காட்டு பகுதிகளில் கரண்ட் கம்பிகள்.. தமிழக அரசுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்த சென்னை ஹைகோர்ட்..!
காட்டுப்பகுதிகளில் கரண்ட் கம்பிகளை சரி செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது
சென்னை: தமிழக வனப்பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்ய எடுத்த நடவடிக்கை குறித்து செப்டம்பர் 9ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நிர்வாக இயக்குனர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என்றும் சென்னை ஹைகோர்ட் எச்சரித்துள்ளது.
தேனி மாவட்டம், மேகமலை அடிவாரத்தில் உள்ள சுருளியாறு மின்நிலையத்திலிருந்து 35 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, மேகமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் மலைகள் வழியாக கயத்தாறு வரை, உயர்மின் அழுத்தக் கம்பி மூலம் மின்சாரம் கொண்டுசெல்லப்படுவது வழக்கம்.
ஆனால், காலப்போக்கில் மின்கம்பிகள் இங்கு மிகத் தாழ்வாக வந்துவிட்டன... காட்டுப்பகுதி வழியாக மின் கம்பிகள் செல்வதால், அவற்றை சரிசெய்வது மின்சாரத்துறைக்கு பெரிய வேலையாகவே இருந்தது.
இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை அடுத்தடுத்து துயர சம்பவங்கள் இங்கு நடந்தன..
ஶ்ரீபெரும்புதூர் அருகே பரந்தூரில் 2-வது சென்னை பன்னாட்டு விமான நிலையம்: மத்திய அமைச்சர் வி.கே.சிங்
மின்கம்பிகள்
ஒரு குட்டி யானை உட்பட ஐந்து யானைகள், தாழ்வாகச் செல்லும் அந்த மின்கம்பி உரசியதால் பரிதாபமாக உயிரிழந்தன... இந்த சம்பவம் தமிழக மக்களை நிலைகுலைய வைத்துவிட்டது.. இதையடுத்து, உடனடியாக சுருளியாறு டு கயத்தாறு மின் வழித்தடத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டது... அடுத்தடுத்து யானைகள் மின் கம்பியில் உரசி பலியானது தொடர்பாக, மதுரை ஹைகோர்ட்டிலும் வழக்குத் தொடுக்கப்பட்டது.
கரண்ட் கம்பிகள்
அதில், "7 அடி உயரத்தில் மின் கம்பிகள் தாழ்வாக இருந்ததால், 12 அடி உயரம் கொண்ட யானைகள் அதில் சிக்கி உயிரிழந்துவிடுகின்றன.. அதனால், காட்டிற்குள் செல்லும் கரண்ட் கம்பிகளை முறைப்படுத்த வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தது.. இந்நிலையில், வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் சென்னை கோர்ட்டில் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, "மேகமலை வனப்பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியதுடன், இந்த உத்தரவு தமிழகம் முழுவதற்கும் பொருந்தும் என்றும் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.
யானைகள் பரிதாப மரணம்
மேலும், வனப்பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்யாததால் மாதம் ஒரு யானை பலியாவதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், இந்த உத்தரவை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து செப்டம்பர் 5ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.. இல்லாவிட்டால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நிர்வாக இயக்குனர் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என எச்சரித்தனர்.
டிரான்ஸ்பர்
மற்றொரு வழக்கில் வனத்துறையினரை 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்ற அனுமதிக்க கூடாது என அறிவுறுத்திய நீதிபதிகள், அப்படி தொடர்ந்து ஒரே இடத்தில் பணியாற்ற அனுமதிப்பதால் அவர்கள் சட்டவிரோத கும்பல்களுக்கு உடந்தையாக செயல்படுவதாகவும் சுட்டிக்காட்டினர்... பிறகு, 3 வருடங்களுக்கு மேல் பணியாற்றுபவர்கள் எத்தனை பேர்? இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர் என அறிக்கை அளிக்க வனத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஆகஸ்ட் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.