தமிழ்நாட்டில் 14 முதல் இ-பதிவு ரத்து? டாஸ்மாக் கடைகள் திறக்க வாய்ப்பு.. வேறென்ன தளர்வுகள் தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் 14-ம் தேதி முதல் இ-பதிவு முறை ரத்து செய்யவும், டாஸ்மாக் கடைகளை திறக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
தமிழ்நாட்டில் அச்சுறுத்தி வந்த கொரோனா பாதிப்பு கீழே சரிய தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று 17,000 ஆக குறைந்திருந்தாலும் நாட்டிலேயே அதிக பாதிப்பில் முதல் மாநிலமாக உள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதில் 2 வாரங்கள் தளவுகள் இல்லாத முழு ஊரடங்கும் அடங்கும்.

முதல்வர் ஆலோசனை
கடந்த 7-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கு 14-ம் தேதி முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டமா? ஊரடங்கை நீட்டித்தால் கூடுதலாக என்ன தளர்வுகளை வழங்கலாம்? என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குனர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

கூடுதல் தளர்வுகள்
தலைநகர் சென்னையில் தொற்று கணிசமாக குறைந்து விட்டாலும், மேற்கு மண்டல பகுதிகளில் குறிப்பாக கோவையில் தொற்று அதிகமாக உள்ளது. அதுபோக கொரோனா இன்னும் முழுமையாக இன்னும் கட்டுக்குள் வரவில்லை. எனவே மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ குழுவினர் பரிந்துரை செய்தனர். இதேபோல் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது.

இ-பதிவு ரத்து?
முதலாவதாக தற்போது மாவட்டங்கள் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு முறை இருக்கும் நிலையில் தமிழ்நாட்ட்டுக்குள் இ-பதிவு நடைமுறை முறை ரத்து செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. டாஸ்மாக் கடைகள் நீண்ட காலமாக மூடப்பட்டுள்ளன. எனவே பார்கள் இல்லாமல் டாஸ்மாக் கடைகள் மட்டும் கட்டுப்பாடுகளுடன் இயங்குவதற்கான அறிவிப்பு வரலாம் என்று தெரிகிறது.

கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி?
மிக முக்கியமாக கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் ஒரு மாதத்துக்கு மேலாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டவில்லை. ஆக கட்டுப்பாடுகளுடன் குறிப்பிட்ட நேரம் மட்டும் இங்கு பக்தர்கள் அனுமதிக்கபட வாய்ப்பு இருக்கிறது. தற்போது முழு ஊரடங்கு நிலவி வரும் கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

பஸ் போக்குவரத்து தடை நீட்டிப்பு?
சலூன் கடைகள் திறக்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. சில தனியார் நிறுவனங்கள் திறக்கப்பட அனுமதிக்க வாய்ப்பு இருக்கிறது. அதே வேளையில் பொது போக்குவரத்துக்கு தடை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தளர்வுகள் குறித்து முதல்வர் அதிகாரிகளுடன் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிப்பார். அதன்பின்னர் இது தொடர்பான இறுதி எடுக்கப்பட்டு நாளையோ அல்லது நாளை மறுநாளோ முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications