அவங்களை வச்சே..? ஆஹா.. இது வேற லெவல் வியூகம் - எடப்பாடியின் இந்த அட்டாக்கை தாங்குவாரா ஓபிஎஸ்?
சென்னை : ஓ.பன்னீர்செல்வம் சார்ந்திருக்கும் சமூகம் தென் மாவட்டங்களில் மிகப்பெரிய வாக்கு வங்கியாக இருப்பதால், அந்தச் சமூகத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை வைத்து எடப்பாடி பழனிசாமி ஒரு வியூகத்தை வகுத்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் தனது சமூக ஆதரவை நம்பியே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நிற்பதால், அதில் ஓட்டையைப் போடத் திட்டமிட்டுள்ளது எடப்பாடி பழனிசாமி தரப்பு.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய அதிமுக புள்ளிகளை ஓபிஎஸ்ஸுக்கு எதிராக முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும், இந்த அட்டாக்கில் ஓபிஎஸ்ஸுக்கு அதிக சேதாரம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
ஹோண்டா சிட்டி காரில் தனியாக சென்ற ஓ.பன்னீர்செல்வம்! யாருடன் ரகசிய சந்திப்பு? பரபரப்பான அரைமணி நேரம்!
விடாப்பிடியாக மோதல்
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே ஒற்றைத் தலைமை கோரிக்கையால் மோதல் எழுந்து அந்த விவகாரம் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. அதிமுகவின் ஒற்றைத் தலைமையைக் கைப்பற்ற ஈ.பி.எஸ் தரப்பும், இரட்டைத் தலைமையாகவே இருக்கவேண்டும், தனது இடம் பறிபோகக் கூடாது என ஓ.பி.எஸ்ஸும் முட்டி மோதி வருகின்றனர். ஒருபக்கம், தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என இரு தரப்பினரும் சட்டப்பூர்வமாக அணுகி வருகின்றனர்.
பல திட்டங்கள்
இன்னொரு புறம், இரு தரப்பினருமே, கட்சிக்குள் தங்களது ஆதரவை அதிகப்படுத்திக் கொள்ளும் நோக்கில் ரகசிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றனர். இதில் அதிகாரம், சாதி என பல வியூகங்கள் கைகொடுத்து வருகின்றன. அதிமுகவில் தனது இடத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில் பாஜக டெல்லி தலைமையின் ஆதரவு கேட்டு டெல்லி சென்றார் ஓபிஎஸ். அங்கு நடைபெற்ற ஆலோசனையின்படி தனக்கு ஆதரவு வேண்டி சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டம் வகுத்து வருகிறார்.
அதிருப்தியாளர்கள் உடன் பேச்சு
ஓ.பன்னீர்செல்வம் தற்போது எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்களுடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். தனக்கு ஆதரவாளர்கள் குறைவாக இருப்பதால், சாதி ரீதியாக பெரும் திரளைக் கூட்டவும் ஓ.பி.எஸ் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் சமூகத்தைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் இதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சாதிய ரீதியாக
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து முக்குலத்தோர் சமுதாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக பல இடங்களிலும் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாக இருக்கும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்தும் அந்த சாதி சங்கங்களைச் சேர்ந்தவர்கள் போஸ்டர்களை அச்சடித்து ஒட்டி வருகின்றனர். இதன்மூலம், ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையேயான அதிகார யுத்தம் சாதி ரீதியிலான மோதலாகவும் உருமாறியுள்ளது.
செக் வைக்கும் உத்தி
ஒ.பன்னீர்செல்வம் அணியின் திட்டங்கள் ஒவ்வொன்றையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், பதிலடி கொடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியின் கொங்கு மண்டல லாபியை சுட்டிக்காட்டி ஓபிஎஸ் தரப்பு தங்கள் பக்கம், சாதிய ரீதியாக தொண்டர்கள், நிர்வாகிகளை அணி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அதற்கும் செக் வைக்கும் உத்தியை கையில் எடுத்து வருகின்றனர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர்.
பலர் ஈபிஎஸ் பக்கம்
ஓ.பன்னீர்செல்வம் சார்ந்துள்ள முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த பலர் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் நிற்கின்றனர். அ.தி.மு.க-வுக்கு மிகப்பெரிய வாக்கு வங்கியாக இருக்கிறது அந்தச் சமூகம். அதிமுகவில் அந்த சமூகத்தைச் சேர்ந்த பலர் கோலோச்சி வருவதுதான் தென் மாவட்டங்களில் திமுகவின் ஒரு மைனஸ் பாயிண்டும் கூட. இந்நிலையில், அவர்களை வைத்தே ஓபிஎஸ்ஸின் முயற்சிகளை முறியடிக்கும் திட்டத்தைத் தீட்டியுள்ளது எடப்பாடி பழனிசாமி தரப்பு.
ரகசிய பேச்சு
முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா, திண்டுக்கல் சீனிவாசன், தச்சை கணேசராஜா, சிவகங்கை செந்தில்நாதன், ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர் உள்ளிட்டோரை ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக ரகசிய கேன்வாஸிங்கில் இறங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். சாதி சங்க நிர்வாகிகள் உடனும், கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்டோருடனும் பேசி ஓபிஎஸ் பக்கம் சென்று விடாதவாறு வைத்திருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதாம். எடப்பாடி பழனிசாமியின் இந்த அட்டாக்கில் இருந்து ஓபிஎஸ் தப்பிப்பாரா..? பார்க்கலாம்.