3 பாயிண்ட் தான் செல்லும்.. “எடப்பாடிக்கு சாதகமான முடிவு?” - உற்சாகத்தில் ஈபிஎஸ் டீம்.. அப்போ ஓபிஎஸ்?
சென்னை : ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தின் விளைவு எப்படி இருக்கும் என அக்குவேறு ஆணிவேறாக இன்று சட்ட வல்லுநர்களுடனும், முக்கிய நிர்வாகிகள் உடனும் ஆலோசித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
Recommended Video
இந்த ஆலோசனையில் அனைவருமே, ஓபிஎஸ்ஸின் இந்த முயற்சியால் அவருக்கு எந்த பலனும் கிடைக்காது, தேர்தல் ஆணையம் மனதில் வைக்கும் 3 விஷயங்களில் நாம் தான் பலத்தோடு இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.
இதைக் கேட்டு உற்சாகமான எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ஸின் வியூகத்திற்கு பதிலடியாக, தேர்தல் ஆணையத்திற்கு தங்கள் தரப்பு அறிக்கையை வலுவான வாதங்களோடு தயார் செய்ய உத்தரவிட்டுள்ளாராம்.
சூரசம்ஹாரம் ஸ்டார்ட்..கையில் வேலுடன் எடப்பாடி பழனிச்சாமி போஸ்டர்.. ஒட்டப்பட்ட வேகத்தில் கிழிப்பு
அதிமுக குழப்ப நிலை
அதிமுகவில் ஒற்றைத் தலைமையை முன்வைத்து தற்போது நிகழ்ந்து வரும் குழப்பமான சூழல் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விரிவான அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது முதல் தற்போது உள்ள நிலை நிலை வரை ஒவ்வொன்றாக டைம்லைன் போல வரிசையாக குறிப்பிட்டு, தனக்கு நியாயம் வேண்டும் எனக் கேட்டுள்ளார் ஓபிஎஸ்.
ஓபிஎஸ் அறிக்கை
அதிமுக சிக்கல் குறித்து ஓபிஎஸ் எழுதிய கடிதத்தில், உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, பொதுக்குழுவில் உறுப்பினர்களாக இல்லாதவர்களும் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டதாகவும் அந்த கூட்டத்தில் தன் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டதாகவும் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். கட்சியின் பொருளாளர் என்ற முறையில், பொதுக்குழுக் கூட்டத்தில் கணக்குகளைத் தாக்கல் செய்யவும் தான் அனுமதிக்கப்படவில்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 11ஆம் தேதி பொதுக்குழு நடத்த ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஓ.பி.எஸ் குறிப்பிட்டுள்ளார்.
எடப்பாடி ஆலோசனை
ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டி ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமிக்கு முடிசூட்டியே தீருவது என ஈபிஎஸ் ஆதரவாளர்கள் உறுதியாக இருந்து வரும் நிலையில், ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய அறிக்கை தொடர்பாக இன்று எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். ஓபிஎஸ்ஸின் கடிதத்தால் திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்துவதில் சிக்கல் ஏற்படுமா என்பது குறித்து தனது ஆதரவாளர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களின் கருத்துகளைக் கேட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
தேர்தல் கமிஷனுக்கு விளக்கம்
இதையடுத்து, ஓபிஎஸ்ஸின் அறிக்கைக்கு எதிராக பதில் அறிக்கையை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்துள்ளார். அ.தி.மு.கவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு போதுமான ஆதரவு இல்லை என்றும், பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என பெரும்பான்மையானோர் தன் பக்கமே உள்ளனர் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு விரிவான விளக்கத்துடன் பதில் அளிக்க ஈபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளது. மேலும், பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்துப் பெற்ற கடிதங்களையும் இணைத்து அனுப்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மைலேஜ் கொடுக்குமா?
எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனையில், தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் அனுப்பிய கடிதத்தால் அவருக்கு ஏதும் மைலேஜ் கிடைக்குமா என்பது பற்றித்தான் அதிகமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. அப்போது சட்ட வல்லுநர்கள் சொன்னது, உட்கட்சியின் நிர்வாக முடிவுகளில் தேர்தல் ஆணையம் தலையிடாது, யாருக்கு கட்சியின் அதிகாரம் உள்ளது என்பதை முடிவெடுக்கும் நிலை தேர்தல் ஆணையத்துக்கு வந்தால் மக்கள் பிரதிநிதிகள், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு அதிகமோ அவர்களுக்குத்தான் சாதகமான முடிவைச் சொல்லும் எனத் தெரிவித்துள்ளனர்.
3 விஷயங்கள்
பொதுவாக, கட்சியின் அதிகாரம் தொடர்பான விவகாரங்களில் 3 விஷயங்களைத்தான் தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ளும். மற்றபடி ஒரு தலைவர் அவமதிக்கப்படுகிறார் என்பதற்காகவெல்லாம் தேர்தல் ஆணையம் தலையிட்டு ஆதரவு வழங்காது. கட்சியின் சட்ட விதிகளின் படி யாருக்கு உரிமை? யாரிடம் எம்.எல்.ஏ, எம்.பிக்கள் அதிகம் இருக்கிறார்கள்? பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் பெரும்பான்மையானோர் யார் பக்கம் இருக்கிறார்கள் ஆகிய 3 விஷயங்களைத்தான் தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ளும் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
சட்ட விதிகள்
கட்சியின் சட்ட விதிகள் குழப்பமானவை, இரு தரப்புமே தங்களுக்கு சாதகமான பிரிவுகளை வைத்து வாதாடும் என்பது தேர்தல் ஆணையத்துக்கும் தெரியும். அதுவும் அதிமுகவில் பல்வேறு திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அதை வைத்து தேர்தல் ஆணையத்தால் முடிவுக்கு வரவே முடியாது. அதுபோக, உட்கட்சி விதிகளை வைத்து கட்சியின் அதிகாரம் எந்த தரப்புக்கும் வழங்கப்பட்ட முன்னுதாரணங்களே இதுவரை கிடையாது. இதனால் ஓபிஎஸ்ஸின் முறையீடு அங்கு பலிக்காது என சட்ட வல்லுநர்கள் கூறியதால் ஈபிஎஸ் தெம்பாக இருக்கிறாராம்.
கட்சியில் பலம்
அடுத்த இரண்டு பாயிண்டுகள் எடப்பாடி பழனிசாமிக்கு முழு பலம் அளிக்கக்கூடியவையாக இருக்கின்றன. அதிமுகவைப் பொறுத்தவரை 66 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய மூன்று எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஓபிஎஸ் தரப்பில் இருக்கின்றனர். மற்ற எம்.எல்.ஏக்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி பக்கமே உள்ளனர். எம்.பிக்களை பொறுத்தவரை ஓ.பி.ரவீந்திரநாத் குமார், ஆர்.தர்மர் ஆகிய இருவர் ஓபிஎஸ் பக்கம் இருக்கின்றனர். சி.வி.சண்முகம் உட்பட மற்ற 3 எம்.பிக்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருக்கின்றனர். அதேபோல, பொதுக்குழு உறுப்பினர்களும் 2,400க்கும் அதிகமானோர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாகவே உள்ளனர்.
ஓபிஎஸ்ஸுக்கு ஒரு வெற்றி கூட
இதனால், நமக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் எதுவும் நடந்துவிடாது என்ற நம்பிக்கையில் எடப்பாடி தரப்பு உற்சாகமாக இருக்கிறதாம். எனினும், ஓபிஎஸ்ஸின் வியூகங்கள் என்ன என அறிந்து கொள்ள வேண்டும் என்றும் தனது ஆதரவாளர்களிடம் பேசியுள்ளாராம். ஓபிஎஸ்ஸுக்கு ஒரு வெற்றி கூட கிடைக்காத வரை தான் நமது பலம், அதனால் எங்குமே அவருக்கு சாதகமான முடிவுகள் கிடைத்து விடக் கூடாது, அதில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தனக்கு நெருக்கமானவர்களிடம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறாராம்.