என்னா வேகம்? சீட் ஷேரிங்கே நடக்குதாம்.. டெல்லி போன டாப் தலைகள்.. பாஜக கேட்ட ‘நம்பர்’.. ஷாக் ஈபிஎஸ்!
சென்னை : அதிமுக குழப்பத்திற்கு மத்தியில், 2024 தேர்தலைக் குறிவைத்து, 'தொகுதி பங்கீடு' லெவலுக்கு அதிரடியாக வேலையில் இறங்கிவிட்டதாம் பாஜக தலைமை.
பாஜக தலைமையில் ஒருங்கிணைந்த அதிமுக, அமமுக, தேமுதிக, புதிய தமிழகம், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி மற்றும் இதர முக்கிய கட்சிகளையும் சேர்த்து வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்பது தான் பாஜகவின் நோக்கமாக இருக்கிறது.
ஓபிஎஸ்ஸுக்கு சம அதிகாரம் கொடுத்து, மீண்டும் இணைந்து செயல்பட ஈபிஎஸ் தயாராக இல்லாத நிலையிலும், ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் இணைந்த அதிமுகவுக்கு 20 சீட் என மனக் கணக்கு போட்டிருக்கிறதாம் பாஜக.
தங்களிடம் 20 சீட்களை கொடுத்துவிட வேண்டும் என்றும், அமமுக, தேமுதிக மற்றும் சில சிறிய கட்சிகளுக்கு நாங்களே சீட் ஒதுக்கிவிடுவோம் என்றும் ஜரூராக இறங்கியிருக்கிறதாம் டெல்லி பாஜக.

டெல்லியில் இருக்கு சிக்கல்
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் இடையேயான நேரடி மோதலால் தமிழக அரசியலில் கடந்த 4 மாத காலமாக பரபரப்பு நீடிக்கிறது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். அதேநேரம், ஓபிஎஸ், ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கினார். இந்த விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் முன்பு நிலுவையில் உள்ளது.

பாஜக அட்வைஸ் - பிடிகொடுக்காத ஈபிஎஸ்
ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே தங்களுக்கு ஆதரவு கேட்டு டெல்லி பாஜகவை நாடி வந்த நிலையில், பாஜக தலைமை, டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் ஆகியோருடன் இணக்கமாக இருந்து வரப் போகும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. இதன் மூலம், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக பாஜக மேலிடம் இருப்பது உறுதியானது. ஆனால், பாஜக தலைமையின் ஆலோசனைகளை ஏற்காமல், ஓபிஎஸ்ஸை கட்சியில் இணைப்பது எனும் பேச்சுக்கே இடமில்லை என எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.

தேர்தல் வியூகம்
தன்னிடமே பெரும்பாலான நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது, கட்சியில் தனக்கே செல்வாக்கு இருக்கும்போது ஓபிஎஸ்ஸை இணைத்து அவருக்கு சம அதிகாரம் கொடுக்கச் சொல்வது நியாயமா என குமுறி வருகிறார் ஈபிஎஸ். அதிமுகவின் போக்கை பாஜக தலைமை உன்னிப்பாக கவனித்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை கணக்கில் கொண்டு ஓபிஎஸ், ஈபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை கொண்ட ஒருங்கிணைந்த அதிமுகவோடு இணைந்து தேர்தலைச் சந்திப்பதற்கான திட்டங்களை தீட்டி வருகிறது பாஜக மேலிடம்.

சீட் ஷேரிங் வரை வேகம்
எடப்பாடி பழனிசாமி இன்னும் தங்களது திட்டங்களுக்கு ஒப்புதல் தெரிவிக்காத நிலையிலும் கூட, 2024 லோக்சபா தேர்தலுக்கான சீட் பகிர்வு வரை பாஜக வெகுவேகமாக திட்டமிட்டு வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதிமுக கட்சிக் குழப்பத்திற்கு மத்தியில், இப்போதே சீட் கணக்குகளையும் பாஜக தலைமை போடத் தொடங்கியிருப்பது அதிமுகவில் குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறதாம்.

மைக்ரோ கணக்குகள்
பாஜக இந்த முறை 20 - 20 என ஷேரிங் போடும் வகையில் பேச்சைத் தொடங்கியுள்ளதாம். இதைக் கேட்டு ஈபிஎஸ் உள்ளிட்டோர் ஷாக் ஆகியுள்ளனர். தமிழகத்தை இத்தனை முறை ஆட்சி செய்த கட்சியான எங்களுக்கும், இப்போதுதான் 4 எம்.எல்.ஏக்களையே எங்கள் தயவால் பிடித்துள்ள பாஜகவுக்கும் சம அளவு சீட் ஷேரிங்கா, இது என்ன வேடிக்கை என தங்களுக்குள் பேசிக் கொண்டுள்ளனராம். ஆனால், பாஜக 20ல் ஆரம்பித்து அதில் சில மைக்ரோ கால்குலேஷன்களையும் போட்டிருக்கிறதாம்.

அமமுக _ தேமுதிக
எங்களுக்கு 20 சீட் கொடுத்தால் நாங்களே அனைத்திலும் போட்டியிடப் போவதில்லை. அதில் இருந்து பல கட்சிகளுக்கு பிரித்துக் கொடுப்போம். முக்கியமாக, டிடிவி தினகரனின் அமமுக, விஜயகாந்த்தின் தேமுதிக ஆகிய இரண்டு கட்சிகளும் நம் கூட்டணியில் கட்டாயமாக இணையும். நீங்கள் அவர்களுக்கு சீட் கொடுக்கவேண்டாம். நாங்கள் பேச்சுவார்த்தைகளை கவனித்துக் கொள்கிறோம். பாமகவுடன் நீங்கள் டீல் செய்து கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளதாம் பாஜக தலைமை.

20 சீட்
மேலும், ஏசி சண்முகம் தலைமையிலான புதிய நீதிக்கட்சி, கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தேவநாதன் யாதவின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் என நிறைய கட்சிகள் நமக்கு ஆதரவு அளித்து வருகின்றன. அவர்களுக்கும் சீட் ஒதுக்க வேண்டியுள்ளது. அதற்காகவே 20 சீட்களை கேட்கிறோம் எனக் கூறியுள்ளனர்.

தலைவர்கள் குறி
இதற்கிடையே, மேற்கண்ட சிறிய கட்சிகளின் தலைவர்கள் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோரைச் சந்தித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்போது 2024 தேர்தல் பற்றி பேசப்பட்டிருப்பதாகவும், தங்கள் விருப்பத்தை அவர்கள் டெல்லிக்கு தெரியப்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்தவகையில் ஏ.சி.சண்முகம் வேலூரையும், கிருஷ்ணசாமி தென்காசியையும் கேட்டுள்ளனராம்.

டெல்லி தலைமை உறுதி
அதேபோல, பாரிவேந்தர் பெரம்பலூருக்கு அடி போட்ட நிலையில், அங்கு ஏற்கனவே ஒரு பாஜக தலைவரும் குறி வைத்து வருவதால் கள்ளக்குறிச்சி தொகுதியையும் பச்சமுத்து ஆப்ஷனில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஜான் பாண்டியனும், தேவநாதனும் கூட பாஜக தலைவர்களைச் சந்தித்து ஒவ்வொரு சீட் உறுதியாக வேண்டும் எனக் கேட்டிருக்கின்றனராம். அவர்களுக்கும் உறுதியளித்து அனுப்பி இருக்கிறது டெல்லி தலைமை.

வேலைய ஆரம்பிச்சிட்டாங்களே
பாஜக தலைமை, கூட்டணி பேச்சுகளை தொடங்கி இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக சில நிகழ்வுகள் அரங்கேறி இருக்கின்றன. சமீபத்தில் ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், ஆளுநருக்கு ஆதரவாக களமிறங்கி, திமுக கூட்டணி கட்சிகளை விளாசினார் தேவநாதன் யாதவ். அதேபோல, புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும், திமுக எதிர்ப்பு பேச்சுகள், போராட்டம் என அரசியலை தீவிரப்படுத்தி வருகிறார்.

கூட்டணி வைபவம்
முன்னதாகவே, கூட்டணி ஏற்பாட்டு வைபவங்கள் அதிமுகவையும் உள்ளிழுத்து நடைபெற்றன. சமீபத்தில் சட்டப்பேரவையில் தங்கள் கோரிக்கை ஏற்கப்படாததைக் கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே அதிமுக சின்னத்தில் நின்று வென்று எம்.எல்.ஏ ஆன புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் நேரில் வந்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்தனர்.

சந்தேக அலை
அதற்குப் பிறகு தமிழக பாஜக சட்டமன்ற கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன், தமாக தலைவர் ஜிகே வாசன் எம்.பி, முன்னாள் எம்.எல்.ஏவான தமமுக தலைவர் ஜான் பாண்டியன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆதரவு தெரிவிக்க தனித்தனியாக அடுத்தடுத்து வந்தனர். ஆனால், அதன் பிறகு எடப்பாடியை சந்திக்க வந்த கூட்டணி கட்சி தலைவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. அதிமுக கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் இருந்து வந்த சூழலில், கூட்டணி கட்சிகள் திரண்டு சென்றது அரசியல் அரங்கில் சந்தேக அலையைக் கிளப்பியது.

கட்சிகளை முடுக்கிவிட்டு
இந்த நிலையில் தான் பாஜகவின் இந்த கூட்டணி கணக்கு பின்னணிகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன. இன்னும் தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் நிலையில், இப்போதே கூட்டணியை உறுதி செய்து, கட்சிகளை தேர்தல் பணிகளில் முடுக்கி விட ஆயத்தமாகியுள்ளதாம் பாஜக. சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி, ஒருங்கிணைந்த அதிமுகவோடு தான் பாஜக கூட்டணி உறுதியாக அமையும் எனக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications