டாப் ‘தளபதி’யின் போக்கில் மாற்றம்.. அப்படி ஒரு ‘ஐடியா’! பதறிப்போன ஓபிஎஸ்! என்ன ரூட் மாறுது?! போச்சா?
சென்னை : ஓ.பன்னீர்செல்வத்துக்கு கரமும், குரலுமாக இருந்து வரும் டெல்டா புள்ளியின் போக்கில் சமீபகாலமாக மாற்றங்கள் தென்படத் தொடங்கி இருப்பதால் ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாம். ஓபிஎஸ்ஸே அவர் மீது அப்செட்டில் இருப்பதாகவும் தகவல்கள் பரபரக்கின்றன.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் முழு வேகத்தோடு முஷ்டி முறுக்குவதற்கு, இந்த டெல்டா புள்ளி கொடுத்த பலம் ஒரு முக்கியமான காரணம்.
எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து 5 மாதங்களாக ஓபிஎஸ் போராடி வரும் சூழலில், அந்த டெல்டா புள்ளி, திமுக பக்கம் சாய்வதைப் போன்ற தோற்றம் ஏற்பட்டு வருகிறதாம்.
சமீபத்தில் ஒரு ஆலோசனைக் கூட்டத்தின்போது, எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த எம்.பி தேர்தலில், அவர்கள் தரப்பு நிற்கும் இடங்களில் எல்லாம் நாம் திமுகவை ஆதரிக்க வேண்டும் எனப் பேசி இருக்கிறாராம் அவர்.

ஜெயலலிதா விசுவாசி
சசிகலா குடும்பத்தின் மூலம் டெல்டா மண்டலத்திலும், அதிமுக தலைமையிலும் தனது செல்வாக்கை படிப்படியாக உயர்த்திக் கொண்டவர் அந்த முக்கிய புள்ளி. அவருக்கு ஜெயலலிதாவிடமும் தனிப்பட்ட செல்வாக்கு இருந்தது. அதனால் தான் கட்சியினர் மீதான புகார்களை விசாரிக்கும் கோர் டீமான நால்வர் அணியிலும் அவரை அங்கமாக்கினார் ஜெயலலிதா. 2011ல் அமைச்சரவையில் இடம்பெற்ற அவரால் அடுத்த முறை வெற்றி வாகை சூட முடியவில்லை. 2016 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த சில நாட்களிலேயே அவருக்கு உடனடியாக ராஜ்யசபா எம்.பி பதவியை வழங்கினார் ஜெயலலிதா.

டெல்டா தளபதி
தேர்தலில் தோற்றவர்களுக்கு உடனே வேறு பதவியை கொடுக்க ஜெயலலிதா விரும்பமாட்டார். ஆனால், அதையும் மீறி ஜெயலலிதா மனதில் இடம் பிடித்தவர் அந்த புள்ளி என்பதால் தான் டெல்லி சீட் கிடைத்தது. ஜெயலலிதாவின் பார்வை இருந்ததால் சோழ மண்டலத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் அந்தப் புள்ளி. சோழ மண்டல தளபதி என்று அழைக்கப்படும் அளவுக்கு டெல்டா அதிமுகவில் அவரது செல்வாக்கு இருந்தது.

ஓபிஎஸ் பக்கம்
ஜெயலலிதாவின் மறைவை அடுத்து கட்சியிலிருந்து சசிகலா வெளியேற்றப்பட்டதும் அவரது செல்வாக்கு இன்னும் அதிகரிக்கத் தொடங்கியது. சசிகலாவுக்கு நெருக்கமாக இருந்து வந்த அவர் தன்னை முழுமையாக ஆதரித்ததால், எடப்பாடி பழனிசாமியும் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அதனால் கட்சியின் முக்கிய பொறுப்புக்கும் வந்தார். ஆனால், அதிமுகவுக்குள் தங்கமணியும் வேலுமணியும் ஆதிக்கம் செலுத்துவதை விரும்பாமல் எடப்பாடியுடன் மோத ஆரம்பித்தார். இதையடுத்து, ஓபிஎஸ் பக்கம் சாயத் தொடங்கினார் அவர்.

சத்தத்தைக் காணோம்
கடந்த ஜூன் மாதம், ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டி ஒற்றைத் தலைமைக்கு வர எடப்பாடி பழனிசாமி முயன்றதுமே, போட்டுப் பார்ப்போம் என ஓபிஎஸ்ஸுக்கு நம்பிக்கை கொடுத்து, எடப்பாடிக்கு எதிராக கொம்பு சீவி விட்டவர்களில் முக்கியமானவர் இந்த டெல்டா புள்ளி. ஓபிஎஸ்ஸின் குரலுக்குக் குரலாக நின்று எடப்பாடி தரப்பை தெறிக்க விட்டுக் கொண்டிருந்த அந்த டெல்டா தளபதி, சசிகலாவுடன் ஓபிஎஸ்ஸை இணைத்து வைக்கவும் பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் தான் சமீப காலமாக அவர் சத்தத்தையே காணோம்.

ஓபிஎஸ் அணிக்குள் குழப்பம்
ஓபிஎஸ் அணியில் விசாரித்தால், ஓபிஎஸ் அணியின் உயர்மட்ட புள்ளிகளுக்கிடையே கருத்து மோதல்கள் வெடித்து இருக்கின்றன, டெல்டா புள்ளியின் மீது ஓபிஎஸ்ஸே அப்செட்டில் இருக்கிறார் என்கிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு எந்தெந்த வகைகளில் எல்லாம் குடைச்சல் கொடுப்பது என ஓபிஎஸ் தரப்பினர் அவ்வப்போது ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். எடப்பாடியின் ஒவ்வொரு நகர்வுகளுக்கும் ஏற்றார்போல பதிலடி கொடுக்க ஓபிஎஸ் அணியின் தளபதிகள் ஓபிஎஸ்ஸோடு அவ்வப்போது ஆலோசிப்பது வழக்கம்.

திமுகவுக்கு ஆதரவாக
அந்தவகையில் சமீபத்தில் நடந்த ஆலோசனையின்போது, எடப்பாடி பழனிசாமி நம்மை ஏற்றுக்கொள்ளாமல் இப்படியே நீடித்தால் பாஜக கூட்டணியில் நாம் தனியாகவே தேர்தலைச் சந்திக்க வேண்டி வரலாம் என்பது பற்றி விவாதித்துள்ளனர். அப்போது அந்த டெல்டா புள்ளி, அப்படி ஒரு சூழல் வந்தால், எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க, நாம் திமுகவுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும், ஈபிஎஸ் அணியினர் நிற்கும் ஒவ்வொரு தொகுதியிலும் நாம் திமுகவிற்கு ஆதரவாக இறங்கினால் எடப்பாடி காலி எனப் பேசியுள்ளாராம்.

டெல்டா மாஜி அப்செட்
இதனால் ஆடிப்போன ஓபிஎஸ், அந்தப் பேச்சை அப்ரூட்டாக கட் செய்து வேறு பக்கம் சென்ற நிலையில், பின்னர் மனோஜ் பாண்டியனிடம் சொல்லி, அவர் நினைப்பது போல செயல்பட்டால் அதிமுக தொண்டர்கள் ஒருவரும் நம் பக்கம் நிற்க மாட்டார்கள், திமுக எதிர்ப்பு தான் அதிமுக, அதை மறந்துவிடக்கூடாது என அந்த டெல்டா புள்ளியிடம் பேச வைத்தாராம். தனது கருத்துக்கு ஓபிஎஸ் தடை போட்டதோடு, இன்னொருவரை விட்டு பேசவும் வைத்ததால் அவர் ஓபிஎஸ் மற்றும் மேல்மட்ட புள்ளிகள் மீது கடுமையான அப்செட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஓபிஎஸ் அப்செட்
இந்நிலையில் தான் அந்த டெல்டா புள்ளி திமுகவின் செல்வாக்கான அமைச்சர் ஒருவருடன் அடிக்கடி பேசி வருவதாகவும் ஒரு தகவல் ஓபிஎஸ்ஸுக்கு கிடைத்திருக்கிறதாம். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ், அவர் போனால் டெல்டா மண்டலத்தில் நம் பலம் குறையும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், நம்மை திமுகவுக்கு ஆதரவானவர்கள் என்று ஈபிஎஸ் அணி முத்திரை குத்திவிடுமே, அவர் ஏன் இப்படி நடந்துகொள்கிறார், அவர் திமுகவுக்கு சென்றாலும் எதிர்காலம் இருக்காது எனச் சொல்லிப் புரிய வையுங்கள் என தனது ஆதரவாளர்களிடம் புலம்பியுள்ளாராம்.












Click it and Unblock the Notifications