ஓபிஎஸ்ஸுக்கு கிடைத்த துருப்பு.. ‘டெல்லியில் திசைகாட்டி’.. கடைசி வரை 3.. விட்றாதீங்க.. பரபர ஆலோசனை!
சென்னை : உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது நீதிபதிகள் சொன்ன ஒரு விஷயத்தைக் கேட்டு ஓ.பன்னீர்செல்வம் நிமிர்ந்து உட்கார்ந்திருக்கிறாராம். இதையடுத்து நேற்று தனது ஆதரவாளர்கள், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்தார்.
நீதிபதிகள் ஆரம்பத்தில் என்ன கருத்தில் இருக்கிறார்களோ அதையொட்டியே தீர்ப்புகள் வருகின்றன. அந்தவகையில் பார்த்தால் நம் கை முதல் நாளே ஓங்கி இருக்கிறது என ஸ்வீட்டான செய்தியை ஓபிஎஸ்ஸுக்கு வழங்கியிருக்கிறார்கள் அவரது தரப்பினர்.
அதாவது, யார் பக்கம் எத்தனை தலைகள் என்பதெல்லாம் இருக்கட்டும், சட்ட விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பது முக்கியம் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறிய கருத்து இந்த வழக்கு செல்லும் திசையைக் காட்டியுள்ளதாக உற்சாகமாகியுள்ளது ஓபிஎஸ் டீம்.
நேற்று நடந்த அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணைக்குப் பிறகு சட்ட வல்லுநர்கள், ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓ.பன்னீர்செல்வம், அவர்கள் சொன்னதைக் கேட்டு உற்சாகமாகி இருக்கிறாராம்.

வழக்கின் திசை முக்கியம்
இதுவரை உச்ச நீதிமன்றத்திலும் சரி, சென்னை உயர் நீதிமன்றத்திலும் சரி அதிமுக மோதல் விவகாரத்தில், விசாரணை ஆரம்பிக்கும் போக்கே, இறுதி தீர்ப்பையும் தீர்மானித்திருக்கிறது. நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி தரப்பின் மெஜாரிட்டியையும், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவையும் ஏற்றுக்கொண்ட போதெல்லாம் அவருக்கு ஆதரவான தீர்ப்புகளே வந்தன. மாறாக, இன்றைய நிலையை கருத்தில் கொள்ளாமல் சட்ட விதிகளுக்குள் நுழைந்து விசாரணை நடத்தப்படும்போது வழக்கு ஓபிஎஸ் பக்கம் திரும்பி இருக்கிறது.

எதை முன்னிலைப்படுத்த வேண்டும்?
அந்த வகையில், உச்ச நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்தது முதலே, ஓ.பன்னீர்செல்வம் டீம், எந்தெந்த பாயிண்டுகளை எல்லாம் வழக்கு விசாரணையின் ஆரம்பத்திலேயே முன்னிலைப்படுத்த வேண்டும் என்பது குறித்து தொடர்ச்சியாக ஆலோசனை மேற்கொண்டு வந்தது. மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமாரை ஓபிஎஸ் தரப்பு ஃபிக்ஸ் செய்ததுமே, அவருடன் ஓபிஎஸ் தரப்பின் சீனியர்கள் தொடர்ந்து பேசி விவாதித்து வந்தனர்.

சட்டவிதி மீறல்
அந்தவகையிலேயே, நேற்று வழக்கு விசாரணை தொடங்கியதுமே, ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து தான் எந்தவொரு அதிகாரப்பூர்வ கட்சி செயல்பாட்டையும் மேற்கொள்ள முடியும். இதனை டிவிஷன் பெஞ்ச் கருத்தில் கொள்ளவே இல்லை என்றுதான் வாதத்தை ஆரம்பித்தார் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் ரஞ்சித்குமார். தன்னிச்சையாக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருவது அதிமுக சட்டதிட்ட விதிகளுக்கு முரணானது என்பதுதான் ஓபிஎஸ் தரப்பின் வாதம்.

மெஜாரிட்டி ஆதரவு
பின்னர், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை குறித்த பேச்சு எழுந்தபோது எடப்பாடி பழனிசாமி தரப்பின் மூத்த வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவளித்துள்ளனர். எனவே ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றார். அப்போது நீதிபதிகள் சொன்னதுதான் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு பெரிய நம்பிக்கை கொடுத்துள்ளது. அதேநேரம், எடப்பாடி பழனிசாமிக்கு பாதகமாகவும் அமைந்துள்ளது.

தலைகள் எந்த பக்கம்
அதாவது, ஈபிஎஸ் தரப்பு வாதத்திற்கு பதில் சொன்ன நீதிபதிகள், "சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்கும் பிரதான வழக்கில் வரும் முடிவு இந்த நீதிமன்றத்தின் முடிவுக்கு உட்பட்டதாக இருக்கும். ஆனால் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு என்பது கட்சி விவகாரம். அதனால், அதில் கட்சி சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதா என்பதை தீர விசாரிக்க வேண்டியுள்ளது" எனத் தெரிவித்தனர்.

ஓபிஎஸ் டீமுக்கு துருப்பு
பொதுக்குழுவில் மெஜாரிட்டி, எம்.பி.எம்.ல்.ஏக்களில் மெஜாரிட்டி, கட்சி நிர்வாகிகள் மத்தியில் மெஜாரிட்டி, என பெரும்பான்மை ஆதரவு தங்களுக்கு இருப்பதையே இதுவரை முக்கியமான வாதமாக முன்வைத்து வருகிறது ஈபிஎஸ் தரப்பு. இந்நிலையில், உச்ச நீதிமன்றம், அந்த வாதத்தை புறங்கையால் தள்ளிவிட்டு, சட்ட விதிகளின்படி பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளதா என ஆராய வேண்டும் எனக் கூறியுள்ளது ஓபிஎஸ் தரப்புக்கு கிடைத்த முக்கியமான 'துருப்புச்சீட்டாக' இருக்கிறது.

ஓபிஎஸ் ஆலோசனை
இந்த விஷயத்தை இரு தரப்பினருமே உன்னிப்பாக கவனித்துள்ளனர். நேற்று விசாரணை முடிந்தபிறகு ஓபிஎஸ் தனது ஆதரவாளர்கள், சட்ட வல்லுநர்களுடன் நடத்திய ஆலோசனையிலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. நாம் இவ்வளவு நாளாகச் சொல்லி வருவதை உச்ச நீதிமன்றம் முதல் நாள் விசாரணையிலேயே கையில் பிடித்துவிட்டது என சட்ட வல்லுநர்கள் ஓபிஎஸ்ஸிடம் கூறியுள்ளனர்.

கடைசி வரை 3
1. எத்தனை தலைகள் யார் பக்கம் இருக்கிறது என்ற கேள்வியை நோக்கியே கடைசி வரை வழக்கு செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
2. பொதுக்குழுவை கூட்ட சட்ட விதிகளில் ஈபிஎஸ் தரப்பு செய்துள்ள மீறல்கள், சூழ்ச்சியாக ஓபிஎஸ்ஸை வெளியேற்றியது உள்ளிட்ட வாதங்களையே விசாரணையில் முன்வைக்க வேண்டும்.
3. கட்சி நலனுக்காக இரட்டைத் தலைமையாக இணைந்து செயல்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே நம் வாதங்கள் இருக்கவேண்டும் என்றும் ஆலோசித்துள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications