இன்று விதி 20 ரத்து.. நாளை நிரந்தரமாக ‘அவர்’ இடத்துக்கே.. காய் நகர்த்தும் எடப்பாடி பழனிசாமி!
சென்னை : இன்று இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, தேர்தல் நடத்தி பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார், பின்னர் நிரந்தர பொதுச்செயலாளராகவும் உருவெடுப்பார் எனப் பேசியுள்ளார் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.
ஜெயலலிதா வகித்த அதிமுக பொதுச் செயலாளர் பொறுப்புக்கு இனி யாரும் நியமிக்கப்பட மாட்டார்கள் என்ற விதியையே ரத்து செய்து அந்தப் பொறுப்புக்கு வந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
ஜெயலலிதாவுக்கு மதிப்பளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட விதியை ரத்து செய்தது தொண்டர்கள் மத்தியில் விவாதத்தைக் கிளப்பியிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச்செயலாளரும் ஆவார் என ஓ.எஸ்.மணியன் பேசியிருக்கிறார்.

இன்றைய பொதுக்குழுவில்
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களில் அடிப்படையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரட்டைத் தலைமை முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நிரந்தர பொதுச் செயலாளர்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வகித்த நிரந்தரப் பொதுச்செயலாளர் தொடர்பான விதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா வகித்த பொதுச் செயலாளர் பொறுப்புக்கு இனி யாரும் தேர்ந்தெடுக்கப்படவோ அல்லது நியமிக்கப்படவோ மாட்டார்கள் என்று ஓபிஎஸ்- ஈபிஎஸ் இணைந்து கொண்டு வந்த சட்ட விதி இன்று எடப்பாடி பழனிசாமிக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர்கள்
1972ல் அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆர், 1974 ஆம் ஆண்டு கட்சியின் உச்சபட்ச அதிகாரம் படைத்த பொதுச் செயலாளர் பதவியை உருவாக்கினார். 1977ஆம் ஆண்டு வரை அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவி வகித்த எம்.ஜி.ஆர் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் அந்தப் பதவியை ராஜிநாமா செய்தார். அதன்பின்னர் நெடுஞ்செழியன், ப.உ.சண்முகம், எஸ்.ராகவானந்தம் ஆகியோர் அதிமுகவின் பொதுச் செயலாளர்களாக இருந்தனர்.

ஜெயலலிதா வகித்த பதவி
எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு கட்சி இரண்டாக பிளவுபட்டு 1989ல் மீண்டும் ஒன்றுபட்ட அதிமுக உருவானபோது பொதுச் செயலாளராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார். அப்போது முதல் தனது மறைவு வரை 27 ஆண்டு காலம் அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்தார் ஜெயலலிதா. அவர் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் என்றே நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் அழைக்கப்பட்டு வந்தார்.

தலைமைப் பதவி
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், 2016ல் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அதையடுத்து, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்ற பின்னர், அதிமுக பொதுக்குழுவால், பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலா பதவிநீக்கம் செய்யப்பட்டார். அதன்பின்னர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டு, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமையின் கீழ் அதிமுக செயல்பட்டு வந்தது.

மீண்டும் பொ.செ பதவி
இந்நிலையில்தான், அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு பொதுச் செயலாளர் பதவி மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக துணைப் பொதுச் செயலாளர் பதவியும் உருவாக்கப்பட்டுள்ளது. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 4 மாதங்களில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட விதி 20 ரத்து
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கான அதிமுக சட்ட விதி எண் 20 ரத்து செய்யப்படுகிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் வரும் இடங்களில் எல்லாம் பொதுச் செயலாளர் என்று மாற்றம் செய்யப்படுகிறது. துணை ஒருங்கிணைப்பாளர் வரும் இடங்களில் எல்லாம் துணைப் பொதுச் செயலாளர் என்று மாற்றம் செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓ.எஸ்.மணியன் பேச்சு
முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்றைய பொதுக்குழுவில் தீர்மானங்களை வாசிக்கும்போது புரட்சித் தலைமகன் எடப்பாடியார் எனப் புதிய பட்டம் ஒன்றையும் எடப்பாடி பழனிசாமிக்கு சூட்டினார். மேலும், இப்போது இடைக்கால பொதுச் செயலாளராகியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, விரைவில் பொதுச் செயலாளராகவும், வருங்காலத்தில் நிரந்தர பொதுச்செயலாளராகவும் உருவெடுப்பார் என்றும் பேசியுள்ளார்.

மீண்டுமா?
ஜெயலலிதா வகித்த அதிமுக பொதுச் செயலாளர் பொறுப்புக்கு இனி யாரும் நியமிக்கப்பட மாட்டார்கள் என்ற விதியையே ரத்து செய்து அந்தப் பொறுப்புக்கு வந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதாவுக்கு மதிப்பளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட விதியை ரத்து செய்தது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச்செயலாளரும் ஆவார் என ஓ.எஸ்.மணியன் பேசியிருக்கிறார். ஜெயலலிதாவை விட அதிகாரம் படைத்த தலைவராக எடப்பாடி தன்னை முன்னிறுத்த விரும்புவதாக ஓபிஎஸ் தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications