நவம்பர் 9 இல் உருவாகும் காற்றழுத்தம்.. எந்தெந்த பகுதிகளில் என்னென்ன பாதிப்புகள்?
சென்னை: இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் வரும் 9ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் எங்கெங்கு பாதிப்பு ஏற்படும் என்பதை காணலாம்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. சென்னையில் கடந்த 31 ஆம் தேதி இரவு முதல் தொடர்ந்து இரு தினங்களுக்கு கனமழை பெய்தது. இதையடுத்து இன்று வரை விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.

தற்போது தென் மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வரும் 9ஆம் தேதி வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் 9ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் இது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி வட மேற்கு திசையில் அடுத்த 48 மணிநேரத்தில் நகரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
06.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்தமட்டில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் மழை பெய்யக் கூடும். வரும் 9ஆம் தேதி இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், என தீவிரமடைந்து புயலாக மாறவும் வாய்ப்புள்ளது.
இல்லாவிட்டால் அப்படியே மன்னார் வளைகுடாவில் காற்றழுத்தமாகவே கலக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த காற்றழுத்தம் தமிழகம்- புதுவை கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் நகரக் கூடும் என தெரிகிறது. 9ஆம் தேதி அன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். இந்த காற்றழுத்தத்தின் தாக்கம் 10 , 11 தேதிகளில் இருக்கும் என தெரிகிறது. இந்த காற்றழுத்தத்தால் தமிழகம், புதுவை கடலோர பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications