பாஜக ‘பிட்ச்’ டெஸ்ட்.. ‘தலை’ விட்டுக் கொடுப்பாரோ? அண்ணாமலை இமேஜ் ‘டேமேஜ்’.. சொல்றது யாருனு பாருங்க!
சென்னை : பாஜக கொங்கு மண்டலத்தில் தமது வலிமையைச் சோதித்துப் பார்ப்பதற்காக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்கக்கூடும் என்ற பேச்சுகள் உலவத் தொடங்கியுள்ளன. அதேசமயம், பாஜக ஆதரவாளரான சுமந்த் சி ராமன், இடைத்தேர்தலில் பாஜகவுக்கு மோசமான ரிசல்ட் கிடைத்தால் அண்ணாமலையை சுற்றி கட்டமைக்கப்பட்டிருக்கும் இமேஜ் நிச்சயமாக அடிவாங்கும். இதனால், பாஜக இடைத்தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்து சூடு போட்டுக் கொள்ளாது எனத் தெரிவித்துள்ளார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் முக்கிய தலைவர்கள் கொங்கு மண்டலத்தில் போட்டியிட இருப்பதால், அதற்கு 'பிட்ச்'சை பரிசோதிக்கும் வகையில் இந்த இடைத்தேர்தலை பாஜக பயன்படுத்தக்கூடும் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன.
ஏற்கனவே தமாகா போட்டியிட்ட தொகுதி என்பதால், பாஜக அங்கு களமிறங்குவது எளிதானது என்ற கருத்தும் வைக்கப்படுகிறது. இந்நிலையில், அரசியல் விமர்சகரான சுமந்த் சி ராமன் ஒரு டிவி விவாதத்தில் இதுபற்றி தனது பார்வையை முன்வைத்துள்ளார்.

முதல் இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக சமீபத்தில் காலமானார். அவரது மறைவு அரசியல் கட்சி தலைவர்களையும், பொதுமக்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இந்நிலையில் எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா மறைவு காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் 6 மாதங்களுக்குள் நடத்தப்படவுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறவுள்ள முதல் இடைத்தேர்தல் இது. மேலும் அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ள சூழலில் நடைபெறவுள்ள முதல் சட்டமன்ற இடைத்தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம்.

பெரிய பிரச்சனையான ‘சின்ன’ சிக்கல்
அதேநேரத்தில், எதிரணியான அதிமுகவில் பல குழப்பங்கள் இருக்கின்றன. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற குழப்பம் தொடங்கியுள்ளது. தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் என்ற நிலையே நீடித்து வருவதால் இரட்டை இலை சின்னத்திற்கு இருவரும் கையெழுத்திட வேண்டும். எனவே இரட்டை இலை சின்னம் எந்த அணிக்கும் கிடைக்காத நிலை ஏற்படுக்கூடும் என கூறப்படுகிறது. இதற்கிடையே, இந்தப் பிரச்சனைகளுக்கு இடம் அளிக்காமல், கூட்டணி கட்சிக்கு அதிமுக வாய்ப்பு கொடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமாகாவுக்கு வாய்ப்பு?
ஈரோடு கிழக்கு தொகுதி ஏற்கனவே ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் யுவராஜா போட்டியிட்ட தொகுதி என்பதால், அதிமுக கூட்டணியில், அந்தக் கட்சிக்கு மீண்டும் இடைத்தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அப்படி தமாகாவுக்கு சீட் கொடுக்காமல், அதிமுகவே போட்டியிட விரும்பினால், தமாகா அதனை ஏற்றுக்கொள்ளுமா என்ற சந்தேகமும் இருக்கிறது. ஒருவேளை அதிமுக போட்டியிட விரும்பினால், அதையே காரணமாக வைத்து தமாகா, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தனி அணியாக இடைத்தேர்தலில் களமிறங்கவும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ஜி.கே.வாசன் + பாஜக
ஜி.கே.வாசன், பாஜக தலைமையோடு நல்ல உறவில் இருந்து வருகிறார். ஜி.கே.வாசன் தனது கட்சியையே பாஜகவோடு இணைக்கப் போவதாகவும் சில நாட்களாக பேச்சுகள் எழுந்து வருகின்றன. இதனால், ஈரோடு கிழக்கு தொகுதியில், பாஜகவை போட்டியிட வைக்க ஜி.கே.வாசன் ஒப்புக்கொள்ளவும் கூடும், தாங்கள் ஏற்கனவே போட்டியிட்ட தொகுதி என்கிற உரிமையில், அந்தத் தொகுதியை பாஜகவுக்கு விட்டுக்கொடுக்க ஜிகே வாசன் முடிவெடுக்கக்கூடும் என்றும் கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். பாஜக இந்த தொகுதியை, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கையில் எடுத்து ‘டெஸ்ட்' செய்யக்கூடும் என்றும் தகவல்கள் உலவி வருகின்றன.

கொங்கு மண்டலத்தில்
இதுதொடர்பாக டிவி விவாதம் ஒன்றில் பேசியுள்ள வலதுசாரி ஆதரவாளர் சுமந்த் சி ராமன், "ஒருவேளை அதிமுகவில் தொடர்ந்து பிரச்சனைகள் நீடித்து வரும் பட்சத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தனித்துப் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. அதிமுகவின் வாக்கு வங்கி, பாஜகவை நோக்கி வருகிறதா எனப் பார்ப்பதற்கு இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. பாஜக தாமரை சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டால், அதிமுகவின் கொங்கு மண்டல வாக்கு வங்கி பாஜக பக்கம் சாய்கிறதா எனத் தெரியவரும். அதிலும் குறிப்பாக, அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டால் அந்தச் சூழலை பாஜக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும்.

பலத்தை சோதித்துப் பார்க்க
ஏற்கனவே பாஜக கொங்கு மண்டலத்தில் கண் வைத்து விட்டது. அங்கு அவர்களுக்கு நல்ல அடித்தளமும் இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணாமலை கோவையிலும், எல்.முருகன் நீலகிரியிலும் போட்டியிடுவதாக பேச்சுகள் உலவி வருகின்றன. அதனால், அவர்களின் பலத்தை பரிசோதனை செய்ய முயற்சித்தால் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் முடிவை எடுக்கக்கூடும். கடந்த உள்ளாட்சி தேர்தலைப் போல, பெரிய காரணங்கள் இல்லாமலே கூட அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக இடைத்தேர்தலில் மட்டும் தனியாக நிற்கக்கூடும்.

அண்ணாமலை இமேஜ் அடிவாங்கும்
ஆனால், பாஜகவின் இந்த முடிவில் பெரிய ரிஸ்க்கும் இருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாஜக வளர்ந்து கொண்டிருப்பதாக ஒரு பேச்சு வளர்ந்து வருகிறது. இடைத்தேர்தலில் பாஜகவுக்கு மோசமான ரிசல்ட் கிடைத்தால் அண்ணாமலையை சுற்றி கட்டமைக்கப்பட்டிருக்கும் இமேஜ் நிச்சயமாக அடிவாங்கும். காங்கிரஸுக்கு ஏற்பட்டிருக்கும் அனுதாப அலை + ஆளுங்கட்சி கூட்டணி என்பதெல்லாம் காங்கிரஸ் வேட்பாளருக்கு பிளஸ். அதையெல்லாம் தாண்டி எதிரணி வெற்றி பெறுவது கடினம். இதனால், பாஜக இடைத்தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்து சூடுபோட்டுக் கொள்ள விரும்பாமலும் போகக்கூடும்" எனத் தெரிவித்திருக்கிறார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications