கட்டுக்கட்டாக கடிதங்கள்.. ஓபிஎஸ்ஸின் ‘டைம்லைன்’ புகாரை .. ஒரே அடியில் நொறுக்கத் தயாராகும் எடப்பாடி!
சென்னை : ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்கு அனுப்பிய அறிக்கைக்கு எதிராக பதில் அறிக்கையை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டுள்ளனர்.
Recommended Video
ஓ.பி.எஸ்ஸின் குற்றச்சாட்டுகளுக்கு விரிவான விளக்கத்துடன் தேர்தல் ஆணையத்துக்கு ஓரிரு நாட்களுக்குள் பதில் அளிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு தயாராகி வருகிறது.
மொத்தமுள்ள 2665 பொதுக்குழு உறுப்பினர்களில் தங்களுக்கு சுமார் 2500 பேரின் ஆதரவு இருப்பதாக, பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்துப் பெற்ற கடிதத்தையும் இணைத்து அனுப்ப உள்ளதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.
இப்போ வேணாம்ங்க.. சிக்கல்.. நாமளே பாயிண்ட் கொடுக்கலாமா?- எடப்பாடி பின்வாங்கியதற்கு பின்னணி இதுதானா?
ஒற்றைத் தலைமை
அதிமுகவில் கிளம்பியுள்ள ஒற்றைத் தலைமை முழக்கம் கட்சியையே இரண்டாக்கி விட்டது. எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமை அமைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இரட்டைத் தலைமையே நீடிக்க வேண்டும் எனக் கூறி வருகிறார். பொதுக்குழு உறுப்பினர்கள் பெரும்பான்மையானோர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள நிலையில் வரும் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமைக்கு பட்டாபிஷேகம் நடத்த ஈபிஎஸ் தரப்பினர் முழு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக ஓபிஎஸ்ஸின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நேற்று தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தையும் நடத்தி முடித்தனர்.
ஓபிஎஸ்
இந்நிலையில், அதிமுகவில் நிகழ்ந்து வரும் தற்போதைய குழப்பமான சூழல் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விரிவான அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்று கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது தொடங்கி நேற்று வரை நடந்து வரும் நிகழ்வுகளைப் பட்டியலிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
திட்டமிட்டு பிரச்சனை
உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, பொதுக்குழுவில் உறுப்பினர்களாக இல்லாதவர்களும் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டதாகவும் அந்த கூட்டத்தில் தன் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கட்சியின் பொருளாளர் என்ற முறையில், பொதுக்குழுக் கூட்டத்தில் கணக்குகளைத் தாக்கல் செய்யவும் தான் அனுமதிப்படவில்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 11ஆம் தேதி பொதுக்குழு நடத்த தன்னிச்சையாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதுவரை நடந்த நிகழ்வுகளை டைம்லைனாக குறிப்பிட்டுள்ளார்.
எடப்பாடி தரப்பு
ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டி ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமிக்கு முடிசூட்டியே தீருவது என ஈபிஎஸ் ஆதரவாளர்கள் உறுதியாக இருந்து வரும் நிலையில், ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்திற்கு அளித்த அறிக்கையால் ஈபிஎஸ் தரப்பினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்துவதில் சிக்கல் ஏற்படுமா என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
பதில் அறிக்கை?
இதையடுத்து, ஓபிஎஸ்ஸின் அறிக்கைக்கு எதிராக பதில் அறிக்கையை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அ.தி.மு.கவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு போதுமான ஆதரவு இல்லை என்றும், பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களில் கிட்டத்தட்ட அனைவருமே எடப்பாடி பழனிசாமி பக்கமே உள்ளனர் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு விரிவான விளக்கத்துடன் பதில் அளிக்க ஈபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளது.
விதி மீறல் இல்லை
இதற்காக சட்ட நிபுணர்களுடன் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனராம். கட்சியின் சட்ட விதிகளின்படியே நடந்து கொண்டு வருவதாகவும், பொதுக்குழு அறிவிப்பில் எந்த விதி மீறலும் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு தங்கள் பதில் கடிதத்தில் தேர்தல் ஆணையத்திற்கு உறுதிபடத் தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
முழு ஆதரவு
பொதுக்குழுவே அதிமுகவில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பு என்றும், பொதுக்குழு உறுப்பினர்கள் எடுக்கும் முடிவே கட்சியின் தலைமையை தீர்மானிக்கும் என்றும் தங்கள் பதிலில் ஈபிஎஸ் தரப்பு தெரிவிக்க உள்ளதாம். அதன்படி பார்த்தால் மொத்தமுள்ள 2665 பொதுக்குழு உறுப்பினர்களில் தங்களுக்கு சுமார் 2500 பேரின் ஆதரவு இருப்பதாகவும் கூறி, பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்துப் பெற்ற கடிதத்தையும் இணைத்து அனுப்ப உள்ளதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.