கத்திரிக்காய் முத்தினால்.. டாக்டர் ராமதாஸின் இன்னும் ஒரு பூடக டிவீட்!
பழமொழியை வைத்து டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: மறுபடியும் ஒரு ட்வீட் போட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ். இந்த கத்தரிக்காய் ட்வீட் பல கேள்விகளையும், சந்தேகங்களையும் மறுபடியும் எழுப்பி உள்ளது.
எம்பி தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பாமக இன்னும் யாருடன் கூட்டணி என்பதை சொல்லவில்லை. ஆனால் அரசல் புரசலாக வந்த விஷயங்களை வைத்து பாமக, அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் என்ற பேச்சுகள் அவ்வப்போது எழுந்தன.
ஆனால் யாருடன் கூட்டணி என்பதை பற்றி நான்தான் சொல்லுவேன் என்று தெரிவித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ஊடகங்கள் எதுவும் தன்னிச்சையான கருத்துக்களை இது சம்பந்தமாக திரித்து சொல்ல வேண்டாம் என்றும் தன் ஃபேஸ்புக் பதிவில் அறிவுறுத்தி இருந்தார்.
பொன்மொழிகள்
டாக்டர் ராமதாசின் இந்த கருத்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதே, அவரது அறிவுறுத்தல் அவசியமானதே. கற்பனையிலும், யூகத்திலும் செய்திகளை வெளியிடக்கூடாது என்று மூத்த அரசியல்வாதியின் கருத்து மறுப்பேதும் யாரும் சொல்ல முடியாதுதான். ஆனால் அவர் பதிவிட்டு வரும் சில பழமொழிகள்தான் மண்டையை காய வைக்கிறது. அவரது ட்விட்டர் பதிவில் அடிக்கடி சில வெளிநாட்டு பொன்மொழிகளும், நம்ம நாட்டு பழமொழிகளும் இடம் பெற்று வருகின்றன.
|
யாரை சொல்கிறார்?
இவைகளை எதற்காக டாக்டர் பதிவிடுகிறார், யாரை சொல்கிறார், எதற்காக சொல்கிறார், ஏன் சொல்கிறார், இவைகள்தான் புரிவதில்லை. அதனால் மக்களாகவே இந்த பொன்மொழிகளை வைத்து, தங்களுக்கு என்ன புரியுமோ அதை மனதில் நிறுத்தி கொள்கிறார்கள். இல்லையென்றால், எதுவும் புரியாமல் பொன்மொழிகளை படித்து விட்டும் போகிறார்கள்.
கத்தரிக்காய்
இன்றும்கூட டாக்டர் ராமதாஸ் நம்ம ஊரு பழமொழியில் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், "கத்தரிக்காய் முற்றினால் கடைக்கு வந்தே தீரும்- முன்னோர்கள் சொன்னது" என்று பதிவிட்டுள்ளார். இங்கதான் பிரச்சனையே... கத்தரிக்காய் என்று தெரியவில்லை. என்ன விஷயம் முற்றி போய் இப்போது உள்ளது என்றும் புரியவில்லை.
சாதி கட்சிகள்
தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில் கூட்டணி பேச்சு முடிவாகவும் இல்லை. எனவே சாதிக்கட்சிகள் இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது, அதனால் தங்களிடம் கூட்டணிக்கு மற்றவர்கள் வந்தே தீர்வார்கள் என்று ராமதாஸ் இந்த ட்வீட்டில் சொல்ல வருகிறாரா? அல்லது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிவிட்டு போனாலும் மக்கள் தேர்தலில் பாஜக மீதான தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தே தீர்வார்கள் என்று சொல்ல வருகிறாரா? என்று தெரியவில்லை.
அர்த்தம்
ஆகவே முற்றிபோய் கடைத்தெருவுக்கு வருவது எது என்று இப்போதுவரை நமக்கு தெரியவில்லை. எப்படி பார்த்தாலும் டாக்டரின் ட்வீட்டில் கண்டிப்பாக அர்த்தம் இல்லாமல் இருக்காது. அதனால் அடுத்த ட்வீட்டில் ஏதாவது க்ளூ கிடைக்கிறதா என்று பார்ப்போம்!!