ஒரே போடு! 2 ஆக்ஷனுக்கு க்ளீனா ‘நோ’ சொன்ன எடப்பாடி.. வலுவாக கிடைத்த சிக்னல் “பாஜக அருள் வேண்டாமாம்”!
சென்னை : அரசியல் களத்தில் அதிரடி வெடி வீசத் தொடங்கி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஈபிஎஸ்ஸின் சமீபத்திய நகர்வுகளுக்குப் பின்னணியில் தீர்க்கமான திட்டங்கள் இருக்கின்றன என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
ஆட்சியில் இருந்த நான்கரை ஆண்டு காலம், எதிர்க்கட்சித் தலைவராக கடந்த ஒன்றரை ஆண்டு காலம் என 6 ஆண்டுகளாக பாஜகவை எதிர்த்துப் பேசத் துணிந்திராத எடப்பாடி பழனிசாமி, தற்போது பாஜவை எதிர்க்கத் தொடங்கி இருக்கிறார்.
பாஜகவின் கூட்டணி கணக்குகளுக்கு உடன்படாமல் இருந்து வரும் ஈபிஎஸ், பாஜகவின் 2 முக்கியமான வியூகங்களையும் நிராகரித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தை சேர்த்துக் கொள்ள முடியாது என உறுதியாகச் சொன்ன எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்க்கவும் வாய்ப்பில்லை எனக் கூறி பாஜகவை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.

பாஜக - எடப்பாடி
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த 6 ஆண்டு காலமாக அதிமுக, பாஜகவின் சொல்படியே நடந்து வருகிறது, தமிழக மக்களுக்கு விரோதமான திட்டங்களைக் கூட பாஜகவை எதிர்க்க முடியாமல் மென்மையான போக்கில் அதிமுக கையாள்கிறது என்ற குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. குறிப்பாக ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களையே எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக ஏற்றுக்கொண்டது கட்சித் தொண்டர்களுக்கே அதிருப்தியை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள், பாஜகவின் அடிமைகளாகவே ஓபிஎஸ், ஈபிஎஸ் இருப்பதாக கடுமையாக தாக்கி வருகின்றன.

பாஜகவின் அருள்
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் பிளவு ஏற்பட்ட பிறகும் கூட, இருவரும் டெல்லி தலைமையின் கரத்தை தங்கள் தலைக்கு மேல் திருப்பவே பிரயத்தனப்பட்டனர். நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் விட பாஜக தலைமையின் அருள் தங்களுக்கு வேண்டும் என்பதிலேயே இரு தரப்பினரும் குறியாக இருந்தனர். மாற்றி மாற்றி டெல்லிக்குத் தூது விட்டும், நேரில் படையெடுத்தும், பாஜகவின் தயவை நாடி வந்தனர். அதிமுகவை தங்கள் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாஜகவும், இதனைப் பயன்படுத்தி பலவிதமான கூட்டணி கணக்குகளைப் போட்டது.

மாஸ் கூட்டணி
வரும் 2024 லோக்சபா தேர்தலில் கணிசமான இடங்களை தமிழ்நாட்டில் பெற வேண்டும் என்பதற்காக குறிவைத்து சில வியூகங்களை வகுத்து வரும் பாஜக மேலிடம், ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைந்த அதிமுக, அமமுக, தேமுதிக, பாமக மற்றும் சிறிய கட்சிகள் என பிரமாண்ட கனவு கண்டது. இதற்காக, ஓபிஎஸ், தினகரனோடு இணக்கமாகச் செல்லுமாறு எடப்பாடி பழனிசாமியிடமும் அறிவுறுத்தியது பாஜக தலைமை. ஆனால், கட்சியில் 90 சதவீத ஆதரவு எனக்கு இருக்கும்போது, அவர்கள் தயவே தேவையில்லை என முஷ்டி முறுக்கிக் காட்டினார் எடப்பாடி பழனிசாமி.

போனாலும் பரவால்ல
எடப்பாடி பழனிசாமி தங்கள் அட்வைஸை கேட்காததால், அவரை விட்டுப் பிடிக்க முடிவு செய்து, ஓபிஎஸ்ஸுக்கு தங்கள் ஆதரவு இருப்பதாகக் காட்டியது பாஜக. சமீபத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் தமிழக வருகையின்போது, எடப்பாடி பழனிசாமியை மட்டம் தட்டும் வகையில் பாஜக மேலிடத்தின் செயல்பாடுகள் இருந்ததாக உணர்ந்து கொதித்துப் போனார் எடப்பாடி பழனிசாமி. அதனைத் தொடர்ந்து பாஜக கூட்டணியை விட்டுப் போனாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு ஈபிஎஸ் வந்துள்ளதைப் பார்க்க முடிகிறது.

அவசியமே இல்ல
அதன் வெளிப்பாடாகவே நேற்று செய்தியாளர் சந்திப்பில் பொங்கித் தீர்த்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. சென்னைக்கு வரும் போதெல்லாம் மத்திய அமைச்சர் அமித்ஷாவை நாங்கள் சந்திக்க வேண்டிய அவசியமில்லை. பாஜக ஒரு தேசியக் கட்சி, அதிமுக தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி. மோடி, அமித்ஷா கட்சி வேறு, எங்கள் கட்சி வேறு. அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமரோ, உள்துறை அமைச்சரோ வந்தால் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் சந்திக்கலாம், இல்லை என்றால் அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஈபிஎஸ் திட்டவட்டம்
மேலும், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான மெகா கூட்டணி அமைவது உறுதி. ஆனால் அந்த மெகா கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு 1% கூட இடம் கிடையாது என்று கூறியுள்ளார் ஈபிஎஸ். முன்னதாக அதிமுக தலைமையான கூட்டணியில் இணையத் தயார் என டிடிவி தினகரன் வெளிப்படையாகவே பல முறை அறிவித்திருந்த நிலையில், அதற்கு 1% கூட வாய்ப்பில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

2 விருப்பத்திற்கும் நோ
எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் 2 விருப்பங்களையும் நிராகரித்துள்ளதோடு, நேரடியாக கடுமையாக சீண்டும் வகையிலும் பேசி இருக்கிறார் ஈபிஎஸ். முதல் விருப்பம், ஓபிஎஸ்ஸோடு இணைந்து செயல்பட வேண்டும் என்பது, அதில் துளியும் ஈபிஎஸ் ஆர்வம் காட்டவில்லை, முடியவே முடியாது என்று கூறி வருகிறார். இரண்டாவது விருப்பம், அமமுகவை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது. அதற்கும் இன்று பளிச்சென ‘கேட்' போட்டு விட்டார் ஈபிஎஸ்.

கழற்றிவிட முடிவு
பாஜக மேலிட தலைவர்களை ஓபிஎஸ் சந்திக்கப் போவதால், தானும் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால் கடுமையாக அப்செட் ஆகியிருந்த ஈபிஎஸ், இதுகுறித்து தனது ஆதரவாளர்களுடம் ஆலோசிக்கும்போது, தொண்டர்கள், நாம் பாஜக பின்னால் தொங்குவதை சற்றும் விரும்பவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. பாஜக தலைமையின் செயல்பாடுகளால் ஏற்கனவே அப்செட்டில் இருந்த எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ஸை பாஜக விட்டுக்கொடுக்காது எனத் தெரிந்ததன் காரணமாக, பாஜகவையே கழற்றி விட முடிவெடுத்து விட்டார் என்கிறார்கள்.

வேறு கூட்டணி
பாஜக கூட்டணியில் இருந்ததால் வெற்றி வாய்ப்பை இழந்தோம் என ஈபிஎஸ் ஆதரவு மாஜிக்கள் சிலர் ஏற்கனவே பேசியிருந்த நிலையில், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளின் முடிவு இப்போதும் அப்படியே இருக்கிறது. பாஜகவால் நமக்கு பெரிய லாபமில்லை, பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்த்தால் போதும், நமது கூட்டணி வலுவானதாகிவிடும் என ஈபிஎஸ் தரப்பு கணக்குப் போட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அதற்கு சில பாசிட்டிவ் சிக்னல்களும் அந்தப் பக்கத்தில் இருந்து கிடைத்துள்ளதாம். அதையெல்லாம் வைத்தே, பாஜகவை சீண்டத் தொடங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications