சிசிடிவி காட்சிகள் சொல்வது என்ன?.. வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இல்லை.. பிரேத பரிசோதனை அறிக்கை
வாணி ஜெயராம் இறப்பில் சந்தேகம் இல்லை என முதல்கட்ட பிரேத பரிசோதனையில் தகவல்
சென்னை: பிரபல பாடகி வாணி ஜெயராமின் இறப்பில் சந்தேகம் இல்லை என பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம், இதுவரை பாடாத மொழியே இந்தியாவில் இல்லை என சொல்லும் அளவுக்கு 19 மொழிகளில் பாடியுள்ளார். தமிழகத்தின் வேலூரில் பிறந்த இவர், தமிழில் பாடுவதற்கு முன்பு இந்தியில்தான் பாடினார்.
இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹாடோஸ் சாலையில் வசித்து வந்தார். இவரது கணவர் ஜெயராம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இவர்தான் தனது மனைவியை எப்படியாவது பாடகியாக்க வேண்டும் என மும்பைக்கு அழைத்து சென்றார்.
பின்னணி பாடகி வாணி ஜெயராமின் உடல் பெசன்ட் நகரில் இன்று தகனம்! திரைத்துறையினர் ஏராளமானோர் அஞ்சலி
இந்துஸ்தானி இசை
அங்கு உஸ்தாத் அஹ்மத் கானிடம் இந்துஸ்தானி இசையை வாணி கற்றுக் கொண்டார். இதையடுத்து இந்தியில் பாடும் வாய்ப்பை முதலில் பெற்றார். முதல் முயற்சியிலேயே இவரது பாடலுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து ஏற்கெனவே இந்தியில் பாடி கொண்டிருந்தவர்கள் எல்லாம் சற்று அச்சமடைந்ததாக அப்போதைய செய்திகளில் வெளி வந்தன.
தீர்க்க சுமங்கலி
இதைத் தொடர்ந்து 1974 ஆம் ஆண்டு தீர்க்க சுமங்கலி என்ற படத்தில் மல்லிகை என் மன்னன் மயங்கும் என்ற பாடலை அவர் பாடினார். அன்று முதல் அவரது தனித்துவமான அந்த குரலுக்கு மயங்காதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவருடைய பாடல்கள் இருந்தன. அவருடைய ஜாதகத்திலேயே சரஸ்வதியின் அம்சம் இருந்ததாகவும் அதன் காரணமாகவே அவருக்கு கலைவாணி என்ற பெயரை வைத்ததாகவும் சொல்கிறார்கள்.
உடல்நிலையில் பாதிப்பில்லை
அவருக்கு இதுவரை உடல்நிலையில் எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்து வந்தார். அவ்வப்போது வயோதிகம் காரணமாக சிறு சிறு பிரச்சினைகள் மட்டுமே ஏற்பட்டு வந்தன. இந்த நிலையில் நேற்றைய தினம் அவருடைய வீட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார். அவரது வீட்டிற்கு வந்த பணிப்பெண் கதவை தட்டியும் திறக்கவில்லை, மேலும் வாணிக்கு போன் செய்தும் அவர் எடுக்கவில்லை. இதனால் அந்த பணிப்பெண் போலீஸாருக்கு தகவல் அளித்தார்.
வாணியின் சகோதரிக்கு போன்
போலீஸார் வாணியின் சகோதரிக்கு தகவல் கொடுத்து மாற்று சாவியை கொண்டு வர சொன்னார்கள். அதை வைத்து திறந்த போது ரத்த வெள்ளத்தில் வாணி இறந்து கிடந்தார். அவரது தலையில் காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் போலீஸார் அவரது மரணத்தை சந்தேக மரணமாக பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
பிரேத பரிசோதனை
பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று இரவு அவரது வீட்டிற்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவருடைய உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நடிகைகள் சச்சு, மதுவந்தி, இசையமைப்பாளர் டி இமான், ஸ்ரீகாந்த் தேவா, பாடகி சுஜாதா உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அவருடைய உடல் இன்று மதியம் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
முதற்கட்ட அறிக்கை சொல்வது என்ன
இந்த நிலையில் அவருடைய பிரேத பரிசோதனை முடிவுகளில் முதற்கட்ட அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் மேஜை மீது விழுந்து தலையில் பலத்த அடிப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையின் படி வாணி ஜெயராமின் மரணத்தில் சந்தேகம் இல்லை.
படுக்கைக்கு அருகே இருந்த 2 அடி உயர மேஜை மீது விழுந்ததில் தலையில் அடிபட்டு மரணமடைந்துவிட்டார்.
வாணி ஜெயராமின் வீட்டிற்கு யாரும் வரவில்லை
வாணி ஜெயராமின் வீட்டிற்கு எந்த நபரும் வரவில்லை என சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் தெரியவந்தது. மேலும் நெற்றியில் காயம், மேஜையின் விளிம்பில் இருந்த ரத்த கறைகள் ஆகியவற்றை தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்து உறுதி செய்துள்ளனர் என முதற்கட்ட பிரேத பரிசோதனையில் தகவல் வந்துள்ளது. தலையில் காயம் இருந்ததை பார்த்ததும் முதலில் சந்தேக மரணம் என போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இரண்டொரு நாட்களில் வாணி ஜெயராமின் முழு பிரேத பரிசோதனை அறிக்கை வரும் என தெரிகிறது.