ஓட்டர் ஐடி இல்லையேனு கவலை வேண்டாம்..இந்த ஆவணங்களை வைத்தும் வாக்களிக்கலாம்..தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லை எனினும் 11 அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி தவிர 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் பிரச்சாரக் களம் சூடு பிடித்துள்ளது. அதேபோல தேர்தலுக்கான ஏற்பாடுகளை தமிழக தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. அரசியல் கட்சிகளுக்கு செம நியூஸ்! பிரசாரத்திற்கு தளர்வுகள் அறிவிப்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என தமிழகத்தில் உள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் , 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதவிகளுக்குத்தான் இந்த தேர்தல் நடைபெறுகிறது. 21 மாநகராட்சிகளில் 1374 வார்டு உறுப்பினர்களுக்கும், 138 நகராட்சிகளில் உள்ள 3843 வார்டு உறுப்பினர்கள், 490 பேரூராட்சிகளில் 7621 வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட 12,838 பதவிகளுக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் முடிந்ததும் தலைவர், துணைத்தலைவர், மேயர் ,துணை மேயர் , உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.
ஒரு லட்சம் வேட்பாளர்கள்
மேலும் 42 மேயர் - துணை மேயர் பதவிகளுக்கும், 276 நகராட்சி தலைவர் - துணை தலைவர் பதவிகளுக்கும், 980 பேரூராட்சி தலைவர் - துணை தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 12,838 வார்டு உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒருவரை தலைவராகவும், துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கவுள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர், மாற்று வேட்பாளர்கள், சுயேட்டைகள் என ஒரு லட்சத்திற்கும் மேலான வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
எனவே, 38 மாவட்டங்களில் உள்ள வாக்காளர்கள், தங்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்குச்சாவடி சீட்டு உள்ளவர்களும் அல்லது வாக்குச்சாவடி சீட்டு இல்லாதவர்களும் வாக்காளர் அடையாள அட்டை அல்லது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள கீழ்க்காணும் 11 அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம். ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.
11 ஆவணங்கள் எவை
மேலும், ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய -மாநில அரசு, மத்திய- மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், பாராளுமன்ற-சட்டமன்ற -சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை போன்றவைகளாகும். எனவே, நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்களில் வாக்குப்பதிவின்போது ஆள் மாறாட்டங்களைத் தவிர்க்க மேற்காணும் அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம்." என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.