சரிப்பட்டு வராது! ‘ஜெ’ அஸ்திரத்தை கையிலெடுத்த எடப்பாடி! ஆளும் கட்சிக்கு டஃப் கொடுக்க எடுத்த முடிவு.!
சென்னை : ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி கவுன்சிலர்களை செயல்பட விடாமல் பொய் வழக்கு போடும் நிலையை, இந்த திமுக அரசு உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," உள்ளாட்சியில் நல்லாட்சி என்று மாய்மாலம் மற்றும் செப்படி வித்தை காட்டும் இந்த விடியா அரசு, உள்ளாட்சிகளின் மாண்பை சீர்குலைக்கும் வகையிலும், உள்ளாட்சி ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கும் வகையிலும் செயல்பட்டு வருவது வெட்கக்கேடானது.
உள்ளாட்சி அமைப்புகளில் சட்டப்பூர்வமாக, நேர்மையாக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றி வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும் செயல்படவிடாமல் தனது ஆக்டோபஸ் கரங்களால் நசுக்கும் வேலையை ஒருசில அதிகாரிகளின் துணையுடன் அரசு மேற்கொண்டு வருகிறது.

அதிமுக கவுன்சிலர்கள்
இந்த ஆட்சியில், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் எந்தெந்த அமைப்புகளில் அதிகமாக வெற்றி பெற்றுள்ளார்களோ, அங்கெல்லாம் அவர்களை நகர மன்றத் தலைவர்களாகவும், துணைத் தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்க முடியாதபடி, ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி இடையூறு செய்தார்கள். குறிப்பாக, கோவை மாவட்டத்தில் வெள்ளலூர், சேலம் மாவட்டத்தில் வனவாசி போன்ற பல இடங்களில் ஆளும் கட்சியினரின் அராஜகத்தை முறியடிக்க உயர்நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறி ஜனநாயகத்தை நிலைநாட்டியது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

உள்ளாட்சி அமைப்புகள்
அப்படி நிர்மாணிக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளையும், சீர்குலைக்கும் முயற்சியில் தொடர்ந்து இந்த அரசு ஈடுபட்டு வருவது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள்; சட்டத்தின் ஆட்சியை தமிழகத்தில் நிலை நிறுத்தியவர்கள்; 2019-ஆம் ஆண்டு கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தியவர்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் அரசின் நேர்மையைப் போல், இந்த அரசும் செயல்படும் என்று எதிர்பார்ப்பது வீண் என மக்கள் கருதுகிறார்கள்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
நீங்கள் உள்ளாட்சியில் நல்லாட்சி தருகிறீர்களோ, இல்லையோ, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சியினரை செயல்பட விடாமல் தடுத்தால், அதற்கான விலையை விரைவில் தர நேரிடும் என்று இந்த ஆட்சியாளர்களை எச்சரிக்கிறேன். மணப்பாறை நகராட்சி விவகாரத்தில் இனியும் அடாத செயல்களில் ஆளும் கட்சியினரும், அதிகாரிகளும் ஈடுபட்டால், அவர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கிறேன்.

அதிமுக போராட்டம்
மேலும், உள்ளாட்சி அமைப்புகளை சீர்குலைக்கும் இந்த அரசின் தாந்தோன்றித்தனமான போக்கைக் கண்டித்தும், மக்கள் பணியாற்றும் கழக நிர்வாகிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தியும், மக்கள் ஆதரவோடு ஜனநாயக முறையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications