பாஜகவை ரொம்ப விமர்சிக்காதீங்க.. கூட்டணியே போனாலும்.. பாசத்தை பாருங்க.. மீட்டிங்கில் எடப்பாடி ஆர்டர்
சென்னை: பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டாலும் கூட பாஜகவிற்கு ஆதரவாக நேற்று நடந்த அதிமுக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி முக்கியமான உத்தரவு ஒன்றை போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக - பாஜக கூட்டணி நேற்று பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் முற்றிலுமாக முறிந்தது. பாஜக உடன் இனி கூட்டணி இல்லை. பாஜக தலைவர் அண்ணாமலை எங்கள் கட்சி தலைவர்களை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர்களை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார்.

அவரின் பேச்சை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் நாங்கள் கூட்டணியை முறித்துக்கொள்கிறோம். இனி தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறுகிறோம். அதோடு 2024 லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் நாங்கள் இடம்பெற மாட்டோம், என்று அதிமுக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று நடந்த அதிமுக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்.. பாஜகவுடன் கூட்டணி இல்லை. பயப்பட வேண்டாம். தேர்தலில் கண்டிப்பாக கூட்டணி வைக்க மாட்டோம். இதை மக்கள் நம்ப வேண்டும். இதற்காக நாம் மக்களிடம் சென்று பேச வேண்டும் .
நாம் கண்டிப்பாக தேர்தலுக்கு முன்போ, பின்போ கூட்டணி வைக்க மாட்டோம் என்று போய் அவர்களிடம் பேச வேண்டும். அதுதான் மிகவும் முக்கியம். நாம் தேர்தலை தனியாக சந்திப்போம். தேர்தலுக்கு பின்பும் தனியாக இருப்போம் என்று கூறியுள்ளதாக தெரிகிறது. அதன்படி மக்களிடம் சென்று அதிமுக- பாஜக கூட்டணி முறிவை பற்றி பேசுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு இருக்கிறாராம்.
இன்னொரு பக்கம் வேறு ஒரு முக்கியமான விஷயத்தையும் சொல்லி உள்ளாராம். அதன்படி பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டாலும் கூட பாஜகவிற்கு ஆதரவாக நேற்று நடந்த அதிமுக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி முக்கியமான உத்தரவு ஒன்றை போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி கூட்டணி முறிந்துவிட்டது என்பதற்காக பாஜகவை கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளாராம். அதாவது பாஜக குறித்து பொதுவெளியில் கடுமையாக விமர்சிக்க
வேண்டாம். தேவையின்றி பாஜக தலைவர்களை தவறாக பேச வேண்டாம். கூட்டணிதான் முறிந்துவிட்டதே என்பதற்காக மோடி அரசை விமர்சனம் செய்ய வேண்டாம்.
மோடி கொண்டு வரும் திட்டங்களை திமுக போல எதிர்த்து பேச வேண்டாம், என முக்கிய நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தல் செய்துள்ளதாம். கட்சித் தலைமையால் அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே ஊடகங்களில் பேச வேண்டும். அவர்களும் நாகரீகமாக பேச வேண்டும். விவாத நிகழ்ச்சிகளில் தேவையின்றி வார்த்தைகளை விட கூடாது.
அதை விட தவிர வேறு யாரும் ஊடக விவாதங்களில் பங்கேற்க கூடாது, சாதாரண பேட்டிகளில் பாஜகவிற்கு எதிராகவோ, மோடிக்கு எதிராகவோ பேசவே கூடாது என கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவின் கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம். வேற கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து பொதுச் செயலாளரே இறுதி முடிவு எடுப்பார். அவர் தேர்தல் காலத்தில் நல்ல முடிவை எடுப்பார். ஆலோசனைகளை செய்வார். அதனால் கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம், பேட்டி கொடுக்க வேண்டும். கூட்டணி குறித்து பொது செயலாளர் இறுதி முடிவு எடுக்கும் வரை அதிமுக நிர்வாகிகள் அமைதியாக இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications