“இந்த விடியா அரசால் லாக்கப் மரணங்களை தடுக்கவே முடியாது” - கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி!
சென்னை : கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட விசாரணைக் கைதி ராஜசேகர் என்பவர் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுக ஆட்சியில் லாக்-அப் மரணங்கள் தொடர்கதையாகி வருவதை நாங்கள் பலமுறை சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கையும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.
மேலும், இந்த ஆட்சியில் லாக்கப் மரணங்களை தடுக்கவோ, காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவோ முடியாது என்பதை இச்சம்பவங்கள் நிரூபித்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விசாரணை கைதி மரணம் “திமுக ஆட்சியில் லாக்கப் டெத்- இன்று கொடுங்கையூர்.. நாளை?” பாய்ந்து வந்த எச்.ராஜா
கைது
சென்னையை ஒட்டிய செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் என்கிற அப்பு. இவருக்கு வயது 30. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட ராஜசேகர் என்ற அப்புவை நேற்று இரவு (ஜூன் 11) கொடுங்கையூர் போலீசார் திருவள்ளூரில் வைத்து கைது செய்துள்ளனர்.
உடல் நலக் குறைவால்
இன்று மதியம் மயக்கமடைந்த அப்புவை, கொடுங்கையூர் போலீசார் ராஜசேகரை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளனர். இதையடுத்து ராஜசேகரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்கிறது காவல்துறை தரப்பு.
நேரில் விசாரணை
கொடுங்கையூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒருவர் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வடக்கு காவல் கூடுதல் ஆணையர் அன்பு, மேற்கு இணை ஆணையர் ராஜேஸ்வரி மற்றும் புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர்.
மீண்டும் ஒரு லாக்கப் மரணம்
இந்நிலையில், இதுதொடர்பாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மீண்டும் ஒரு லாக்-அப் மரணம், சென்னை கொடுங்கையூரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ராஜசேகர் என்பவர் காவல் நிலையத்தில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை தருகிறது. இந்த ஆட்சியில் லாக்-அப் மரணங்கள் தொடர்கதையாகி வருவதை நாங்கள் பலமுறை சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கையும் இல்லை.
விடியா அரசு
இந்த ஆட்சியில் லாக்-அப் மரணங்களை தடுக்கவோ, காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவோ முடியாது என்பதை இச்சம்பவங்கள் நிரூபித்துவிட்ட நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விடியா அரசில் நடந்த லாக்கப் மரணங்கள் குறித்து சட்டப்படி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.