துரோகி.. கதவு திறந்திருக்கு.. தப்புன்னா அதை 1000 முறை செய்வேன்.. துரை வைகோ கொந்தளிப்பு பேச்சு
சென்னை: நான் செய்தது தவறு என்றால் அந்த தவற்றை நான் 1000 முறை செய்வேன் என வைகோ மகனும் மதிமுக தலைமை செயலாளருமான துரை வைகோ தெரிவித்துள்ளார்.
எந்த உழைப்பையும் கொடுக்காமல் கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இல்லாமல் இடையூறு மட்டுமே செய்து கொண்டு இருப்பவர்களுக்கு கதவு திறந்தே இருக்கிறது. தாராளமாக வெளியே போகலாம் என்று துரைவைகோ கோவில்பட்டியில் பேசியிருந்தார்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மதிமுக மாவட்ட நிர்வாகிகள், உத்தரமேரூர், வாலாஜாபாத், ஒன்றிய செயலாளர்கள், பொதுக் குழு உறுப்பினர்கள் என 28 பேர் ஆலோசனை நடத்தி துரை வைகோவின் செயலை கண்டித்து தங்கள் கட்சி பதவிகளை ராஜினாமா செய்வதாக கூறி கூண்டோடு ராஜினாமா செய்துவிட்டனர்.
வெளியே போங்க.. உணர்ச்சி வசப்பட்டு வாயை விட்ட வைகோ மகன்! உங்க கட்சியே வேணாம்! காலியான காஞ்சிபுரம்!
விமர்சனம்
இதுகுறித்து துரை வைகோ தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
என்னை விமர்சிப்பவர்களுக்கு, என் கழகப் பணிகளே பதில்..!
துபாய் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற தன் கணவரை காணவில்லை. அவரைக் கண்டுபிடித்து இந்தியா அழைத்து வர உதவுங்கள் என்று, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்றப் பெண்மணி, மங்களூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் சம்பத் அவர்களின் மூலமாக, பெரம்பலூரில் என்னை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
வைகோ
சென்னைக்கு வந்தபிறகு, தலைவரிடம் இது தொடர்பாக விசாரித்தேன். தலைவர் வைகோ அவர்கள், ஏற்கனவே இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மாண்புமிகு ஜெய்சங்கர் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். அந்த மின்னஞ்சல் நகலை ஒன்றியச் செயலாளர் சம்பத் அவர்களுக்கு அனுப்பி விட்டு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ஆறுதலாக இருங்கள். தொடர்ந்து அடுத்தக்கட்ட முயற்சிகளை செய்கிறேன் என்று தெரிவித்தேன்.
துபாயில் பிரச்சினை
அத்தோடு நிற்காமல், துபாயில் உள்ள என் நண்பரின் மூலமாக, காணாமல் போனவருடைய பாஸ்போர்ட், விசா, அவர் பணியாற்றும் நிறுவனம் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் இந்திய தூதரக ஆணையர் அவர்களுக்கு அனுப்பி இப்பிரச்சனையை அவருக்கும் கவனப்படுத்தினேன். தற்போது, துபாய் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் மனு நகலை கேட்டு உள்ளார்கள்.
தமிழகம்
காணாமல் போனவர் பணியாற்றிய நிறுவனம் அவர்களின் சார்பில் அளித்த புகார் மனு நகலையோ, எந்தக் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்கள் என்பதையோ தர மறுக்கிறார்கள். அதையும் விசாரித்து உதவ, என் நண்பர் மூலமாக தூதரக அதிகாரிக்கு தெரிவித்து உள்ளேன். காணாமல் போனவரை கண்டுபிடித்து தமிழகம் கொண்டு வருவதற்கான எல்லா முயற்சிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றேன்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
அடுத்து, முன்னாள் தேனி மாவட்டச் செயலாளர் சகோதரர் சந்திரன் அவர்களின் நெருங்கிய உறவினர் செல்வக்குமார் (40) என்பவர், தன்னுடைய இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு மாற்று சிறுநீரகம் பொறுத்துவதற்காக, அவருடைய சித்தப்பா சத்யராஜ் (55) அவர்களை பரிசோதித்து பார்த்தார்கள். ஸ்கேனில் எல்லாம் சரியாக இருந்ததால், ஒரு கிட்னியை தானமாக பெறுவதற்கு பாதிக்கப்பட்டவரையும், தானம் தருபவரையும் அழைத்துச் சென்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து விட்டார்கள்.
சந்தேகம், குழப்பம்
அறுவை சிகிச்சையின்போது, சத்யராஜ் அவர்களின் சிறுநீரகம் சுருங்கி காணப்பட்டதால், அதை எடுத்து பாதிக்கப்பட்டவருக்கு பொருத்தினாலும் எந்த பயனும் இல்லை என முடிவுக்கு வந்து, மாற்று சிறுநீரகம் பொருத்தும் முடிவை கைவிட்டார்கள். அறுவை சிகிச்சை வரை சென்று, சிறுநீரகத்தை மாற்றி பொருத்தவில்லை என்பதால், குழப்பத்தில் சந்தேகப்பட்டு என்னை தொடர்புக் கொண்ட சகோதரர் சந்திரன் அவர்களிடம், பெரும்பாலும் எந்த உடல் நலக்குறைவாக இருந்தாலும் ஸ்கேன் செய்து பார்க்கும்போது 95 சதவிகிதம் துல்லியமாக இருக்கும்.
அப்பல்லோ மருத்துவமனை
5 சதவிகிதம் அறுதியிட்டு கூற முடியாது. அறுவை சிகிச்சை செய்து பார்த்தால் தான் தெரியும். என் அனுபவத்தில் பலரை பார்த்து உள்ளேன். இது தொடர்பாக பல ஆய்வுக் கட்டுரைகளையும் படித்து உள்ளேன் என, தெரிவித்தேன். பிறகு, அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி (CEO) நீலகண்டன் அவர்களை தொடர்புக் கொண்டு, நான் சந்திரன் அவர்களிடம் கூறிய தகவல்களை எல்லாம் தெரிவித்து, உண்மையை நிலையை கேட்டு அறிந்தேன். நாங்கள் சொல்ல வேண்டியதை எல்லாம் நீங்களே சொல்லி விட்டீர்களே என ஆச்சரியப்பட்டு போனார்.
கட்டண குறைப்பு
அவரிடம், பாதிக்கப்பட்டவர்களின் ஏழ்மை நிலையை எடுத்துச் சொல்லி மருத்துவக் கட்டணத்தில் சலுகை செய்து கொடுங்கள் என கேட்டேன். என் கோரிக்கையை ஏற்று, 1,40,000 ரூபாய் மருத்துவக் கட்டணத்தில் குறைத்துக் கொண்டதோடு, அடுத்தமுறை அவருக்கு சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் போதும், எங்களால் முடிந்த அளவுக்கு கட்டண சலுகை தருகிறோம் என, உறுதியளித்தார். சகோதரர் சந்திரன் அவர்களின் உறவினர்களுக்கு குழப்பம் தெளிவு பெற்று மன நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்பட்டது.
அமெரிக்காவில் பணியாற்றும் நபர்
அதைப்போல, அமெரிக்காவில் பணியாற்றிவரும் பொள்ளாச்சியை சேர்ந்த கழகத் தோழர் குரு அவர்கள், அவ்வப்போது என் பணிகளை பாராட்டி வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்வார். மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளராக பணியாற்றியவர். நேற்று முதல்நாள் இரவு என்னைத் தொடர்புக் கொண்ட அவர், என் தந்தை மந்திராச்சலம் அவர்களுக்கு, சென்னை இராமச்சந்திரா மருத்துவமனையில் மருத்துவர் தணிகாசலம் அவர்களிடம் இதயப் பரிசோதனைகளை செய்து வந்தோம். தற்போது, அப்பாவுக்கு சற்று உடல்நலக்குறைவாக இருக்கிறது. உடனடியாக மருத்துவரை சந்திக்க உதவுங்கள் என்றார்.
இதய அறுவை சிகிச்சை
இராமச்சந்திரா மருத்துவமனையில் உள்ள, இதய அறுவை சிகிச்சை நிபுணரின் உதவியாளரை தொடர்புக் கொண்டு, உடனடியாக அவருக்கு மருத்துவரை சந்திக்க அனுமதி பெற்றுக் கொடுத்தேன். திரு.மந்திராச்சலம் அவர்கள், மாவட்டப் பிரதிநிதியாக கட்சியில் பணியாற்றியவர். தற்போது எந்தப் பொறுப்பிலும் இல்லை. சகோதரர் குகன்மில் செந்தில் அவர்களுக்கு உறுதுணையாக பணியாற்றி வருகிறார்.
ஆன்ஜியோ
மருத்துவர்கள் சோதித்து விட்டு, அவருக்கு ஆன்ஜியோ செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்கள்.
என் பரிந்துரையால், நாளை (திங்கள்கிழமை) மந்திராச்சலம் அவர்களுக்கு ஆன்ஜியோ செய்யப்பட உள்ளதாக அமெரிக்காவில் இருக்கும் அவருடைய மகன் குரு அவர்கள், என்னிடம் தெரிவித்து விட்டு, மறுமலர்ச்சி தி.மு.க.வில் பயணிப்பதற்கு பெருமைப்படுகிறேன் என, நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதய பிரச்சினை
இதயப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் சகோதரர் பேட்ரிக் அவர்களின் உடல்நிலை குறித்து, அவரது மனைவி மற்றும் மகனிடம் அலைபேசி வழியாக நேற்று மாலை கேட்டு அறிந்தேன். நேற்று அவருக்கு, ஆன்ஜியோ செய்யப்பட்டு தற்போது ஓய்வில் இருக்கிறார். இன்று காலையிலும் அவர் குடும்பத்தினரிடம் அலைபேசி வாயிலாக உடல் நலம் கேட்டு அறிந்தேன். சகோதரர் பேட்ரிக் நன்றாக இருப்பதாகவும், அவர் சில தினங்களில் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து விடுவார் என்றும் தெரிவித்தார்கள்.
48 மணி நேரம்
48 மணி நேரத்தில் நான் மேற்கொண்ட பணிகள் இவை. கட்சியில் பொறுப்பில் இருந்தாலும், பொறுப்பில் இல்லாவிட்டாலும் இயக்கத் தோழர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறேன். இவற்றை எல்லாம் நான் வெளியில் சொல்வதும் இல்லை. இப்படி பதிவிடுவதும் இல்லை. சொல்ல வேண்டிய நிலை என்பதால் இதைப் பதிவிடுகிறேன்.
துரோகி
எந்த உழைப்பையும் கொடுக்காமல் கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இல்லாமல் இடையூறு மட்டுமே செய்து கொண்டு இருப்பவர்களுக்கு கதவு திறந்தே இருக்கிறது. தாராளமாக வெளியே போகலாம் என்று கோவில்பட்டியில் பேசினேன். இது தவறு என்றால், இந்தத் தவறை ஆயிரம் முறை செய்வேன். என் பேச்சை திரித்து பத்திரிக்கைகளிலும், சமூக வலைதளங்களிலும் எழுதுவதற்கு காரணமாக இருந்து வரும் துரோகிக்கு, என் கழகப் பணிகளையே பதிலாகத் தருகிறேன்.
இவ்வாறு துரை வைகோ தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.