பிராய்லர் கோழி சாப்பிட்டால் பெண் குழந்தைகள் சீக்கிரமா வயசுக்கு வந்துடுவாங்களா?.. டாக்டர் பரூக்
சென்னை: பிராய்லர் கோழியை சாப்பிடுவதால் பெண் குழந்தைகள் சீக்கிரமாக வயதுக்கு வந்துவிடுவார்கள் என்பது தவறான தகவல் என சிவகங்கை அரசு மருத்துவமனையின் டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது: கிளினிக்ல நடந்த உண்மை சம்பவம் சொல்றேன். இந்த கதைய கேட்டுட்டு பிறகு நான் ஏன் பிராய்லர் கோழியை எதிர்ப்பதில்லை ஆதரிக்கிறேன் என்பதற்கான காரணம் புரியும். 30 களின் மத்தியில் ஒரு பெண்மணி தனது இரண்டு இரட்டையராகப் பிறந்த பெண் பிள்ளைகளைக் கூட்டி வந்திருந்தார்.
பிள்ளைகளுக்கு வயது பனிரெண்டு. இருவரும் எடை 20 கிலோவும் / 22 கிலோவும் தான் இருந்தார்கள். உயரம் 120 சென்டிமீட்டர் / 123 சென்டிமீட்டர் இருந்தார்கள். இருவரும் அவர்கள் ஊரில் இருக்கும் அரசுப் பள்ளியில் படிப்பவர்கள். தாய் களை எடுக்கும் கூலி வேலை செய்பவர். தந்தை சித்தாள்/ காடு கழனி வேலைகளுக்குச் செய்பவர். மொத்தத்தில் அன்றாடங்காச்சிகள்.
வைகை செல்வன் ஒரு அழுகிய தக்காளி... சீக்கு வந்த பிராய்லர் கோழி - ராஜேந்திர பாலாஜி தாக்கு
மழையோ புயலோ
இன்று மழையோ, புயலோ, வெயிலோ வேலை செய்து வரும் கூலியில் தான் வீட்டில் அடுப்பு எரியும். "சார்.. ரெண்டுக்கும் அடிக்கடி சளி புடிக்குது சார்.. நான் எப்பவும் தர்மாஸ்பத்திரிக்கு தான் போவேன். இன்னைக்கு பக்கத்துல சொன்னாங்க சார். அதான் உங்கள பாக்க வந்தேன்" ( கிராமத்து சொலவடையில் பக்கத்துல சொன்னாங்க என்பது தான் "word of mouth" ). "மா.. சளி இருக்கட்டும். ரெண்டு பாப்பாவும் எடை உயரம் ரெண்டுமே கம்மியா இருக்கு . பன்னென்டு வயசுல.. குறைந்தபட்சம் 30 கிலோ வரைக்கும் இருக்கணும்.. குறைந்தபட்சம் 130 சென்டிமீட்டர் உயரம் வளர்ந்திருக்கணும்"
ஊட்டச்சத்து உணவுகள்
( இப்படி பிள்ளைகளின் உயரமும் எடையும் ஒரு சேர சராசரி அளவுகளை விட குறைவாக இருப்பது என்பது தொடர்ச்சியாக பல ஆண்டுகள் சரியான ஊட்டச்சத்து உணவுகள் பிள்ளைகளுக்கு கிடைக்காததால் வருவது. இதை CHRONIC MALNUTRITION or CHRONIC NUTRITION DEFICIENT STATE என்போம். இதனால் எடையும் ஏறாமல் உயரமும் ஏறாமல் பிள்ளைகள் இருப்பார்கள். இத்தகைய குறைபாடு புரதச்சத்து குறைபாட்டால் தான் வரும். Protein Energy Malnutrition என்போம்) . நாம் எடுக்கும் உணவுகளில் முக்கியமானது என்று நான் கருதுவது " புரதச்சத்து (Protein)".
புரதச்சத்து
நம் பிள்ளைகளுக்கு சரியான புரதச்சத்து கொடுக்கப்படாமல் இருந்தால் அவர்கள் எடை கூடுவதிலும் உயரம் அதிகரிப்பதிலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், அவர்களது கற்றல் திறன், சிந்திக்கும் ஆற்றலை பாதிக்கும். "வயிறு பசியில் இருக்கும் போது எப்படி பிள்ளைகளால் படிக்க முடியும்?" சரி சம்பவத்திற்கு செல்வோம். "மா.. ரொம்ப உடல் எடை/உயரம் கம்மியா இருக்காங்க.. இவங்களுக்கு நல்ல புரதச்சத்துள்ள உணவு கிடைக்கணும்.. நீங்க இவங்களுக்கு முட்டை கறி கொடுக்குறீங்களா? "
முட்டை
" சார்.. டெய்லி முட்டை வாங்கி சமைக்கிறதுக்குலாம் வசதி இல்ல சார்.. இதுகளுக்கு பள்ளிகூடத்துல டெய்லி முட்டை போட்றாங்க.. ஆனா அதையும் சாப்டாம வீட்டுக்கு கொண்டு வந்துடுதுக சார்." "ஏன் புள்ளைகளா? டெய்லி பள்ளிக்கூடத்துல முட்டை கொடுக்குறதே நீங்க தெம்பா இருக்கணும்னு தான். இனிமே அந்த முட்டைய சாப்டலனா.. டெய்லி ஊசி தான் உங்களுக்கு போடுவேன். இனிமே அந்த முட்டைய ஒழுங்கா சாப்டுணும் " குழந்தைகள் சரி என்றனர்.
ஆட்டுக்கறியா
"மா..நம்ம வீட்டுல எத்தனை நாளைக்கு ஒரு தடவ கறி எடுப்பீங்க?" "வாரம் ஒரு தடவ எடுப்போம் சார்" "ஆட்டுக்கறியா மா?" " சார்.. ஆட்டுகறி எடுக்கலாம் எங்க சார் முடியும்? கோழி தான் சார்.." "என்ன கோழிமா.. நாட்டுக்கோழியா?" "சார்.. ப்ராய்லர் தான் சார்.. நாட்டுக் கோழி முடியாது சார். ஆனா இப்ப ப்ராய்லர் வேணாம்னு சொல்றாங்க சார். ஏதோ நோய்லாம் வருதாம்.. அதனால ஒரு மாசமா நாங்க கறியே எடுக்குறதில்ல " "ப்ராய்லர் கோழி எடுத்தா எவ்வளவு எடுப்பீங்க? ஒரு கிலோ எடுப்பீங்களா?" "அரைக்கிலோ, முக்காக்கிலோ எடுப்பேன் சார்.. அதுவும் வாரம் ஒரு தடவ.. இப்ப அதுவும் இல்ல.. பொன்னுங்க சீக்கிரம் வயசுக்கு வந்துராங்களாம்ல சார்.. அதனால நிறுத்திட்டேன் "
கறி சாப்பிட ஆரம்பிச்சதுல இருந்து
"மா.. உங்க பொன்னுங்களுக்கு அதுக கறி சாப்ட ஆரம்பிச்சதுல இருந்து என்ன கறி வாங்கி கொடுக்குறீங்க? "ப்ராய்லர் கறி தான் சார்." "இப்ப பனிரெண்டு வயசாகுது. இன்னும் வயசுக்கு வரலையே. பிறகு எதுக்கு வீண் புரளிய நம்பி பயப்பட்றீங்க.. அதுங்களுக்கு இப்ப தேவை புரதச் சத்துள்ள உணவு.. அது சத்துணவு மூலம் தினமும் கிடைக்கும் முட்டை மூலமும் இறைச்சி மூலமா ஈசியா கிடைக்கும். கூட பயறு / கடலை இதெல்லாம் சேத்துக்கோங்க.. புரளிகள நம்பாதீங்கம்மா " "சரி சார் " சகோதர சகோதரிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் தமிழகத்தில் இருக்கும் எல்லா மாவட்டங்களில் வாழும் அடித்தட்டு மக்களின் நிலை இது தான் .
பிராய்லர் கறி
இங்கு ப்ராய்லர் கறிக்கு எதிராக வீண் புரளிகளை பரப்பி விடுவோர் யாவரும் KFC / Mc Donald's சென்று தாங்கள் சாப்பிடுவது அதைத்தான் என்பதை தெரியாமலே தினமும் சாப்பிடுவார்கள். லேயர் முட்டை சாப்பிட்டால் ஆண்மை போய்விடும் என்று பரப்பி விட்டுக்கொண்டே ஹோட்டலில் சூடா ரெண்டு கலக்கி ஆர்டர் செய்து சாப்பிடுவார்கள். அங்கே மட்டும் என்ன நாட்டுக்கோழி முட்டையா போடுகிறார்கள். அறிவுக்கு உதவாத இந்த வெற்று வீண் புரளிகளை நம்பி பொருளாதாரத்தில் கீழ் நிலையில் உள்ள மக்கள் தான் இன்னும் புரதச்சத்து பற்றாக்குறைக்கு உள்ளாகிறார்கள். நான் நேற்று கேட்ட இந்த நிகழ்வு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற அளவில் தான் எடுக்க வேண்டும். கூலி வேலை செய்து களை பரித்து சித்தாள் /நிமிந்தாள் வேலைகளுக்கு சென்று வீட்டைக்காப்பாற்றும் பல குடும்பத்தலைவிகள் நிறைந்த மாநிலம் இது.
புரதச்சத்து
இங்கே நீங்கள் பரப்பும் புரளிகளினால் மக்கள் புரதச்சத்து குறைபாட்டுக்கு உள்ளாகிறார்கள். அவர்களால் நீங்கள் சொல்லும் நாட்டுக் கோழி/ ஆட்டு இறைச்சியை வாங்கி உண்ண முடியாத நிலை இருக்கிறது. இதுவே கள யதார்த்தமாக இருக்கிறது. அரசு பள்ளி சிறார்களுக்கு வாரம் ஐந்து முட்டை அங்கன்வாடி பிள்ளைகளுக்கு வாரம் மூன்று முட்டை வழங்கும் தமிழ்நாடு அரசின் திட்டங்களை உள்ளபடி வரவேற்கிறேன். இத்தோடு வாரம் ஒரு முறை மாமிசம் உண்ணும் குழந்தைகளுக்கு மட்டும், 100 கிராம் கோழிக்கறி சமைத்து அரசுப் பள்ளிகளில் பரிமாறினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.