இவங்க வேற ரொம்ப டார்ச்சர் பன்றாங்க.. கடுப்பான எடப்பாடி! முக்குலத்து ‘முன்னாள்’களுக்கு பறந்த உத்தரவு!
சென்னை : அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பான ரேசில் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வரும் நிலையில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அவருக்கு ஆதரவான மாவட்டங்களில் இருந்து ஒட்டுமொத்த நிர்வாகிகளையும் , தொண்டர்களையும் தங்கள் தரப்புக்கு இழுக்க திட்டமிட்டு, இதற்காக முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த மூத்த முன்னாள் அமைச்சர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து அதற்குப் பிறகு அதிமுக தொட்ட அனைத்திலும் தோல்விகளை சந்தித்து வந்திருக்கிறது என்று கூறலாம். அந்த அளவுக்கு அனைத்து தேர்தல்களிலும் மண்ணை கவ்விய அதிமுக தற்போது உட்கட்சி விவகாரங்களில் சிக்கி தவித்து வருகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பதவியில் இருந்து தூக்கி அடிக்கப்பட்ட நிலையில் சசிகலா முதல்வராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் சிறை செல்ல நேர்ந்ததால் அடித்தது அதிர்ஷ்டம் எடப்பாடி பழனிச்சாமிக்கு.
பொதுக்குழு உறுப்பினர்கள் என் பக்கம்.. தேர்தல் ஆணையத்துக்கு எடப்பாடி பதில் மனு.. அதிமுகவில் பரபர!
அதிமுகவுக்கு சிக்கல்
கூவத்தூர் கலவரங்களுக்கு மத்தியில் சட்டமன்றத்தில் தன்னை முதல்வராக நிரூபித்த எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து நான்கு ஆண்டுகள் ஆட்சியை வெற்றிகரமாக நடத்தி வந்தார். ஆனாலும் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இணைத்துக் கொண்ட பிறகு அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதற்காக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது. இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றுக்கொண்டார். ஆனாலும் கைகள் கோர்த்தாலும் மனங்கள் கோர்க்கவில்லை என்பது தான் உண்மை. வேட்பாளர் அறிவிப்பு, கூட்டணி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் இருவருக்கும் தொடர்ந்து மனக்கசப்பு ஏற்பட்டு வந்ததால் ஒற்றைத் தலைமையாக தானே இருக்க வேண்டும் என நினைத்தார்.
ரகசிய பேச்சு வார்த்தை
இதற்காக சிறிது சிறிதாக கட்சியில் தனது ஆதரவு வட்டத்தை பெருக்கி கொண்ட எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு அதனை தனது தீவிர ஆதரவாளரான ஜெயக்குமார் மூலம் போட்டு உடைத்தார் அதன்பிறகு நடந்து வரும் கலவரங்கள் அனைத்தும் தமிழகம் அறிந்ததே. கிட்டத்தட்ட கட்சியை 95% தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, தற்போது ஓபிஎஸ் தனிமைப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே நாம் கூறியது போல ஓபிஎஸ் தரப்பில் இருக்கும் மாவட்டச் செயலாளர்களையும் பொதுக்குழு உறுப்பினர்களையும் இழுக்க டெல்டா மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் களமிறக்கப்பட்டனர். அவர்கள் தற்போது ஓபிஎஸ் அணியில் இருக்கும் மாவட்ட செயலாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் இரகசியமாக தொடர்புகொண்டு எடப்பாடி தான் கட்சியின் எதிர்காலம் எனவே அவர் பின் திரள வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
எடப்பாடிக்கு அதிர்ச்சி
அதற்கான வெற்றியும் ஓரளவு கிடைத்திருக்கிறது. பல பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி அணிக்கு தாவிய நிலையில் மாவட்ட செயலாளர்கள் மட்டும் மவுனம் காத்து வருகின்றனர். ஆனாலும் தென் மாவட்டங்களில் அதாவது தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓபிஎஸ்-க்கு ஆதரவு தொண்டர்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கிறது. எடப்பாடி மீதான கோபத்தை வெளிக்காட்டும் வகையில் நாளுக்கு நாள் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது. அதில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பை கடுமையாக விமர்சித்து வருவது எடப்பாடிக்கு சற்றே அதிர்ச்சி அளித்துள்ளது.
ரகசிய திட்டம்
நிர்வாகிகள் தங்கள் பக்கம் இருந்தாலும் தொண்டர்களை தனது தரப்புக்கு இழுக்க திட்டமிட்டு வருகிறார் இபிஎஸ், இதன் காரணமாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் யார் என்பதை கணக்கெடுத்து பட்டியலை தனக்கு அனுப்புமாறு மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இந்தப் பட்டியலை தயாரிக்கும் வேலைகளில் மாவட்ட செயலாளர்கள் மும்முறமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை அழைத்து சமாதானம் பேசி நேரடியாக தன்னை சந்தித்து ஆதரவளிக்க வேண்டும் என்ற திட்டத்தோடு காத்திருக்கிறது எடப்பாடி தரப்பு.