எடப்பாடி ஃபிக்ஸ் செய்த டார்கெட்.. தேர்தலுக்கு முன்பாக.. ‘தலைக்கு 500’.. மிரண்டு போன மா.செக்கள்!
சென்னை : அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை விரைவில் நடத்த எடப்பாடி பழனிசாமி தயாராகி வருகிறாராம். இதையொட்டி, சென்னையைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களுக்கு அதிரடி ஆர்டரையும் பிறப்பித்துள்ளாராம் ஈபிஎஸ்.
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக, கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
அப்போது அதிமுக அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நுழைந்தபோது ஏற்பட்ட வன்முறையில், அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்களால் தூக்கிச் செல்லப்பட்டதாக புகார் எழுந்தது.
தற்போது அந்த ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் இருந்து 113 ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்

முடிவுக்காக காத்திருப்பு
அதிமுக தலைமை அலுவலக வன்முறை தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் செய்த மேல்முறையீட்டு மனு வரும் வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. அதிமுக விவகாரத்தில், உச்ச நீதிமன்றம், இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் ஆகியவை என்ன முடிவு எடுக்கப் போகின்றன என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

பிரமாண பத்திரம்
அதிமுக தலைமை அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி வசம் இருக்கும் நிலையில், பொதுச் செயலாளரான பிறகு இரண்டு முறை தலைமைக் கழகத்திற்கு சென்று அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசித்துள்ளார் ஈபிஎஸ். இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு, எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக ஏற்கிறோம் என பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்து அடங்கிய பிரமாணப் பத்திரங்களை, தேர்தல் ஆணையத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்பு சமர்ப்பித்தது.

ஆலோசித்த எடப்பாடி
செப். 26ஆம் தேதி அதிமுக அலுவலகம் சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அலுவலகத்திற்கு நுழைந்த ஈபிஎஸ், வன்முறையால் சேதமடைந்த அறைகளை மறு சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதைப் பார்வையிட்டார். தொடர்ந்து அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி.

ஷாக் ஆன மா.செக்கள்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையின்போது சில முக்கியமான கட்டளைகளைப் பிறப்பித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதனைக் கேட்டு சென்னை பகுதி மா.செக்கள் விழிபிதுங்கிப் போயிருக்கிறார்களாம். தலைநகர் பகுதியில் பொறுப்பு வகிப்பதால், வரிசையாக கூட்டங்களுக்கு செலவு செய்வதே பெரும் தொகையாக இருக்கிறது என தலையைச் சொறிகிறார்களாம்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை அக்டோபர் மாதத்தில் நடத்தி முடித்து அறிவிக்க திட்டமிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, அதற்கு முன்னதாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளாராம். தேர்தல், பொதுச் செயலாளர் அறிவிப்பு ஆகியவற்றை மேற்கொள்வது தொடர்பான முக்கிய முடிவுகள் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறதாம்.

தலைக்கு 500 பேர்
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அதிமுக தலைமை அலுவலகம் அல்லது சென்னையை ஒட்டிய பகுதிகளில் நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என ஈபிஎஸ் அறிவுறுத்தியுள்ளாராம். ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் தலைக்கு 500 பேரை திரட்டி கூட்டத்தை அமர்க்களப்படுத்த வேண்டும் என்றும் ஈபிஎஸ் ஆர்டர் போட்டுள்ளாராம்.












Click it and Unblock the Notifications