என்னாது தேள் கொட்டினால் இதய நோய் வரவே வராதா?.. பரவும் தகவல்.. உண்மை என்ன?.. டாக்டர் பரூக் விளக்கம்
சென்னை: தேள் கடித்து அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் இதய நோயே வராது என்ற ஒரு தகவல் உண்மையா என்பது குறித்து சிவகங்கை அரசு பொது மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்த படத்தை நண்பர்கள் சிலர் அனுப்பி இது உண்மையா? என்று கேட்கின்றனர். இந்த படத்தில் உள்ள இந்த பொய்யை எழுதியவர் ஒரு வகையில் சிறந்தவர் காரணம் கூறுகிறேன் .
"ஒருமுறை தேள் கடித்து அதற்கு வைத்தியம் செய்துவிட்டால்" என்று கூறுவதன் மூலம் தேள் கடித்தால் கட்டாயம் சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.
இது ஓகே. ஆனால் அதற்கு அடுத்த வரியில் பொய்யை கலக்கிவிட்டார்.
மட்டன் கறி சாப்பிட்டால் இதய நோய் வருமா? உடல் பருமனுக்கு காரணம் என்ன.. விளக்கும் டாக்டர் பரூக்
ஒரு முறை தேள் கடித்தால்
ஒரு முறை தேள் கடித்து சிகிச்சை அளித்து விட்டால் அவருக்கு வாழ்நாள் முழுவதும் இதய அறுவை சிகிச்சையோ அல்லது ஆஞ்சியோப்ளாஸ்ட்டோ தேவைப்படாது என்கிறார். இதன் மூலம் இவருக்கு இதய அறுவை சிகிச்சை பற்றியும் ஆஞ்சியோப்ளாஸ்ட் பற்றியும் இதயத்தில் எப்படி அடைப்பு ஏற்படுகிறது என்று தெரிவது போல ஒரு அரைகுறை அறிவியலாளர் பிம்பத்தை ஏற்படுத்துகிறார்.
தேள் விஷம்
கூடவே தேள் விஷத்தில் இருக்கும் மார்கடீன் என்ற பொருள் என்ற ஏதோ ஒன்றை கப்சாவிடுகிறார். யார் போய் இதையெல்லாம் தேடப்போகிறார் என்ற நினைப்பில் வாயில் வந்ததை அடித்து விடுவது. இத்தோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. அடுத்து வாயில் வந்தது போல் தேனீ கொட்டியவர்களுக்கு ரத்த கொதிப்பு வராது
செய்யான் கடித்தவர்களுக்கு சர்க்கரை நோய் வராது.
சங்குழவி கடித்தவருக்கு கேன்சர் வராது.
என்று அடித்து விடுகிறார்.
காமெடி
இதில் கடைசி காமெடியாக இவற்றின் விஷத்தை தான் ஆங்கில மருத்துவத்தில் முறிவாக பயன்படுத்துகிறார்கள் என்று விட்டாரே பார்க்கலாம். வாவ்... இதை படிக்கும் ஒரு படித்த நபர் ஒரு விதமான குழப்பத்திற்கு உள்ளாகிறார்.
காரணம் அதில் உள்ள மருத்துவ அறிவியல் பதங்கள் தான். எந்த ஒரு உளறல் பதிவிலும் ஆஞ்சியோ, மார்க்கடீன் போன்ற பதங்களை சேர்த்து கலந்து விட்டால் அப்படியே ஒரு பரபரப்பான ஷேர் செய்யத் தகுந்த ஒரு பொய் புரட்டு மெசேஜ் ரெடி.
துளி கூட உண்மை இல்லை
ஆனால் அதில் துளியும் உண்மை இல்லை என்று அறிவதில்லை. இந்த செய்தியில் கூறியிருப்பது உண்மையானால் நான் என் கிளினிக்கில் பத்து தேள் , ஐந்து நட்டுவாக்காலி , நூறு கருங்குழவி, நூறு செங்குழவி , செய்யான் போன்றவற்றை வளர்த்து என்னிடம் வருபவர்கள் மீது இதையெல்லாம் ஏவி விட்டு ஒரு முறை கடிக்க வைத்து பிறகு அவற்றில் இருந்தே எடுத்த விஷத்தை ஏற்றி அவர்களை காப்பாற்றி பெரிய ஆளாக ஆகியிருப்பேனே.
ஆர்வக்கோளாறுகள்
இது போன்ற காமெடி மெசேஜ்களை சிரித்து விட்டு நகருங்கள். ஷேர் செய்யாதீர்கள். காரணம் இதையும் உண்மை என்று நம்பி தேளை எடுத்து வேட்டிக்குள் விட்டுக் கொள்ளும் ஆர்வக்கோளாறுகள் இப்புவிதனில் உண்டு. இவ்வாறு டாக்டர் பரூக் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.