மதுரை மருத்துவ கல்லூரியில் சமஸ்கிருதத்தில் பழமைவாத சரகர் உறுதிமொழி ஏற்ற மாணவர்கள்- அன்புமணி கண்டனம்
சென்னை: மதுரை மருத்துவ கல்லூரியில் சமஸ்கிருதத்தில் பழமைவாத சரகர் உறுதி மொழியை மாணவர்கள் வாசித்த நிகழ்வுக்கு பாமக இளைஞரணித் தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரை மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகரஜன், மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது ஹிப்போகிரேடிக் உறுதிமொழிக்கு பதிலாக சரகர் உறுதி மொழியை மாணவர்கள் சமஸ்கிருதத்தில் படித்தனர். இதனால் அமைச்சர்கள் அதிர்ச்சி அடைந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
சமஸ்கிருதத்தில் மாணவர்களை உறுதிமொழி படிக்க வைப்பதா? மதுரை மருத்துவ கல்லூரி முதல்வர் தூக்கியடிப்பு!
முதல்வர் ரத்தினவேல் மாற்றம்
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து மதுரை மருத்துவ கல்லூரி முதல்வர் ரத்தினவேல், அப்பதவியில் இருந்து தூக்கியடிக்கப்பட்டார். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார் ரத்தினவேல். இது தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி வருகிறது.
அன்புமணி கடும் கண்டனம்
இச்சம்பவத்துக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளதாவது: மதுரை மருத்துவக் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க நிகழ்ச்சியின் போது ஹிப்போகிரட்டிக் உறுதிமொழிக்கு மாற்றாக மகரிஷி சரகர் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த இந்நிகழ்வு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்!
உலக நடைமுறை
கிரேக்க மருத்துவ அறிஞர் ஹிப்போகிரட்டீஸ் நோயாளிகள் அனைவருக்கும் நம்பிக்கையளித்து, மருத்துவம் அளிக்க வேண்டும்; நல்லறிவு, இரக்கம், அன்பு, நேர்மை ஆகிய பண்புகளை மருத்துவர்கள் கொண்டிருக்க வேண்டும் என்றார். அதுவே உலகம் முழுவதும் மருத்துவ மாணவர்களால் உறுதிமொழியாக ஏற்கப்படுகிறது!
Recommended Video
பழமைவாத சரகர் உறுதிமொழி
இந்திய ஆயுர்வேத அறிஞர் சரகரின் தத்துவம் என்பது மன்னரால் வெறுக்கப்படுவோருக்கோ, மன்னரை வெறுப்போருக்கோ மருத்துவம் அளிக்கக்கூடாது; கணவர் இல்லாமல் மனைவிக்கு மருத்துவம் அளிக்கக் கூடாது என்பதாகும். இந்த பிற்போக்குத் தத்துவம் மருத்துவர்களின் உறுதிமொழியாக இருக்கக்கூடாது! சரகர் உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்பதை தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரையாக மட்டுமே வழங்கியுள்ள நிலையில், அதை மாணவர்களை ஏற்கச் செய்தது தவறு. இது மருத்துவ மாணவர்களின் மனதில் பிற்போக்குத் தனத்தை ஏற்படுத்தும். இது மருத்துவத்துறைக்கு நல்லதல்ல!
சரகர் உறுதிமொழியை, தங்களுக்குத் தெரியாமல், மாணவர்களே ஏற்றுக்கொண்டதாக கல்லூரி நிர்வாகம் கூறுவது தவறு; அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தத் தவறுக்கு காரணமானவர்கள் யார்? என்பதை விசாரித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!