ஆபிசுக்குத் தான் லெட்டர் வந்தது! அவர் வீட்டுக்கு இல்லையே! களத்தில் இறங்கிய ஓபிஎஸ் டீம்! பரபர மூவ்..!
சென்னை : தேர்தல் ஆணையத்தின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஓபிஎஸ் தரப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஆதரவாளர்களுடன் நடந்த ஆலோசனைக்குப் பிறகு ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி எந்த அறிக்கை வெளியிட்டாலும், ஏட்டிக்குப் போட்டியாக தானும் ஒரு அறிக்கையோ அல்லது அறிவிப்போ வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் ஓபிஎஸ்.
எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கம் என அதிரடி காட்டி வரும் ஓ.பன்னீர்செல்வம் தற்போது தேர்தல் ஆணையம் நீதிமன்ற வழக்கு என அடுத்தடுத்த சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

தேர்தல் ஆணையம்
இந்நிலையில் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்குபெற இந்தியா முழுவதிலும் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

இபிஎஸ்க்கு அழைப்பு
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்ற எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் தற்போது வரை ஓபிஎஸ் தரப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று செய்திகள் வெளியான நிலையில், தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன், இன்பதுரை ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.

ஓபிஎஸ் அறிவிப்பு
இதனிடையே தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க போவதாக ஒ.பன்னீர் செல்வமும் அறிவித்துள்ளார். அவரது தரப்பில் கோவை செல்வராஜ் கூட்டத்தில் பங்கேற்பார் என்று தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதம் குறித்து தனது ஆதரவாளர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் இந்த முடிவினை எடுத்துள்ளார். இது தொடர்பாக அவரது தரப்பில் ஆதரவாளர்களுடன் பேசிய போது சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
Recommended Video

பின்னணி என்ன?
அதாவது எடப்பாடி பழனிச்சாமி என்றோ அல்லது அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்றோ, அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பவில்லை. பொதுவாக அதிமுக அலுவலகத்திற்கே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒருங்கிணைப்பாளராக தானே தொடர்வதாக ஏற்கனவே தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக மீண்டும் ஒரு கடிதம் அனுப்பி உள்ள நிலையில் தான் தற்போது கூட்டத்திலும் கலந்து கொள்வதாக ஓ.பன்னீர்செல்வம் முடிவெடுத்து இருக்கிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications