கணிக்க முடியாது.. வேண்டாம்! போதும் போதும் என்று முடிவு எடுத்த எடப்பாடி.. புட்டு புட்டு வைத்த புள்ளி
சென்னை: தன்னையும் ஓ பன்னீர்செல்வத்தையும் பாஜக சமமாக நடத்தியதை எடப்பாடி விரும்பவில்லை, அதனால்தான் அவர் பாஜகவிற்கு எதிராக திரும்பி உள்ளார் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கில் ஒரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் சார்பாக வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார். அதிமுக ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக செந்தில் முருகன் என்பவரை அவர்கள் தரப்பு களமிறக்கி உள்ளது. இன்னொரு பக்கம் ஈரோடு கிழக்கில் பாஜகவிற்கு காத்திருக்காமல் கே. எஸ் தென்னரசை எடப்பாடி பழனிசாமி தரப்பு தங்களின் அதிமுக அணி வேட்பளாரை அறிவித்து உள்ளது.
இதில் பாஜகவின் முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அண்ணாமலை அடுத்தடுத்து இது தொடர்பாக சந்திப்புகளை நடத்தி வருகிறார். இந்த நிலையில்தான் அதிமுக மோதல் தொடர்பாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ரவீந்திரன் துரைசாமி
அவர் அளித்த பேட்டியில், எடப்பாடி தரப்பு வேட்பாளர் தென்னரசு.. தொழிற்சங்க நபர். தொழிலாளர்களுடன் நெருக்கம் கொண்டவர். ஏற்கனவே இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்த நபர். அவர் கொங்கு வேளாள கவுண்டர். இன்னொரு பக்கம் ஓபிஎஸ் வேட்பாளர் ஒரு புது முகம். அவர் தொண்டர். அவர் அடிமட்டத்தில் இருந்து வந்துள்ளார். அவர் செங்குந்த முதலியார் பிரிவை சேர்ந்தவர். இரண்டு பேருமே தற்போது வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர். நாங்கள்தான் அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை என்று காட்டும் வகையில் இருவரும் இரண்டு பேருமே திமுக கூட்டணிக்கு எதிராக தங்கள் தரப்பு வேட்பாளரை நிறுத்தி உள்ளனர். ஆனால் இந்த தேர்தலே ஸ்டாலினை எதிர்க்க போகும் தலைவர் யார் என்பதை நிரூபித்து விடாது.

ஸ்டாலின்
2024தான் ஸ்டாலினை எதிர்க்க போகும் அதிமுகவின் தலை யார் என்பதை நிரூபிக்க போகிறது. இருந்தாலும் இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிமுகவில் யார் பெரிய ஆள் என்பதற்கான டீசர் போல இருக்கும். இந்த தேர்தல் ஒரு முன்னோட்டம் போல இருக்கும். எடப்பாடி போதும் போதும் என்று முடிவு எடுத்துவிட்டார். அதனால்தான் பணிமனை பேனரில் மோடி, அண்ணாமலை புகைப்படங்களை அவர் பயன்படுத்தவில்லை. தன்னையும் ஓ பன்னீர்செல்வத்தையும் சமமாக நடத்தியதை எடப்பாடி விரும்பவில்லை. குஜராத்திற்கு ஓ பன்னீர்செல்வம் அழைக்கப்பட்டது, மதுரையில் ஒன்றாக மோடியை சந்திக்க வைத்ததை எடப்பாடி விரும்பவில்லை. அதனால் இந்த முடிவை எடுத்துவிட்டார்.

எடப்பாடி தனியாக விருப்பம்
ஆனால் எடப்பாடிக்கு தனியாக பெரிய ஆதரவு இல்லை. அவருக்கு 15 சதவிகித வாக்கு வங்கிதான் இருக்கிறது. ஆனால் எடப்பாடி தன்னை பெரிய ஆளாக நினைக்கிறார். ஓ பன்னீர்செல்வம் உடன் இருந்த போதே எடப்படியால் பெரிய வெற்றியை பதிவு செய்ய முடியவில்லை. அப்படி இருக்கும் போது எடப்பாடி எப்படி தனியாக வெற்றியை பதிவு செய்யமுடியும். 2024 தேர்தலில் எடப்பாடியின் உண்மையான பலம் என்னவென்று தெரிந்துவிடும். ஓ பன்னீர்செல்வமும் தன்னை எடப்பாடிக்கு இணையானவர் என்று காட்டிக்கொள்கிறார். இருவரும் முன்பு முதல்வர்களாக இருந்தவர்கள்தான். இதில் முடிவு என்னவென்று 2024ல்தான் தெரியும்.

வாக்கு வங்கி
இரண்டு பேருக்குமே ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கி உள்ளது. எடப்பாடிக்கு கொங்கில் வாக்கு வங்கி உள்ளது. தெற்கில் எடப்பாடிக்கு வாக்கு வங்கி உள்ளது. 2026ல் முதல்வர் வேட்பாளர் ஆக வேண்டும் என்று எடப்பாடி - ஓபிஎஸ் இருவரும் மோதிக்கொண்டு இருக்கிறார்கள். ஜெயலலிதா - ஜானகி மோதல் போல இவர்கள் மோத போகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி எடுத்த முடிவை மாற்ற முடியாது. அவர் அணியில் அவர் எடுத்ததுதான் இறுதி முடிவு. ஓ பன்னீர்செல்வம் அணியிலும் அப்படித்தான். ஆனால் பாஜகவில் வேட்பாளரை நிறுத்த வேண்டுமா? வேண்டாமா? என்பதை பாஜகவின் மாநில தலைமை, டெல்லி தலைமை எல்லாம் சேர்ந்துதான் முடிவு எடுக்கும். எது நல்லதோ அந்த முடிவைதான் எடுப்பார்கள். பாஜக என்ன முடிவை எடுக்கும், வேட்பாளரை நிறுத்துமா, நிறுத்தாதா என்று கணிக்க முடியாது.












Click it and Unblock the Notifications