சரியில்லை.. அவரால் முதல்வராகவே முடியாது... ஸ்டாலின் ஒரு ராசியில்லாதவர்... துண்டு சீட்டில் எழுதிப் படிப்பவர்... எதையும் தெளிவாக பேச தெரியாதவர் எல்லாம் முதல்வராகத்தான் முடியுமா? இவை எல்லாம் சற்றே எழுதக் கூடியவை. ஆனால் இதற்கு அப்பாலும் வீசப்பட்ட ஏகடியங்களுக்கு அளவே இல்லை.
சூறாவளி பிரசாரம்
இத்தனையையும் ஒரு மனிதர் தாங்கிக் கொண்டுதான் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அங்கும் இங்குமாக சூறாவளியாக சுழன்று பிரசாரம் செய்தார். இயக்குநர் மணிரத்னம், இருவர் என்கிற திரைப்படத்தை எடுத்தார். அது அப்பட்டமாக எம்ஜிஆர்- கருணாநிதி பற்றிய படம்தான். கருணாநிதி மட்டும் நினைத்திருந்தால் இருவர் படத்தின் கதி மட்டுமல்ல மணிரத்னத்தின் நிலைமையும் சிக்கலாகி இருக்கும்.
கருணாநிதி ஸ்டைல்
ஆனால் கருணாநிதி அதைபற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலைப்படாமல் புன்னகையுடன் இருவர் படத்தை எளிதாக கண்டுகொள்ளாமல் கடந்தவர். அப்படியான கருணாநிதியின் பக்குவத்தை தன்னகத்தே உள்வாங்கிக் கொண்டவராக மு.க.ஸ்டாலின் கடந்து போய் தமது இலக்கான தேர்தல் வெற்றியில் உறுதியாக பணியாற்றினார். அந்த பண்பட்ட பக்குவம்தான் இன்று அவருக்கு முதல்வர் பதவி எனும் மணிமகுடத்தை சூட்டியிருக்கிறது நிச்சயம் மிகை இல்லையே!