உடலை தைத்த மழைநீர் வடிகால் கம்பி.. பறிபோன பத்திரிகையாளர் உயிர்.. இதான் 95% பணியா? எடப்பாடி கண்டனம்
சென்னை: மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து பத்திரிகையாளர் உயிரிழந்த நிலையில், தமிழ்நாடு அரசு முடிவடையாத திட்டங்களில் இனி ஒரு உயிர்பலி கூட ஏற்படாமல் தடுக்க வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
பருவமழை காலத்தில் சென்னையில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க மாநகராட்சி சார்பாக மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு செய்யப்படாததால் பள்ளங்கள் காணப்படுகின்றன.
அதேபோல் சென்னை ஜாஃபர் கான் பேட்டையில் உள்ள காசி திரையரங்கம் அருகே மழைநீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்றிரவு தனியார் தொலைக்காட்சி பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் என்பவர் பணி முடித்து அந்த வழியாக வீடு திரும்பியுள்ளார்.

பத்திரிகையாளர் மரணம்
அப்போது ஆபத்தான முறையில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் அவர் விழுந்தார். அந்த பள்ளத்தில் நீட்டிக்கொண்டு இருந்த கட்டுமான கம்பிகள் முத்துகிருஷ்ணனின் உடலை துளைத்தன. படுகாயமடைந்த அவர் மீட்கப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

எடப்பாடி பழனிசாமி
இதற்கிடையே பத்திரிகையாளர் முத்துக்கிருஷ்ணன் உயிரிழந்தது குறித்து எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். அதில், "சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்ததில் தனியார் தொலைக்காட்சி பணியாளர் திரு.முத்துக்கிருஷ்ணன் உயிரிழந்த செய்தி மிகுந்த மனவேதனையை தருகிறது.

அரசுக்கு கண்டனம்
பருவமழை துவங்க இருக்கும் சூழ்நிலையில் இன்னும் முன்னேற்பாட்டு பணிகள் கூட முழுமையாக முடியாத அவல நிலையில் 95% பணிகள் முடிவடைந்து விட்டதாக பொய் பரப்புரை செய்து வருவதும், மக்களின் உயிருக்கு மதிப்பளிக்காமல் அலட்சியத்தோடு இந்த விடியா அரசும், மாநகராட்சி நிர்வாகமும் செயல்பட்டு வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது.

நிவாரணம்
மக்களை ஏமாற்றும் விளம்பர அரசியலை விடுத்து உயிரைக் காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, முடிவடையாத இத்திட்டங்களால் இனி ஒரு உயிர் பலி கூட ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்த செய்தியாளரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ருபாய் நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்றும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications