ஆட்சி மாறியும் காட்சி மாறலையே... டாஸ்மாக் திறப்புக்கு டாக்டர் ராமதாஸ், டிடிவி தினகரன் கண்டனம்
ஊரடங்கு தளர்வுகளின் ஒருகட்டமாகத் தமிழ்நாட்டில் மதுக்கடைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அமமுக செயலாளர் டிடிவி
சென்னை: கொரோனா நிவாரண நிதியாக ரூ.2,000 வழங்கிவிட்டு, மறுபுறம் அதைப் பறிக்கும் நோக்குடன் மதுக்கடைகளைத் திறப்பது எந்த வகையில் நியாயம்? என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த ஆட்சியில் இத்தகைய போக்கை விமர்சித்த திமுக இப்போது அதே தவறைச் செய்யலாமா? ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லையே! என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் வரும் 14ஆம் தேதி முதல்
திறக்கப்பட உள்ளன. கொரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் தவிர மீதமுள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்படலாம் என அரசு அறிவித்துள்ளது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமாதாஸ் தனது ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டில் தினசரி கொரோனா வைரஸ் பரவல் குறையும் விகிதம் கடந்த 4 நாட்களாகப் படிப்படியாகச் சரிந்து வருகிறது. இத்தகைய சூழலில் மதுக்கடைகளைத் திறப்பது கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதற்கே வழிவகுக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

அரசு உணர வேண்டும்
அழகு நிலையங்கள் உள்ளிட்ட பிற நிறுவனங்கள் செயல்படுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டு இருப்பதால், அடுத்த சில நாட்களில் தமிழ்நாட்டில் தினசரி கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் ஆபத்து உள்ளதைத் தமிழக அரசு உணர வேண்டும்.

எந்த வகையில் நியாயம்
ஒருபுறம் கொரோனா நிவாரண நிதியாக ரூ.2,000 வழங்கிவிட்டு, மறுபுறம் அதைப் பறிக்கும் நோக்குடன் மதுக்கடைகளைத் திறப்பது எந்த வகையில் நியாயம்? கடந்த ஆட்சியில் இத்தகைய போக்கை விமர்சித்த திமுக இப்போது அதே தவறைச் செய்யலாமா? ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லையே!

வறுமை அதிகரிக்கும்
மதுக்கடைகள் திறக்கப்பட்டால் ஏழைக் குடும்பங்களுக்குக் கிடைக்கும் மிகக்குறைந்த வருமானமும் பறிபோய்விடும். குடும்பங்களில் வறுமை அதிகரிக்கும்; வன்கொடுமை பெருகும். இவற்றைத் தடுக்க தமிழ்நாட்டில் மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது; மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

விலைமதிப்பற்ற உயிர்கள்
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில், மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றுவதற்காக என்று கூறி மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டித்துள்ள முதல்வர், அதற்கு நேர்மாறாக நோய்த்தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

மோசமான செயல்பாடு
இதன் மூலம் முந்தைய ஆட்சியாளர்களைப் போலவே தற்போதைய அரசுக்கும் மக்களின் உயிரைப் பற்றித் துளியும் அக்கறை இல்லை என்பதும், 'யார் எப்படிப் போனாலும் தங்கள் கஜானா நிரம்பினால் போதும்' என்று நடந்துகொள்வதும் மிக மோசமான செயல்பாடாகும்.

நோய் தொற்று மையங்களாக மாறும்
ஒரு பக்கம் நிவாரணத் தொகை கொடுப்பது போல் கொடுத்து, அதனை டாஸ்மாக் வழியாக பிடுங்கிக் கொள்ளும் தந்திரத்தையே, இவர்களும் பின்பற்றுவது பெரும் அவலமாகும். எனவே, கரோனா நோய்த்தொற்றும் மையங்களாக மாறுவதற்கு வாய்ப்புள்ள டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் அறிவிப்பைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications