புதிய கல்விக் கொள்கை ஏன் வேண்டும் தெரியுமா? மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடுத்த புது விளக்கம்!
சென்னை: புதிய கல்விக் கொள்கை ஏன் வேண்டும் என்பதற்கு புது விளக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.
டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இந்தியாவில் 2.8 கோடி பேர் மீன்வளம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். உலகளவில் உள்ள மீன் தேவையில் 8% இந்தியா தான் பூர்த்தி செய்து வருவதாக கூறினார்.

மீன் மற்றும் மீன் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதியில் உலகளவில் இந்தியா முதலிடம் வகிப்பதாகவும் இந்தியாவுக்கு போட்டியாக ஈக்குவாடர் என்ற சிறிய நாடு உள்ளதாகவும் தெரிவித்தார். பிரதமர் மோடி முன்னெடுத்த நடவடிக்கைகளின் காரணமாக உலகின் வளர்ந்த நாடுகளுக்கு கூட நாம் அதிகளவில் மீன் ஏற்றுமதி செய்துவருகிறோம் என எல்முருகன் பெருமிதம் தெரிவித்தார்.
இந்தியாவை பொறுத்தவரை மனித வளத்தில் சிறப்பாக இருக்கிறோம் என்றும் அதனால் தான் உலகின் பல்வேறு நாடுகளிலும் நம்மால் சிறப்பான பதவிகளை பிடிக்க முடிவதாகவும் இதற்குத் தான் புதிய கல்விக்கொள்கை கட்டாயம் வேண்டும் என்கிறோம் எனவும் பேச்சோடு பேச்சாக ஒரு புது விளக்கத்தையும் எல்.முருகன் கொடுத்தார் .
தமிழ்நாட்டில் மீன்வளத் துறை உள்கட்டமைப்பை மேம்படுத்த 2ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது எனக் கூறிய எல்.முருகன், இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு முதல் இதுவரை மீன் வளத்துறையில் ரூ.38,500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசிய நிலையில் அதற்கு மேடையில் இருந்த மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எந்த ரியாக்ஷனும் கொடுக்காதது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications