எடப்பாடியின் “ஆபரேசன் சவுத்”.. ஓபிஎஸ் கோட்டைக்குள் நுழைந்த ஈபிஎஸ் -பொதுச்செயலாளராக இது முதல்முறை
சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்றதில் இருந்து முதல்முறையாக தென்மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக விவாதிக்க கடந்த ஜூன் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் கூட்டப்பட்டது. அப்போது ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் இடையே வெடித்த மோதல் இன்று வரை தொடர்ந்து வருகிறது.
அதன் விளைவாகவே முதல் பொதுக்குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டு ஜூலை 11ம் தேதி இரண்டாவது பொதுக்குழு கூட்டத்தை கூட்டி தன்னை பொதுச்செயலாளராக மகுடம் சூட்டிக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி ஃபிக்ஸ் செய்த டார்கெட்.. தேர்தலுக்கு முன்பாக.. 'தலைக்கு 500’.. மிரண்டு போன மா.செக்கள்!
மாறி மாறி தீர்ப்பு
ஜூன் 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லாது என உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவால் எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி பறிபோனது. ஆனால், 2 வாரம் முன் எடப்பாடி பழனிசாமி அமர்வு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற இருவர் அமர்வு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. இதனால் மீண்டும் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆகியுள்ளார்.
மேல்முறையீடு
இந்த நிலையில் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பால் உற்சாகத்தில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தற்போது சோர்வடைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எடப்பாடி பயணம்
மறுபக்கம் எடப்பாடி பழனிசாமியோ வேகமாக காய்களை நகர்த்தி வருகிறார். இன்று அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி தென்மாவட்டங்களுக்கு செல்கிறார். சென்னையிலிருந்து காலை விமானம் மூலமாக புறப்பட்ட பழனிசாமிக்கு மதுரை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சிவகாசி, மதுரை
இதனை தொடர்ந்து கார் மூலமாக விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி, அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதையடுத்து மாலை 4 மணிக்கு மதுரைக்கு அவர் புறப்படுகிறார். 5 மணியளவில் மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகிறார்.
பெரும் கூட்டம்
எடப்பாடி பழனிசாமியின் எதிர்கோஷ்டியான ஓ.பன்னீர்செல்வம் தென் மாவட்டமான தேனியை சேர்ந்தவர். எனவே தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமியை விட தங்களுக்கு பலம் அதிகம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கூறி வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மாபெரும் கூட்டத்தை திரட்ட எடப்பாடி பழனிசாமியின் தென்மாவட்ட ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.